vendredi 7 février 2020

வெண்பா மேடை - 155



வெண்பா மேடை - 155
  
கால் ஓடும் வெண்பா!
  
தமிழில் 'ா' இவ்வெழுத்தைக் 'கால்' என்று அழைப்பர். சோலை என்ற சொல்லில் கால் ஓடிவிட்டால் சேலை யாகும். இவ்வாறு காலுடைய சொல்லையும் காலோடிய பின் வரும் சொல்லையும் கொண்டு பாடப்படுவது 'கால் ஓடும் வெண்பா' வாகும்.
  
காலுடைய சொல்லும் காலோடிய சொல்லும் அதன் மற்றப் பெயர்களை ஏற்றுப் பாடலில் அமைய வேண்டும்.
  
கீழ்காணும் பாடலில் 'தார்' என்ற சொல் 'மாலை' எனும் பெயரில் வந்துள்ளது. 'மலை' என்ற சொல் 'வெற்பு' என்று வந்துள்ளது.
  
தாரின்தன் காலோடித் தண்டமிழில் வெற்பாகும்!
பாரின்தன் காலோடிப் பார்..மையம்! - காரின்தன்
நன்முரணும் காலோடி ஞானமுறும்! பார்வினையும்
இன்முறையில் நன்விழியாம் நாடு!
  
தார் - மாலை
மாலை - கால் ஓடியபின் மலை [வெற்பு]
  
பார் - நாடு
நாடு - கால் ஓடியபின் நடு [ மையம்]
  
கார் - இரவு
இரவின் முரண் காலை
காலை - கால் ஓடியபின் கலை [ஞானம்]
  
பார் என்னும் வினையைக் காண் என்றும் சொல்லலாம்
காண் - கால் ஓடியபின் கண் [விழி]
  
கால் ஓடும் வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
07.02.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire