lundi 6 avril 2026

விருத்த மேடை - 104

 

விருத்த மேடை  - 104

 

அறுசீர் விருத்தம்

[குறிலீற்றுமா+கூவிளம்+மா+விளம்+விளம்+மா]

 
பொருவ னார்புரி நுாலர்

…… புணர்முலை உமையவ ளோடு

மருவ னார்மரு வார்பால்

…… வருவது மில்லைநம் மடிகள்

திருவ னார்பணிந் தேத்தும்

…… திகழ்திரு வாஞ்சியத் துறையும்

ஒருவ னார்அடி யாரை

…… ஊழ்வினை நலியவொட் டாரே!

 

[சுந்தரர் தேவாரம் - 7995]

 

வாக்கை விற்றிடும் மக்கள்!

…… வந்திடும் நடிகர்பின் கூட்டம்!

நாக்கை நன்முதல் ஆக்கி

…… நரியெனச் சுற்றிடும் தலைவர்!

காக்கைக் கூட்டினில் குயில்போல்

…… கட்சியில் கூட்டுறும் சூதர்!

போக்கை யெண்ணியே வாடிப்

…… புனைந்துள பாப்பயன் தருமோ?

 

[பாட்டரசர்] 10.04.2026

 

முதல் சீர் குறிலீற்றுமா, இரண்டாம் சீர் கூவிளம், மூன்றாம் சீரும் ஆறாம் சீரும் மா, நான்காம் சீரும் ஐந்தாம் சீரும் விளம் என ஓரடி அமையும். இவ்வமைப்பிலேயே நான்கடிகள் வரும். நான்கடிகள் ஓரெதுகை பெறும். ஒன்று நான்காம் சீர்கள் மோனையுறும். விளம் வரும் இடங்களில் மாங்காய் அருகி வருதலும் உண்டு.

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

dimanche 5 avril 2026

விருத்த மேடை - 103

 

விருத்த மேடை  - 103

 

அறுசீர் விருத்தம்

[முதல் நான்கு சீர்கள் வெண்டளை+மா+தேமா]

 
மறையின் மணந்தாரை வன்பரதர்

……… பாக்கத்து மடவார் செங்கை

இறைவளைகள் துாற்றுவதை ஏழையம்

……… எங்ஙனம்யாங்[கு] அறிகோம்? ஐய!

நிறைமதியும் மீனும் எனஅன்னம்

……… நீள்புன்னை அரும்பிப் பூத்த

பொறைமலிபூங் கொம்பேற வண்டாம்பல்

……… ஊதும் புகாரே எம்மூர்!

 

[சிலப்பதிகாரம், கானல் வரி - 29]

 

கல்வித் தகத்தால் திரைசூழ்

……… கடற்காழிக் கவுணி சீரார்

நல்வித் தகத்தால் இனிதுணரும்

……… ஞானசம் பந்தன் எண்ணும்

சொல்வித் தகத்தால் இறைவன்

……… திருநா ஏத்து பாடல்

வல்வித் தகத்தான் மொழிவார்

……… பழியில்இம் மண்ணின் மேலே!

 

[திருஞானசம்பந்தர் தேவாரம் - 2255]

 

பெருமை

 

பெண்ணின் பெருமையைப் பேணிப் புகழ்ந்திடப்

……… பெருகும் சீரே!

மண்ணின் பெருமையை வாழ்த்தி மகிழ்ந்திட

……… மணக்கும் தாரே!

எண்ணின் பெருமையை ஏத்தித் தெளிந்திட

……… ஏந்தும் ஊரே!

பண்ணின் பெருமையைப் பாடிக் களித்திடப்

……… படரும் பேரே!

 

[பாட்டரசர்] 10.04.2026

 

முதல் நான்கு சீர்கள் வெண்டளையில் அமையும். ஐந்தாம் சீர் மாச்சீர் ஆகும். ஆறாம் சீர் தேமாவாகும். இவ்வமைப்பிலேயே நான்கடிகள் வரும். நான்கடிகள் ஓரெதுகை பெறும். ஒன்று ஐந்தாம் சீர்கள் மோனையுறும்.  

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

10.04.2026

samedi 4 avril 2026

விருத்த மேடை - 102

 

விருத்த மேடை  - 102

 

அறுசீர் விருத்தம்

[மா+மா+மா+மா+விளம்+கூவிளங்காய்]

 
பேரார் மதமா உரிவை போர்த்துப்

…… பொடியணி மேனியனாய்க்

காரார் கடலின் நஞ்சம் உண்ட

…… கண்ணுதல் விண்ணவனுார்

பாரார் வைகைப் புனல்வாய்ப் பரப்பிப்

…… பண்மணி பொன்கொழித்துச்

சீரார் வாரி சேர நின்ற

…… தென்திருப் பூவணமே

 

[திருஞானசம்பந்தர் தேவாரம் - 690]

 

நான் பிறந்த நகர்

 

நேராம் பாதை நெஞ்சைக் கவரும்

…… நிறையெழில் பூத்தொளிரும்!

சீராம் தமிழைச் சிந்தைக் கூட்டில்

…… சிறப்புறக் காத்தொளிரும்!

கூராம் அறிவால் கொள்ளை தீட்டிக்

…… குணநலங் கோத்தொளிரும்!

காராம் மழைபோல் கவிதை பொழியும்

…… கனித்தமிழ் நற்புதுவை!

 

[பாட்டரசர்] 04.04.2026

 

இந்த அறுசீர் விருத்தம் மா+மா+மா+மா+விளம்+கூவிளங்காய் என்ற சீரமைப்பை ஓரடியாகக் கொண்டது. இவ்வமைப்பிலேயே நான்கடிகள் அமைந்திருக்க வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.

 

ஆறாம் சீர் கூவிளங்காய் வரும் இடத்தில் புளிமாங்காய்ச் சீரும், தேமாந்தண்பூச் சீரும் எங்கோ ஓரிடம் வருதலும் உண்டு. [எழுத்து எண்ணிக்கையில் கூவிளங்காய்போன்று ஒற்று நீக்கி நான்கு எழுத்துக்களைப் புளிமாங்காயும் தேமாந்தண்பூவும் பெற்றுள்ளன]

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

04.04.2026

samedi 21 mars 2026

விருத்த மேடை - 101

 


விருத்த மேடை  - 101

 

கட்டளை அறுசீர் விருத்தம்

[நேர் : 19 எழுத்து, நிரை : 20 எழுத்து]

 

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச்

……. சங்கொடு சக்கரம்வில்

ஒண்மை யுடைய வுலகையொள் வாள்தண்டு

…… கொண்டுபுள் ளூர்ந்துலகில்

வன்மை யுடைய அரக்கர் அசுரரை

…… மாளப் படைபொருத

நன்மை யுடையவன் சீர்பர வப்பெற்ற

…… நானோர் குறைவிலனே!

 

[நம்மாழ்வார், திருவாய்மொழி]

 

குறைவில் தடங்கடல் கோளர வேறித்தன்

…… கோலச்செந் தாமரைக்கண்

உறைபவன் போலவோர் யோகு புணர்ந்த

…… ஒளிமணி வண்ணன்கண்ணன்

கறையணி மூக்குடைப் புள்ளைக் கடாவி

…… அசுரரைக் காய்ந்தவம்மான்

நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்

…… யானொரு முட்டிலனே!

 

[நம்மாழ்வார், திருவாய்மொழி]

 

இல்லம் இனிக்க இளமை செழிக்க

…… இளையவள் வந்திடுவாள்!

வெல்லம் இனிக்க விருந்து மணக்க

…… வியன்கவி தந்திடுவாள்!

உள்ளம் இனிக்க உறவு கொழிக்க

…… உயர்மனை காத்திடுவாள்!

செல்லம் அவளின் சிறப்பை யுரைக்கச்

…… செகத்தினில் சொல்லிலையே!

