dimanche 2 février 2020

வெண்பா மேடை - 154


படம் இதைக் கொண்டிருக்கலாம்: , ’வெண்பா மேடை’ எனச்சொல்லும் உரை
வெண்பா மேடை - 154
  
கால் கூடும் வெண்பா!
  
தமிழில் 'ா' இவ்வெழுத்தைக் 'கால்' என்று அழைப்பர். கலை என்ற சொல் கால் பெற்றல் காலை யாகும். இவ்வாறு, காலில்லாச் சொல்லையும் கால் பெற்று வந்த சொல்லையும் கொண்டு பாடப்படும் வெண்பா 'கால் கூடும் வெண்பா' ஆகும்.
  
காலில்லாச் சொல்லும் காலுற்ற சொல்லும் அதன் மாற்றுப் பெயர்களை ஏற்றுப் பாடலில் அமைய வேண்டும்.
  
கீழ்காணும் பாடலில் 'மது' என்ற சொல் 'போதைநீர்' எனும் பெயரில் வந்துள்ளது. 'மாது' என்ற சொல் 'கோதை' என்று வந்துள்ளது.
  
போதைநீர் கால்கொண்டால் கோதை உருப்பெறுவாள்!
பாதையும் கால்கொண்டால் பார்..வாழ்த்து! - வாதையும்
கால்கொண்டால் கண்மூடும்! காருடைய கட்டையும்
கால்கொண்டால் வள்ளலைக் காண்!
  
மேற்கண்ட வெண்பாவில்
  
போதைநீர் - மது
மது கால் பெற்றல் மாது [கோதை]
  
பாதை - வழி
வழி கால் பெற்றால் வாழி [வாழ்த்து]
  
வாதை - துக்கம்
துக்கமும் கால் பெற்றால் துாக்கம் [கண்மூடும்]
  
காருடைய கட்டை [கரி]
கரி கால் பெற்றால் காரி [வள்ளல்]
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
02.02.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire