samedi 5 janvier 2019

சிலேடை வெண்பா!


சிலேடை வெண்பா!
  
திருமாலும் யானையும்!
  
அடிகண்[டு] உயர்வோம்! உருக்கண்டும் ஆழ்வோம்!
கொடிகொண்டு செல்லும்!நற் கோயில் - குடிகொள்ளும்!
போர்கண்டு காக்கும்! மதங்கொள்ளும்! நுால்போற்றும்!
கார்கொண்ட மால்,யானை காண்!
  
திருமால்
  
திருமாலின் மலரடியைப் பிடித்துப் உயர்வை அடைவோம். அவன் உருவழகில் மயங்கி நிற்போம். கொடியேந்தி ஆள்பவன். கோயிலில் குடிகொண்டவன் . பாரதப்போர் கண்டு பாண்டவர்களைக் காத்தவன். வைணவ மதம் முன்னிறையாகப் போற்றி வணங்கும். கீதையும், ஆழ்வார் பாக்களும் அவன் புகழை இசைக்கின்றன. கறுப்பு நிறம் கொண்டவன்.
  
யானை
  
யானையின் கால்மேல் ஏறி அதன்மேல் அமரவேண்டும். அதன் உருவைக் கண்டு வியப்புறுவோம். மன்னனின் கொடியை ஏந்திச் செல்லும். கோயில்களில் இருக்கும். போர்க்களம் கண்டு நாட்டைக் காக்கும். மதம் பிடிக்கும். யானை முகத்தானை நுால்கள் காப்பாகக் கொள்ளும். கருநிறம் ஏற்கும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
05.01.2019

1 commentaire:

  1. சிறப்பான பாடல். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    RépondreSupprimer