 
[பாட்டரசர்] 20.03.2026

 

ஓரடியில் ஐந்து சீர்களைப் பெற்றுவரும் கட்டளைக் கலித்துறை இலக்கணத்தை ஒத்து, ஓரடியில் ஆறு சீர்களைப் பெற்றுவரும் கட்டளை அறுசீர் விருத்தம் இது. நேரசையில் தொடங்கும் பாடல் அடிக்கு 19 எழுத்துக்களையும், நிரையசையில் தொடங்கும் பாடல் அடிக்கு 20 எழுத்துக்களையும் பெறும்.  ஒவ்வோர் அடியும் வெண்டளை பெறும். அடியின் ஈற்றிலிருந்து அடியின் தொடக்கத்திற்கு வெண்டளை பார்க்க வேண்டியதில்லை. அடியின் ஈற்றுச்சீர் விளங்காயாக வரும். முதல் நான்கு சீர்களில் விளங்காய் வராது. விளங்காய் வரும் 6 ஆம் சீர் இடத்தில் மாங்கனியும், மாந்தண்பூ ஆகிய சீர்கள் அருகி வரும். மேலே இரண்டாம் விருத்தத்தில் தேமாந்தண்பூ  [வண்ணன்கண்ணன்] வந்துள்ளதைக் காண்க.

 

நான்கடிகள் ஓரெதுகை பெறும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனையுறும்.

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

20.03.2026

dimanche 15 mars 2026

விருத்த மேடை 100

 


விருத்த மேடை  - 100

 

அறுசீர் விருத்தம்

 

கட்டளை விருத்தம்

 

மற்றிருந் தீர்கட் கறியலாகா

………..மாதவன் என்பதோர் அன்புதன்னை

உற்றிருந் தேனுக் குரைப்பதெல்லாம்

………..ஊமைய ரோடு செவிடர்வார்த்தை

பெற்றிருந் தாளை ஒழியவேபோய்ப்

………..பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி

மற்பொருந் தாமல் களமடைந்த

………..மதுரைப் புறத்தென்னை உய்திடுமின்

 

[ஆண்டாள், நாச்சியார் திருமொழி, நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - 617]

 

கலைமகள் தாயே! கவிக்கடலே!

………..கடையன் எனக்கும் அருள்தருவாய்!

தலைமகள் ஆன தமிழணங்கின்

………..தாள்கள் அளிக்கும் பொருள்தருவாய்!

அலைமகள் ஆகத் தொடர்ந்துவரும்

………..ஆக்கஞ் சிறக்கத் துணைபுரிவாய்!

மலைமகள் வன்மை மனமடைய

………..மலர்கள் துாவி யுனைத்தொழுதேன்!

 

[பாட்டரசர்] 13.03.2026

 

எழுத்தெண்ணிக்கை ஒன்றி வரும் பாடலைக் கட்டளைப் பெயரிட்டுச் சொல்லப்படும். மேலுள்ள அறுசீர் விருத்தத்தில் நிரையில் தொடங்கும் அரையடியில் 11 எழுத்துக்கள் வரும். நேரில் தொடங்கும் அரையடியில் 10 எழுத்துக்கள் வரும். ஒவ்வோர் அரையடியும் வெண்டளை பெறும். அரையடியின் ஈற்றுச்சீர் விளங்காயாக வரும். முதல் இரு சீர்களில் விளங்காய் வராது. விளங்காய் வரும் 3 ஆம் சீரிலும், 6 ஆம் சீரிலும் மாந்தண்பூ ஆகிய நாலசைச் சீர்கள் அருகி வரும்.

 

நான்கடிகள் ஓரெதுகை பெறும். முதல் சீரும் நான்காம் சீரும் மோனையுறும்.

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

14.03.2026

mercredi 7 janvier 2026

சாற்றுகவி

 

பாவலர்மணி வா. சண்முகம் எழுதிய

வெண்பாத் திரட்டு நுாலுக்குச்

சாற்றுகவி

 

வெண்பா அழகில் விருப்பம் மிகுந்தோங்க

நண்பா படி..இந்த நன்னுாலைப் - பண்பாடும்

ஆற்றல் நிறைந்தோங்கும்! அன்புடை..வா. சண்முகனார்

போற்றப் புனைந்தார் புகழ்!

