mardi 12 novembre 2013

உயர்தமிழ் காப்பாய் உடன் - 2




உயர்தமிழ் காப்பாய் உடன்!

தொடக்கக் கவிதை

சொல்லிக் கொடுத்த பா..வகையைச்
     சுடரும் வண்ணம் பாடுவதால்
வெள்ளி மரபு பாவரங்கம்
     மேலாம் பெயரைப் பெற்றதுவோ?
அள்ளி அமுதை அளித்திடவே
     துள்ளிக் கவிஞர் வருகின்றார்!
நெல்லிக் கனிபோல் நற்சத்தை
     நெஞ்சுள் கொடுப்பார் சுவைத்திடுவோம்!

தமிழ்ப் புதுவை


புதுவை நகரம் புலவர்களின்
     புலமைக் கோட்டை! பூந்தமிழின்
மதுவைச் சுரக்கும் மலர்ச்சோலை!
     மணக்கும் கவிதைத் தலைவாயில்!
புதுமைக் கவிஞன் பாரதியின்
     புகழைப் பாடும் திருக்கோயில்!
எதுகை மோனை தொழிற்சாலை!
     என்றன் ஊருக் கிணையுண்டோ?

அவை வணக்கம்

என்னை இங்கே ஒருபொருட்டாய்
     எண்ணி அழைத்தீர்! உயர்வளித்தீர்!
பொன்னை வைக்கும் இடத்தினிலே
     பூவை வைத்தீர்! வணங்குகிறேன்!
அன்னைத் தமிழின் அருள்என்பேன்!
     ஆசான் என்றும் துணையென்பேன்!
தென்னை மரத்தின் இளநீரைத்
     திரட்டும் என்..பா சுவைத்திடுவீர்!

என்றன் குருவே! அறிவொளியே!
     இதயம் புகுந்த அன்பொளியே!
இன்தேன் கவிதைக் கலை..தந்த
     ஈடில் அரிய புத்திரரே!
உன்றன் நினைவை உள்ளேந்தி
     உயர்ந்த அரங்கில் நிற்கின்றேன்!
நன்றுன் அருளை வழங்குகவே!
     நல்ல தமிழை முழங்குகவே!

எந்தை கவி.தே. சனார்த்தனனின்
     இன்தாள் வணங்கித் தொடர்கின்றேன்!
சிந்தை முழுதும் தமிழ்மணக்கும்!
     செல்லும் பாதை தமிழ்செழிக்கும்!
பந்தைப் போன்று பகைவர்களைப்
     பறக்கச் செய்த பாவேந்தர்
விந்தைப் பெயரை நான்பெற்றேன்!
     வெல்லும் கவியாய் வளர்க்கின்றேன்!

சந்தம் சிந்தும் பாவகைக்குச்
     சொந்தம் அரங்க. நடராசர்!
எந்த நாளும் எந்நொடியும்
     எழுத்தை வடிக்கும் தமிழ்ச்சிற்பி!
இந்த உலகில் தமிழ்பரவ
     இயங்கும் தொண்டர்! பெரும்புலவர்!
கந்தம் கமழும் கவிதூவிக்
     கால்கள் தொட்டு வணங்குகிறேன்!

பாட்டறிஞர் இலக்கியனார்
     பாவரங்கில் பயின்றவரே!
         பசுமைப் பாக்கள்
தீட்டறிஞர் திறனுடைய
     சான்றோரே! ஆன்றோரே!
         தமிழின் தேனைக்
கூட்டறிஞர் இங்கிருக்க
     என்தலைமை ஏன்அய்யா?
         கொள்கை ஏந்திக்
காட்டறிஞர் கவிபோல
     என்கவிதை இருக்குமெனில்
         கம்பன் செய்கை!


புதுவைப் பாவலர் பயிற்சிப் பட்டறை நடத்திய பாட்டரங்கத் தலைமைக் கவிதை 05.2011
 

lundi 11 novembre 2013

உயர்தமிழ் காப்பாய் உடன் - 1




உயர்தமிழ் காப்பாய் உடன்!

