samedi 7 septembre 2024

யானைமுகன் வெண்பா

 


யானை முகத்தனை வேண்டுதல்!

 

முன்னே இருந்து முழுநலம் தந்துவக்கும்

பொன்னே! புதுத்தேனே! பூமணமே! - என்னே..யுன்

இன்னருள்! இங்கு..நீ என்னை மறந்ததுமேன்?

வன்னிருள் போக்கவே வா!

 

எலியுடை வானத்தை இன்றுடன் மாற்று!

புலியுடை வாகனம் போதும்! - உளியுடன்

வந்து வினையொழிப்பாய்! என்னை மறந்ததுமேன்?

நொந்து கிடக்குமெனை நோக்கு!

 

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் படைத்திட்டேன் நானுனக்கு! - நுாலுமே

இ்ங்கு வடித்திட்டேன்! என்னை மறந்ததுமேன்?

தொங்கு கரங்கொண்டு துாக்கு!

 

வங்கக் கடலருகே வாழ்கின்ற வள்ளலே!

தங்கத் தமிழிட்டுத் தாழ்பணிந்தேன்! -  செங்கதிராய்

எங்கும் ஒளிர்கின்றாய்! என்னை மறந்ததுமேன்?

தங்குந் துயர்போக்கித் தாங்கு!

 

யானை யுருக்கொண்டாய்! பானை வயிறுற்றாய்!

மோனைத் தொடையாக முன்னின்றாய்! - பூனையென

இங்[கி]யான் சுழல்கின்றேன்! என்னை மறந்ததுமேன்?

மங்கிய என்மனம் மாற்று!

 

அன்புடன்

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

07.09.2024

Aucun commentaire:

Enregistrer un commentaire