 

பாட்டின் இயலறிந்தும், பாடும் வளமறிந்தும்,

ஏட்டின் எழிலறிந்தும் தீட்டிய..நுால் - மூட்டுமே

காட்டின் மலர்வாசம்! கற்றுக் களிக்குமனம்

நாட்டில் பெறுமே நலம்!

 

ஊரோங்கப் பாரின் உறவோங்க நெஞ்சத்துள்

நேரோங்க நெய்திட்ட இந்நுாலால் - சீரோங்கப்,

பெற்றோர் பெயரோங்க உற்ற..வா. சண்முகனார்

கற்றோர்க்[கு] அளித்தார் களிப்பு!

 

எங்கும் தமிழ்பரவ என்றும் பணியாற்றிப்

சங்கப் புலமைத் தகைபோற்றித் - தங்கமென

வெண்பாத் திரட்டு விளைத்த..வா. சணமுகனார்

பண்பால் அடைந்தார் பயன்!

 

தண்ணிலா முற்றத்தில் தத்தி விளையாடி

எண்ணிலா ஏற்றம் இசைத்திட்டார்! - கண்ணுலாக்

காட்சியைக் கட்டிக் கவிதந்தார்! சண்முகனார்

மாட்சியை வாழ்த்துமே மண்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

07.01.2026

jeudi 1 janvier 2026

புத்தாண்டு வாழ்த்து 2025

 


உலக உயிர்கள் உவப்புற

ஆங்கிலப் புத்தண்டு வாழ்த்து

 

அன்பு நிறைந்தோங்கப் பண்பு படர்ந்தோங்க

இன்பக் கலைக்கல்வி நன்றோங்க – மன்பதை

தாங்கிய தண்மைத் தமிழோங்க நல்வாழ்வை

ஆங்கில ஆண்டே அருள்!

 

ஒற்றுமை யோங்க உலக உறவோங்க

நற்றுணை நட்பு நனியோங்கப் – பொற்பெலாம்

தந்துள மோங்கத் தமிழோங்க நல்வாழ்வை

வந்துள ஆண்டே வழங்கு!

 

விண்ணக ஞானம் விளைந்தோங்க, வள்ளலென

வண்ணக மோங்க, வளமோங்கப், – பெண்ணோங்கப்

பண்ணகப் பைந்தமிழால் பாரோங்க வந்திடுவாய்

மண்ணக ஆண்டே மகிழ்ந்து!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

01.01.2026

vendredi 21 novembre 2025

ஓம் ஓம் ஓம்

 


ஓம்.. ஓம்.. ஓம்

 

கலமுடைந்[து] ஆழ்கடலில் கத்துகிறேன்! என்மெய்

பலமுடைந்து சோர்ந்தேன்! பரமன் - அலையுடைந்து

சென்றதுபோல் பாதை தெரிந்திடுமே! ஓம்..ஓம்..ஓம்..

என்றதுமே நீங்கும் இடர்!

 

காக்கும் வழியின்றிக் கத்துகிறேன்! முன்வினைகள்

தாக்கும்! துணையின்றித் தத்துகிறேன்! - வாக்கற்ற

கோது..மன நீங்கிக் குளிர்ந்திடுமே! ஓம்..ஓம்..ஓம்..

ஓதுமனம் காணும் ஒளி! 

 

பொய்யர் உறவால் புழுங்கி மனநொந்தேன்!

மெய்யர் எதிர்ப்பால் மெலிவுற்றேன்! - உய்வின்றி

வாழ்ந்த நிலைமாறும்! வாய்..மனம் ஓம்..ஓம்..ஓம்..

ஆழ்ந்த ஒளியால் அறி!

 

திருடும் தொழிலுற்றுச் சேர்த்த வளங்கள்

உருளும்! உனையுருட்டும்! உள்ளம் - கருகுதுயர்

முற்றும் ஒழிய மொழிந்திடுவாய் ஓம்..ஓம்..ஓம்..

பற்றும் பரம பதம்!

 

அடியாள் பலர்கொண்டே ஆடிய ஆட்டம்

இடியாய் விழும்நம் மிடமே! - படிபடியாய்

வந்த வினைநீங்கும்! வாய்திறந்[து] ஓம்..ஓம்..ஓம்..

தந்த ஒலியே தவம்!

 

பட்ட அடியென்ன? நட்ட வினையென்ன?

சுட்ட நெருப்பென்ன? துன்பென்ன? - இட்டவென்

ஆணைத் திமிரென்ன? அத்தனையும் ஓம்..ஓம்..ஓம்..

ஆனை முகனே அகற்று!

 

வறுமை வதைப்பட்டு வாழ்வுநிலை கெட்டுக்

கருமை மனமுற்றுக் காய்ந்தேன்! - ஒருமை

உளங்கொண்டு பாடுகிறேன் உன்னை!ஓம்.. ஓம்..ஓம்..

வளங்கொண்டு ஞானம் வழங்கு!

 

பாட்டரசா வென்று பழித்திடுவார்! வீண்வெற்று

வேட்டரசா வென்று வெறுத்திடுவார்! - நாட்டரசா!

ஏட்டரசா! உன்முன் இரங்குகிறேன்! ஓம்..ஓம்..ஓம்..

வீட்டரசா தீராய் வினை!

 

நாடி நலிவுற்றேன்! நம்பிப் பறிபோனேன்!

கூடிக் குணங்கெட்டேன்! குன்றினேன்! - வாடியே

நிற்கின்றேன்! அத்தனையும்  நீக்கிடுவாய்! ஓம்..ஓம்..ஓம்..

கற்கின்றேன் உள்ளம் கனிந்து!

 

ஆசையலை சிக்கி அழிவுற்றேன்! நெஞ்சத்துள்

வேசையலை சிக்கி வினையுற்றேன்!- மாசெல்லாம்

தங்கும் அகமுற்றேன்! தாழ்வுற்றேன்! ஓம்..ஓம்..ஓம்..

தொங்குங் கரங்கொண்டு துாக்கு!

 

எங்குக் குறைவிட்டேன்? என்ன பிழைவிட்டேன்?

இங்குச் சுழலும் எதிர்ப்பலைகள்! - தங்கு

தடையின்றித் தண்டமிழைத் தாராய்!ஓம்.. ஓம்..ஓம்..

இடையின்றி வேண்டும் எழுத்து!

 

அம்மைத் தமிழ்கொண்டு தும்பை மலரிட்டேன்!

வெம்மை வினைகளை வேரறுப்பாய்! - மும்மை

மலம்போக்கிக் காத்திடுவாய்! வாழ்வில்..ஓம் ஓம்..ஓம்..

நலந்தேக்கி ஞானம் நவில்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

27.08.2025

dimanche 12 octobre 2025

கம்பன் விழா 2025

 

இருபத்து நான்காம் ஆண்டு
பிரான்சு கம்பன் விழாப் பாட்டரங்கம்


தமிழ் வணக்கம்

 

மனமோங்கு தமிழே..உன் இனமோங்கு கவிபாட

          மலர்ஊறும் தேனள்ளி யூட்டு - உன்

          மடியேந்தி மகனைத்தா லாட்டு!

மதியோங்கு தமிழே..உன் நதியோங்கு கவிபாட

          மத்தாப்பு வண்ணங்கள் காட்டு! - பொன்

          மகரத்து யாழ்கொண்டு மீட்டு!

 

தினமோங்கு தமிழே..உன் திணையோங்கு கவிபாடச்

          தித்திக்கும் வித்தள்ளிக் கூட்டு! - மின்னும்

          சிங்கார அணியள்ளிச் சூட்டு!

சீரோங்கு தமிழே..உன் பேரோங்கு கவிபாடச்

          சிந்தைக்குள் சந்தத்தைக் கூட்டு! - தான

          தந்தான தாளங்கள் போட்டு!

 

வனமோங்கு தமிழே..உன் வளமோங்கு கவிபாட

          மானாக மயிலாகத் தீட்டு! - இந்த

          மன்றத்துள் இன்பத்தை மூட்டு!

மகிழ்வோங்கு தமிழே..உன் அகமோங்கு கவிபாட

          வார்த்தைக்குள் இன்பத்தை நீட்டு! - பெரு

          மலையாகப் புகழள்ளி நாட்டு!

 

பனியோங்கு தமிழே..உன் கனியோங்கு கவிபாடப்

          படர்கின்ற வண்ணத்தைத் தீட்டு! - வருக

          பறந்தோடி என்சொல்லைக் கேட்டு!

பாட்டுக்கே அரசாக்கி நாட்டுக்கே உரமாக்கிப்

          பாசத்தால் என்னைச்பா ராட்டு! -  தாயே

          பணிகின்றேன் உன்னைச்..சீ ராட்டு!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

28.10.2025

samedi 13 septembre 2025

கம்பன் விழா

 


கம்பன் கழகம் பிரான்சு

24 ஆம் ஆண்டுத்

தெய்வமாக்கவி 

கம்பன் விழா


இடம்:

Le Gymnase Victor Hugo

rue  Auguste Renoir

95140 Garges les Gonesse

France


நாள்:

28/09/2025
ஞாயிறு 15.00 மணிமுதல் 20.30 மணிவரை

அனைவரும் வருகவே! அருந்தமிழ் பருகவே!

 

jeudi 11 septembre 2025

ஓரொலி வெண்டுறை



ஓரொலி வெண்டுறை
 
அரசியலார்!
 

ஊழல் முதலைகளை உளமாரப் பாடி உவக்கும் புலவர்

சூழல் அனைத்தையும் சுருட்டுகின்ற தலைவ தம்மால்

ஏழை  துயர்நீங்க எள்ளளவும் வழியுண்டோ?

 

பூட்டியுள வீட்டைப் பொறிக்கிகள் தாம்கொண்டு சொந்த மாக்கி

நாட்டியுள சொத்து நாலிரு தலைமுறைக்கு வருமே! இவர்கள்

நாட்டிலுள வஞ்ச நரியெனச் சாற்றுகவே!

 

அடியாள் கொண்டாச்சி நடத்துவதா? அன்பின்றிக் கூர்மைக் கத்தி

தடியால் கொண்டாச்சி தள்ளுவதா? துடிதுடிக்க அழிவே நல்கும்

வெடியால் கொண்டாச்சி  மிரட்டுவதா? என்னாடே!

 

தலைவனின் இருதாள்கள் தழுவி நக்குகின்ற தொண்டன் தானே
கொலையனின் மிகுகொடியன்! கொள்ளை யிடுகின்ற கள்ளன்! பதவி
விலையனின் அடிவேரை வெட்டி வீழ்த்துகவே!


கால்நக்கிப் பதவி பெறுகின்ற கட்சித் தலைவன்! பத்தி

வேல்நக்கிப் பதவி பெறுகின்ற வெற்றுத் தொண்டன்! பணத்தில்

மேல்நக்கிப் பதவி விளைகின்ற என்னாடே!

 

மாடேயிலா நிலைமைக்கும்,  மனையேயிலா வீட்டுக்கும்

கடன்தருவார்! விளையும்

காடேயிலா உழவுக்கும், கடையேயிலாத் தொழிலிக்கும் 

கடன்தருவார்! சின்ன

ஏடேயிலாக் கணக்கெழுதி ஏப்பமிடும் என்னாடே!

 

நாட்டுப்பணம் என்ன? நல்லோர் பணமென்ன? நம்பித் தந்த  

காட்டுப்பணம் என்ன? கண்ணீர்ப் பணமென்ன? ஆட்டை போட்டு

வீட்டுப்பணம் ஆக்கும் விந்தை நாடிதுவே! 

 
முன்னே ஈரடிகள் ஆறு சீர்களையும் பின்னோர் அடி நான்கு சீர்களையும் பெற்றுச் சிறப்பில்லா  ஏழு தளையாலும் வந்த ஓரொலி வெண்டுறை.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
பாவலர் பயிலரங்கம், பிரான்சு.
11.09.2025