வள்ளுவன் தந்த வளர்மறைக் கீடாக
உள்ளதோ ஓர்நூல் உலகினிலே! - துள்ளும்
கயல்விழிப் பெண்ணே! அயல்மொழி நீக்கி
உயர்தமிழ் காப்பாய் உடன்!

முன்னே பிறந்ததமிழ்! முத்தாய் ஒளிர்ந்ததமிழ்!
என்னே உரைப்பேன் இணையாக? - பின்னே
மயர்நிலை ஏனோ? மடங்குநிலை வேண்டாம்
உயர்தமிழ் காப்பாய் உடன்!

உயிர்த்தமிழ் என்றும் உடல்தமிழ் என்றும்
குயில்தமிழ் கூவிய கொள்கை! - துயர்சேர்
அயல்மொழி நீக்கி அருஞ்சுவை நல்கி
உயர்தமிழ் காப்பாய் உடன்!

இயற்கை எழில்மணக்கும்! இன்தேன் சுரக்கும்!
செயற்கை இலாது சிறக்கும்! - இயக்கும்
வியன்தமிழ்த் தாயை விரைந்தர(சு) ஏற்றி
உயர்தமிழ் காப்பாய் உடன்!

சற்;றே அயர்ந்திடில் முற்றும் இழந்திடுவாய்!
பற்றே இலையெனில் ஏதுபயன்? - நற்றேன்
நயக்கும் நறுந்தமிழை நண்ணுநிலை எண்ணி
உயர்தமிழ் காப்பாய் உடன்!

எங்கும் தமிழென எல்லாம் தமிழெனத்
தங்கும் உணர்வுடல் தாங்குக! - பொங்கும்
புயலெனச் சீறுக! போந்தபகை வீழ்த்தி
உயர்தமிழ் காப்பாய் உடன்!

கம்பன் படைத்த கனித்தோட்டம்! பூத்தாடும்
செம்பொன் மலர்க்கூட்டம்! செந்தமிழா! - செம்மை
வயல்வெளி பேரழகு! வாய்த்தநம் தாயாம்
உயர்தமிழ் காப்பாய் உடன்!

பருகுநீர்! நல்லுணவு! பற்றிப் படர்ந்து
பெருகும் இனிமை!பேறு எல்லாம் - அரிய
கயல்,வில், புலிக்கொடி கண்ட மொழியாம்
உயர்தமிழ் காப்பாய் உடன்!

சந்தம் ஒலித்திடச் சிந்தும் செழித்திடத்
தந்த தனத்தன தாளமிட! - முந்தும்
இயலிசை நாடகம் இன்மரபு ஓங்க
உயர்தமிழ் காப்பாய் உடன்!

அன்னை அறமோங்க, ஆற்றல் நிறைந்தோங்க,
பொன்னை நிகர்த்த புகழோங்க! - உன்னைத்
துயர்வழி தள்ளும் தொடர்பகை நீங்க
உயர்தமிழ் காப்பாய் உடன்!

புதுவைப் பாவலர் பயிற்சிப் பட்டறை நடத்திய பாட்டரங்கத்
தலைமைக் கவிதை 05.2011

தொடரும் 

dimanche 10 novembre 2013

கருணைக்கடல் - பகுதி 3




கருணைக்கடல்

அழகுக் கிளியே! என்றென்னை
     ஆசை பொங்கக் கொஞ்சியவள்!
பழகு நிலவே பிள்ளையுடன்
     பாட்டுப் பாடி ஆடியவள்!
எழுது பாடம்! விரல்பிடித்தே
     எண்ணும் எழுத்தும் சூடியவள்!
அழுது தொழுது நோம்பேற்ற
     அன்னை கருணைப் பெருங்கடலாம்!

பள்ளி சென்று படித்திடுவாய்!
     பாதை பார்த்துச் சென்றிடுவாய்!
துள்ளிக் குதித்தே ஆடாதே!
     தூர மாகப் போகாதே!
கள்ளிக் காட்டுப் பக்கத்தில்
     கவனம் தேவை என்கண்ணே!
அள்ளி அணைத்து வழிசொன்ன
     அன்னை கருணைப் பெருங்கடலாம்!

