vendredi 26 janvier 2018

விருத்த மேடை - 9

விருத்த மேடை - 9
  
அறுசீர் விருத்தம் - 9
[மா + மா + மா + மா + மா + மா]
  
எண்ணுவது உயர்வு!
  
கள்ளம் இல்லா எண்ணம்
   கமழும் வாழ்வைக் காட்டும்!
குள்ளம் இல்லா எண்ணம்
   கோல அழகைத் தீட்டும்!
துள்ளல் இல்லா எண்ணம்
   துன்னும் துயரை ஓட்டும்!
உள்ளம் ஓங்கும் எண்ணம்
   ஒளிரும் புகழைச் சூட்டும்!
  
ஆறு மாச்சீர்கள் ஓரடியில் வரவேண்டும். இவ்வாறு நான்கடிகளும் அமைய வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
  
ஒன்று, நான்காம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.
  
குறிலிணை ஒற்றைத் தொடக்கமாகக் கொண்ட புளிமாச்சீர் [இளைத்து] ஓசை நயத்தைக் குறைக்கும், ஆதலால் அச்சீர் இன்றி வருதல் சிறப்புடையது. [அச்சீர் அருகி வருதல் உண்டு]
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
       
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
26.01.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire