கவியேறு வாணிதாசன் காவடிச் சிந்து
1.
வாணி தாசர்புகழ் பாடு - துள்ளி
யாடு - மகிழ்
வோடு - அவர்
வார்த்த தமிழ்க்கிலை ஈடு - நாம்
வளமேபெறும் திறமேபெற நலமேபெறும் மறமேபெற
வாழ்வெல்லாம் தொண்டினைச் கொண்டார் - நம்
தாழ்வெல்லாம் போக்கிடக் கண்டார்!
கேணி தரும்சுவை நீராய் - பழத்
தாராய் - கவி
யேறாய் - தமிழ்க்
காணி விளைத்தார்நற் சீராய் - மண்
கேடேஅறும்! பீடேவரும்! நாடேபுகழ் பேறேவரும்!
ஞானியாய்ச் சிந்தனை நெய்தார் - பூந்
தேனியாய்ப் பாட்டடை செய்தார்!
2.
வள்ளுவர் வாய்மறை யேற்று - பணி
யாற்று - அதைப்
போற்று - உடன்
வாடி ஓடும்வினைக் கூற்று - என்றும்
வண்ணம்பல தந்தகவி! எண்ணம்தனில் நின்றகவி
மண்வாழ வண்டமிழ் வார்த்தார் - தமிழ்ப்
பண்வாழ ஒண்டமிழ் சேர்த்தார்
தௌ்ளிய நன்னடை உண்டு - சுவை
கொண்டு - தினம்
கண்டு - மனம்
தேனுண்டு ஆடிடும் வண்டு - பூந்
தென்றல்தரும் மென்மைச்சுகம் அன்னைத்தமிழ்
அன்பைத்தரும்
தென்மொழி செல்வராய் வாழ்ந்தார் - நாளும்
பன்மொழி நூல்களை ஆய்ந்தார்!
3.
கொஞ்சும் இயற்கையைத் தீட்டித் - தேன்
கூட்டி - இசை
மீட்டி - புகழ்
கொண்டார் கொள்கைக்கொடி நாட்டி - இங்குக்
கோலத்தமிழ் காதற்றமிழ் ஞானத்தமிழ் மானத்தமிழ்
கொட்டியே நன்முர(சு) இட்டார் - பகை
வெட்டியே தீயிட்டுச் சுட்டார்!
விஞ்சும் எழில்நலம் பூட்டி - உணர்
வூட்டி - துயர்
ஓட்டி - நமை
வெல்லச் செய்யும்வழி காட்டி - துள்ளி
வெற்றிநடை கொட்டும்படை! கற்றதமிழ் பற்றும்புகழ்
வீரத்தை நாள்தோறும் மொழிந்தார் - கலை
ஈரத்தை நாள்தோறும் பொழிந்தார்!
4.
பாவேந்தர் நண்பராய் நின்று - பகை
வென்று - புகழ்
குன்று - வாழும்
பார்அவர் பாக்களைத் தின்று - தமிழ்ப்
பற்றேமிகும் சத்தேபெறும்! முத்தேயொளிர்
சித்தேபெறும்!
பண்பொளி வீசியே வாழ்ந்தார் - நாளும்
பண்ணொளிர் இன்பத்தில் ஆழ்ந்தார்!
நாவேந்தர் போற்றிடும் உள்ளம் - தமிழ்
இல்லம் - கவி
வெள்ளம் - அவர்
நாவினில் சந்தங்கள் துள்ளும் - நான்
நற்றேன்என உற்றேன்தமிழ்! பொற்கோவென நட்டேன்தமிழ்!
நற்றிறம் பெற்றிட வைத்தார் - என்னுள்
சொற்றிறம் மின்னிடத் தைத்தார்!
5.
பாடித் தொடுத்திட்ட நூல்கள் - மொழியின்
கால்கள் - அறிவின்
வேர்கள் - அவை
பாவலர் கையேந்தும் வேல்கள் - கொண்ட
பகையேஅறப் பயனேஉறப் புவியேநமைப் பணிந்தேதொழப்
பாங்குற நற்பணி புரிந்தார் - வண்ணப்
பூங்கொடி போல்மணம் செரிந்தார்!
நாடி நரம்புகள் புடைக்க - இருள்
துடைக்க - நலம்
கிடைக்க - பாரில்
நம்மினத் தொன்மையைப் படைக்க - இந்
நாட்டில்உள காட்டின்நரி ஓட்டும்படி மூட்டும்பறை
நாளெல்லாம் பாட்டுக் குழைத்தார் - தீட்டும்
தாளெல்லாம் செந்தேன் குழைத்தார்!
26.07.2015