வெளியே செல்லும் பொழுதெல்லாம்
     வீதி வென்று பார்த்திடுவாள்!
கிளியே போன்று சிலசொல்லைக்
     கிளம்பும் முன்னே உரைத்திடுவாள்!
துளியே துயரம் என்முகத்தில்
     துன்னக் கண்டு துடித்திடுவாள்!
ஒளியே! உயிரே! என்தாயே!
     ஓதும் கருணைப் பெருங்கடலாம்!

திரும்பி இல்லம் வரும்வரையில்
     திண்ணை மீதும், படிமீதும்,
அரும்பிப் பெருகும் கவலையுடன்
     அமர்ந்து நெஞ்சம் வாடிடுவாள்!
விரும்பி ஒன்றும் தனக்காக
     வேண்ட வில்லை! இனிக்கின்ற
கரும்பின் சாறே என்அன்னை
     காக்கும் கருணைப் பெருங்கடலாம்!

தன்னின் உணவை எனக்கீந்து
     தண்ணீர் மட்டும் அருந்தியதை!
என்னின் உயர்வாய் ஒருபொருளும்
     இல்லை என்றே எண்ணியதை!
பொன்னின் மணியாய் என்புலமை
     பொலியக் கண்ட பொங்கியதை!
என்றன் உயிரும் மறந்திடுமோ?
     என்தாய் கருணைப் பெருங்கடலாம்!

கருணைக்கடல் - பகுதி 2




கருணைக்கடல்

தொடக்கக் கவிதை

இனிக்கும் கவிதை அரங்கத்தை
     இருகை கொண்டு திறக்கின்றேன்!
மினுக்கும் பட்டுப் பூச்சியென
     மிதக்கும் வண்ணக் கற்பனைகள்!
நினைக்கும் பொழுதே தேனூறும்
     நேயத் தமிழின் திருப்பாக்கள்!
எனக்கும் கவிதைக் கலையூந்தே
     என்றும் காப்பாய் தமிழணங்கே!

பின்னைப் பிறக்கும் பிறவிகளில்
     அன்னைத் தமிழின் மைந்தனென
என்னைப் பிறக்க வைத்திடுவாய்
     பொன்னை நிகர்த்த திருராமா!
தென்னை நல்கும் இளநீராய்,
     தென்றல் நல்கும் நல்லிதமாய்,
முன்னைத் தமிழை நான்பாட
     முகுந்தா! முகிலா! அருள்வாயே!

கம்பன் கழகக் கவிஞர்கள்
     கருணைக் கடலில் நீந்திடவே
இம்மன் றேறி வந்திடுவார்!
     இனிக்கும் தமிழைத் தந்திடுவார்!
நம்மின் நெஞ்சம் தேனேந்த!
     நல்லோர் வாழ்ந்த மாண்பேந்த!
செம்பொன் இராமா அருளுகவே!
     செல்வத் தமிழ்த்தாய் ஓங்குகவே!

வள்ளல் படைத்த அருட்பாவை
     வடிவாய் ஓதும் அரங்கிரண்டில்
உள்ளம் மணக்கும் வண்ணத்தில்
     உயர்ந்த கருணைக் கடல்நீந்தத்
தௌ்ளத் தெளிந்த மனத்தோடு
     திரண்டு வந்த உறவுகளே!
அள்ள அள்ளச் சுரக்கின்ற
     அன்பால் வணங்கி மகிழ்கின்றேன்!

நிறைவு கவிதை

பலாச்சுளைப் பாக்களைப் பாடும் தணிகா
உலாவரும் பண்பின் உரு!

மகத்துவம் மிக்க மலர்க்கவி தந்தார்
அகத்துள் தமிழை அணிந்து!

கருணைக் கடலில் குளித்த..மதி வாணன்
உருவை அடையும் ஒளி!

அருமை அருணா அளித்தார் கவிதை
கருணைக் கடலைக் கடைந்து!

பாப்புப் படைத்த கருணைக் கடல்குளித்தால்
மூப்பு வருமோ மொழி!

அய்யா சிவஅரியார் இங்களித்த அந்தமிழில்
நெய்யாய் உருகும் நினைவு!

பூக்களாய் இங்குப் பொழிந்திட்ட பக்களை
ஈக்களாய் மொய்த்தோம் இனித்து!

சிவப்பிர காசம் சிறப்புறும் வண்ணம்
தவத்தமிழ் தந்தார் தழைத்து!

கொஞ்சும் தமிழெடுத்துப் பெஞ்சமின் தேன்கொடுத்தார்!
நெஞ்சம் நெகிழும் நினைந்து!

மல்லன் மனத்துள் மணக்கும் கருணைமலர்
மல்லிகா என்பேன் மகிழ்ந்து!

கருணைக் கடலைக் கவிதையில் தந்தார்
பெருமை அனைத்தும் பிணைத்து!

தலைவர் சிமோன்இங் களித்த தமிழ்ப்பா
நிலையென நிற்கும் நிலத்து!

சந்த நடையொளிரத் தந்த கவிதைகள்
முந்தும் புகழை முனைந்து!

பாப்பு படைத்த கருணைக் கடல்குளித்தால்
மூப்பு வருமோ மொழி!

கருணைக் கடலின் கவிதந்த
     கவிஞர் வாழ்க! ஒளிர்கின்ற
அருணைத் தமிழின் அகங்கொண்ட
     அன்பர் வாழ்க! இவ்வரங்கைப்
பெருமை செய்ய வந்தமர்ந்த
     பெரியோர்! பெண்டீர்! வாழ்க!நல்
அருமை மனத்தோன் பாரதிநான்
     அளித்தேன் நன்றி! சந்திப்போம்!

தொடரும்

samedi 9 novembre 2013

கருணைக்கடல் - பகுதி 1

                                                       [என் தாயாருடன் நான்]


கருணைக்கடல்

அம்மா அன்பு இரண்டல்ல!
     அமுதும் தேனும் வேறல்ல!
இம்மா நிலத்தில் உயர்ந்தொளிரும்
     இறைவன் கோயில் இணையில்லை!
சும்மா கிடந்த எனையிங்குச்
     சுடரும் பொன்னாய் மாற்றியவள்!
செம்மாந் துரைப்பேன்! தாய்என்னும்
     சீரே கருணைப் பெருங்கடலாம்!

பத்துத் திங்கள் எனையேந்திப்
     பட்ட பாட்டை எண்ணுகிறேன்!
கத்தும் வலியை நீயேற்றுக்
     கண்ணே என்று அணைத்தாயே!
முத்தும் மணியும் பொன்பொருளும்
     முத்தம் ஒன்றுக் கீடாமோ?
கொத்து மலரே தாயுள்ளம்
     குளிர்ந்த கருணைப் பெருங்கடலாம்!

கண்ணின் இமைபோல் காத்திட்டாள்
     கண்ணீ ராலே நோய்தீர்த்தாள்!
விண்ணில் உலவும் விண்மதியாய்
     மண்ணில் என்னை நினைத்திட்டாள்!
புண்ணில் கிடந்த காலத்தில்
     பண்ணில் என்னைப் படித்திட்டாள்!
எண்ணில் பெருகும் தாய்அழகே!
     இனிக்கும் கருணைப் பெருங்கடலாம்!

கோலம் வரைந்து சீராட்டி!
     கொஞ்சும் மொழியால் பாராட்டி!
காலம் அறிந்து பாலூட்டி!
     கண்கள் உறங்கத் தாலாட்டி!
ஞாலம் புகழும் தமிழூட்டி!
     நல்லோர் நவின்ற வழிகாட்டி!
ஆலம் போன்றே வாழ்வீந்த
     அன்னை கருணைப் பெருங்கடலாம்!

மூப்புப் பருவம் அடைந்தாலும்
     மூளை முழுதும் என்நினைவே!
யாப்புச் சுவையா? இசைக்கின்ற
     யாழின் சுவையா? இவ்வுலகின்
தோப்புக் கனிகள் அத்தனையும்
     தோற்றே ஓடும்! வாழ்நூலின்
காப்புக் கவிதை தாயன்றே!
     கமழும் கருணைப் பெருங்கடலாம்!

09.11.2013 தொடரும்