விருத்த மேடை - 102
அறுசீர் விருத்தம்
[மா+மா+மா+மா+விளம்+கூவிளங்காய்]
பேரார் மதமா உரிவை போர்த்துப்
…… பொடியணி
மேனியனாய்க்
காரார் கடலின்
நஞ்சம் உண்ட
…… கண்ணுதல்
விண்ணவனுார்
பாரார் வைகைப்
புனல்வாய்ப் பரப்பிப்
…… பண்மணி பொன்கொழித்துச்
சீரார் வாரி
சேர நின்ற
…… தென்திருப்
பூவணமே
[திருஞானசம்பந்தர்
தேவாரம் - 690]
நான் பிறந்த
நகர்
நேராம் பாதை
நெஞ்சைக் கவரும்
…… நிறையெழில்
பூத்தொளிரும்!
சீராம் தமிழைச்
சிந்தைக் கூட்டில்
…… சிறப்புறக்
காத்தொளிரும்!
கூராம் அறிவால்
கொள்ளை தீட்டிக்
…… குணநலங்
கோத்தொளிரும்!
காராம் மழைபோல்
கவிதை பொழியும்
…… கனித்தமிழ்
நற்புதுவை!
[பாட்டரசர்]
04.04.2026
இந்த அறுசீர் விருத்தம் மா+மா+மா+மா+விளம்+கூவிளங்காய் என்ற சீரமைப்பை ஓரடியாகக் கொண்டது.
இவ்வமைப்பிலேயே நான்கடிகள் அமைந்திருக்க வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க
வேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.
ஆறாம் சீர்
கூவிளங்காய் வரும் இடத்தில் புளிமாங்காய்ச் சீரும், தேமாந்தண்பூச் சீரும் எங்கோ ஓரிடம்
வருதலும் உண்டு. [எழுத்து எண்ணிக்கையில் கூவிளங்காய்போன்று ஒற்று நீக்கி நான்கு எழுத்துக்களைப்
புளிமாங்காயும் தேமாந்தண்பூவும் பெற்றுள்ளன]
விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர்
விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர்
கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
04.04.2026
Aucun commentaire:
Enregistrer un commentaire