samedi 21 décembre 2019

மார்கழிப் பெண்ணே


மார்கழிப் பெண்ணே
[மார்கழியைக் காதலியாக எண்ணிப் பாடிய வெண்பா மாலை]
  
1.
மார்கழிப் பெண்ணே! மதுமலர்க் கண்ணே!உன்
சீர்பொழி பேரழகில் சிக்குண்டேன்! - ஊர்பொழில்
ஆடை தரிக்கும்! அமுதே..உன் பார்வையால்..பா
வோடை சுரக்கும் உளத்து!
  
2.
வையத்துப் பேரழகே! வாழ்கவி என்னெஞ்ச
மையத்துப் பேரொளியே! மாங்குயிலே! - ஐயத்[து]
இடமின்றிச் சொல்வேன் இசைத்தேன்..நீ! பொன்னார்
குடமொன்றிக் கொள்வேன் குளிர்!
  
3.
ஓங்கி யொளிர்பவளே! ஒண்டமிழை உள்ளத்துள்
தாங்கித் தழைப்பவளே! தண்கொடியே! - ஏங்கி..நான்
நிற்கின்றேன்! நீள்விழி நேரிழையே! நின்னுருவில்
கற்கின்றேன் காதல் கவி!
  
4.
ஆழிபோல் சுற்றுதடி அன்பே நினைவலைகள்!
மேழிபோல் பற்றுதடி மேனியை! - ஊழிபோல்
என்னை யுருட்டாதே! ஏற்றருள்வாய்! உன்னுறவு
முன்னைத் தவத்தின் முளைப்பு!
  
5.
மாயனைச் சேர்ந்த திருமகள்போல், பாட்டரசு
நேயனைச் சேர்ந்த நிறைமதியே! - தாயனைந்த
பொன்மகளே! பொங்கும் புகழ்மகளே! நன்மணிகள்
மின்மகளே தாராய் விருந்து!
  
[தொடரும்]
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்

Aucun commentaire:

Enregistrer un commentaire