mardi 4 février 2020

பேரறிஞர் அண்ணா


பேரறிஞர் அண்ணா
  
அண்ணா அளித்த நுால்யாவும்
   அமுதத் தமிழின் சுவையூட்டும்!
வண்ணான் போன்று துவைத்தழகாய்
   மண்சேர் அழுக்கை விரைந்தோட்டும்!
வண்..நா வடித்த சொல்யாவும்
   வறுமை போக்கும் வழிகாட்டும்!
பண்..நாப் புலமை படைத்தொளிரும்
   பாட்டின் அரசன் பணிகின்றேன்!
  
மேடை மணக்கும் உரையழகும்,
   மேன்மை மணக்கும் நடையழகும்,
கூடை மணக்கும் தேங்கனியாய்க்
   கொள்கை மணக்கும் செயலழகும்,
ஓடை மணக்கும் பூங்காற்றாய்
   உள்ளம் மணக்கும் பகுத்தறிவும்,
கோடை மணக்கும் அரசியலும்,
   கொடுத்த அண்ணா புகழ்வாழ்க!
  
உள்ளம் தமிழின் குடிலாகும்!
   உருவம் ஒளிரும் கதிராகும்!
பள்ளம் மேடு சீர்செய்யும்
   பார்வை பசுமைப் பொழிலாகும்!
வெள்ளம் போன்று பாய்ந்தோடும்
   வீரச் சொற்கள் விடிவாகும்!
கள்ளம் கொண்ட மனிதர்களைக்
   கழித்த அண்ணா நெறிகாப்போம்!
  
கட்டுப் பாடும், கண்ணியமும்,
   கமழும் கடமை நன்மனமும்,
முட்டும் பகையை வெல்கின்ற
   முன்னைத் தமிழின் வன்மறமும்,
கொட்டும் முரசாய் உரிமையினைக்
   கூவி உரைத்த திருவாயும்,
கட்டுக் கரும்பாய் இனித்தனவே!
   காஞ்சி அண்ணா வழியேற்போம்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
03.02.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire