dimanche 12 octobre 2025

கம்பன் விழா 2025

 

இருபத்து நான்காம் ஆண்டு
பிரான்சு கம்பன் விழாப் பாட்டரங்கம்


தமிழ் வணக்கம்

 

மனமோங்கு தமிழே..உன் இனமோங்கு கவிபாட

          மலர்ஊறும் தேனள்ளி யூட்டு - உன்

          மடியேந்தி மகனைத்தா லாட்டு!

மதியோங்கு தமிழே..உன் நதியோங்கு கவிபாட

          மத்தாப்பு வண்ணங்கள் காட்டு! - பொன்

          மகரத்து யாழ்கொண்டு மீட்டு!

 

தினமோங்கு தமிழே..உன் திணையோங்கு கவிபாடச்

          தித்திக்கும் வித்தள்ளிக் கூட்டு! - மின்னும்

          சிங்கார அணியள்ளிச் சூட்டு!

சீரோங்கு தமிழே..உன் பேரோங்கு கவிபாடச்

          சிந்தைக்குள் சந்தத்தைக் கூட்டு! - தான

          தந்தான தாளங்கள் போட்டு!

 

வனமோங்கு தமிழே..உன் வளமோங்கு கவிபாட

          மானாக மயிலாகத் தீட்டு! - இந்த

          மன்றத்துள் இன்பத்தை மூட்டு!

மகிழ்வோங்கு தமிழே..உன் அகமோங்கு கவிபாட

          வார்த்தைக்குள் இன்பத்தை நீட்டு! - பெரு

          மலையாகப் புகழள்ளி நாட்டு!

 

பனியோங்கு தமிழே..உன் கனியோங்கு கவிபாடப்

          படர்கின்ற வண்ணத்தைத் தீட்டு! - வருக

          பறந்தோடி என்சொல்லைக் கேட்டு!

பாட்டுக்கே அரசாக்கி நாட்டுக்கே உரமாக்கிப்

          பாசத்தால் என்னைச்பா ராட்டு! -  தாயே

          பணிகின்றேன் உன்னைச்..சீ ராட்டு!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

28.10.2025

samedi 13 septembre 2025

கம்பன் விழா

 


கம்பன் கழகம் பிரான்சு

24 ஆம் ஆண்டுத்

தெய்வமாக்கவி 

கம்பன் விழா


இடம்:

Le Gymnase Victor Hugo

rue  Auguste Renoir

95140 Garges les Gonesse

France


நாள்:

28/09/2025
ஞாயிறு 15.00 மணிமுதல் 20.30 மணிவரை

அனைவரும் வருகவே! அருந்தமிழ் பருகவே!

 

jeudi 11 septembre 2025

ஓரொலி வெண்டுறை



ஓரொலி வெண்டுறை
 
அரசியலார்!
 

ஊழல் முதலைகளை உளமாரப் பாடி உவக்கும் புலவர்

சூழல் அனைத்தையும் சுருட்டுகின்ற தலைவ தம்மால்

ஏழை  துயர்நீங்க எள்ளளவும் வழியுண்டோ?

 

பூட்டியுள வீட்டைப் பொறிக்கிகள் தாம்கொண்டு சொந்த மாக்கி

நாட்டியுள சொத்து நாலிரு தலைமுறைக்கு வருமே! இவர்கள்

நாட்டிலுள வஞ்ச நரியெனச் சாற்றுகவே!

 

அடியாள் கொண்டாச்சி நடத்துவதா? அன்பின்றிக் கூர்மைக் கத்தி

தடியால் கொண்டாச்சி தள்ளுவதா? துடிதுடிக்க அழிவே நல்கும்

வெடியால் கொண்டாச்சி  மிரட்டுவதா? என்னாடே!

 

தலைவனின் இருதாள்கள் தழுவி நக்குகின்ற தொண்டன் தானே
கொலையனின் மிகுகொடியன்! கொள்ளை யிடுகின்ற கள்ளன்! பதவி
விலையனின் அடிவேரை வெட்டி வீழ்த்துகவே!


கால்நக்கிப் பதவி பெறுகின்ற கட்சித் தலைவன்! பத்தி

வேல்நக்கிப் பதவி பெறுகின்ற வெற்றுத் தொண்டன்! பணத்தில்

மேல்நக்கிப் பதவி விளைகின்ற என்னாடே!

