lundi 25 décembre 2023

கலித்துறை - 3

 


கலித்துறை மேடை - 3

 

கலிநிலைத்துறை

குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + விளம் + காய்

 

கலித்துறை மேடை இரண்டில் ஈற்றுச்சீர் மாவாகும். இதில் காயாகும்.

 

இரதி யின்னணம் வருந்திடத் தொன்மைபோல் எங்கோமான்

விரத மோனமோ டிருந்தலு முன்னரே விறற்காமன்

கருது முன்பொடி பட்டது கண்டனர் கலங்குற்றார்

சுருதி நன்றுணர் திசைமுகன் முதலிய சுரரெல்லாம்

 

[கந்தபுராணம்]

 

இறையின் பொன்மகன் இந்நிலம் பிறந்துள இன்னாளை

நிறையின் நெஞ்சுடன் நித்தில வன்புடன் நினைந்துருகி

மறையின் நீதியை மகிழ்வுடன் பாடியே மாண்புகளைப்

பறையின் மண்ணலம் படர்ந்திடும்! பன்னலம் பழுத்திடுமே!

 

[பாட்டரசர்]

 

அறிமறியாகாமல், எழுத்து வரையறையப்படாமல் வருவது கலிநிலைத்துறையாம். பலவகையாகக் கலிநிலைத்துறை அமையும். ஒவ்வொன்றிலும் இன்ன இடத்தில் இன்ன சீர் வரவேண்டும்  என்ற விதிகள் உண்டு.

 

ஓரடியில் ஐந்து சீர்கள் இருக்கும். நான்கு அடிகளைப் பெற்று வரும். நான்கடிகளும் ஓரெதுகை பெறும். 1.5 ஆம் சீர்களில் மோனை யமையும்.

 

கலித்துறைகளில் 1, 5 ஆம் சீர்களில் மோனை யமைவது பெரும்பான்மையாகும். இவற்றோடு 3 ஆம் சீரிலும் மோனை யமையின் ஓசைநயம் சிறக்கும். 5 ஆம் சீரில் மோனை யமையாத போது 3 அல்லது 4 ஆம் சீர்களில் மோனை யிருக்கும்.

 

குறிலீற்றுமா என்றால் மாச்சீரின் ஈற்றெழுத்துக் குறிலாகவோ அல்லது குறிலொற்றாகவே வரவேண்டும். [அன்பு, அன்பர்] நெடில் ஈற்று மாச்சீர் வரக்கூடாது [ அன்பே, அன்பார்]

 

அடிமடி என்றால், யாதோரடியை எடுத்து முதல் நடு இறுதியாக உச்சரிப்பினும் பொருளும் ஓசையும் மாறாமல் அமைவது. அறிமறியாகாமல் இப்பாடல் அமையும்.

 

எழுத்து வரையறையப்படாமல் என்றால், நான்கு அடிகளிலும் எழுத்து எண்ணிக்கை வேறுபட்டு வருவது.

 

கூவிளம் வருமிடங்களில் தேமாங்காயும், கருவிளம் வருமிடங்களில் புளிமாங்காயும் அருகி வரும்.

 

மேற்கண்ட கலிநிலைத்துறை ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம், பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

25.12.2023

Aucun commentaire:

Enregistrer un commentaire