 

மாடேயிலா நிலைமைக்கும்,  மனையேயிலா வீட்டுக்கும்

கடன்தருவார்! விளையும்

காடேயிலா உழவுக்கும், கடையேயிலாத் தொழிலிக்கும் 

கடன்தருவார்! சின்ன

ஏடேயிலாக் கணக்கெழுதி ஏப்பமிடும் என்னாடே!

 

நாட்டுப்பணம் என்ன? நல்லோர் பணமென்ன? நம்பித் தந்த  

காட்டுப்பணம் என்ன? கண்ணீர்ப் பணமென்ன? ஆட்டை போட்டு

வீட்டுப்பணம் ஆக்கும் விந்தை நாடிதுவே! 

 
முன்னே ஈரடிகள் ஆறு சீர்களையும் பின்னோர் அடி நான்கு சீர்களையும் பெற்றுச் சிறப்பில்லா  ஏழு தளையாலும் வந்த ஓரொலி வெண்டுறை.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
பாவலர் பயிலரங்கம், பிரான்சு.
11.09.2025

mercredi 10 septembre 2025

ஓரொலி வெண்டுறை

 


ஓரொலி வெண்டுறை

 

அடிமை மனிதன்!

 

அயலார் மொழியைப் போற்றிடுவான்!

……….அல்லும் பகலும் கற்றிடுவான்!

உயிராம் தமிழை மறந்திடுவான்!

……….உலகில் தன்னைப் புகழ்ந்திடுவான்!

புயலார் கடலே பொங்கு!

 

மையூட்டு மங்கையரின்

……….மார்பூட்டு மின்பத்தில் மயங்குந் தலைவன்!

கையூட்டுஞ் செல்வத்துள்

……….கலையூட்டும் பெருமனையிற் களிக்குந் தலைவன்!

பையூட்டும் வாக்குகளைப் பார்!

 

வெள்ளை யாடை கொள்ளைக் கூட்டம் வேண்டித் தொழுது

பல்லைக் காட்டும்! பாடிப் போற்றும்! பாதப் பற்றுக்[கு]

எல்லை இல்லை இவர்க்கு!

 

மதவெறி நிறவெறி மண்ணை மாய்க்கும்! மனிதா உன்றன்

மதிவெறி மனவெறி வாழ்வை மாய்க்கும்! மனிதங் குன்ற

விதிவெறி பிடித்தெழும் மிரண்டு!

 

திரைத்துறையில் இருப்பவரை

……….மனத்திரையில் பதிக்கின்ற அடிமைப் போக்கும்

இறைத்துறையில் இருப்பவரை

……….இறைவனெத் துதிக்கின்ற  மடமைப் போக்கும்

நிறைதுறையில் ஒளிர்ந்திடுமா நிலம்?

 

வாக்கேயிடப் பணமேபெறும்

……….மதியில்லா மனிதர்காள்! வாதும் துாதும்

நாக்கேயிடத் தொழுதேயெழும்

……….நரம்பில்லா மனிதர்காள்! நாட்டில் உம்மைத்

துாக்கேயிட நினைத்தேன்தினம் தொடர்ந்து!

 

சாதியைத்தலை மேல்சுமந்திடும்

……….தந்நலத்து வாதிகளே! ஒன்று சொல்வேன்

நீதியைத்தலை மேல்சுமந்திடும்

……….நிலையுற்றால் வாழ்வோங்கும்! இல்லை சங்கம்

ஊதியேத்தலை மேல்நெருப்பிடும் உணர்!

 

முன்னே ஈரடிகள் ஆறு சீர்களையும் பின்னோர் அடி மூன்று சீர்களையும் பெற்றுச்  சிறப்புடைய ஏழு தளையாலும் வந்த ஓரொலி வெண்டுறை.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

10.09.2025


வேற்றொலி வெண்டுறை

 


வேற்றொலி வெண்டுறை


கீழடி

 

மூத்த குடியாகும் மொழியுலகத் தாயாகும் கீழடி!

காத்த நற்புகழைக் கணக்காக மறைத்திடுவார்!

ஆத்தாடி துாங்காதே அவர்நம்மைப் புதைத்திடுவார்!

 

நேர்கொண்ட சாலைச் சீர்கொண்ட செந்தமிழின் கீழடி!

வேர்கொண்ட தமிழை விரைந்திங்கு மறைத்திடுவார்!

கார்கொண்ட குழலி! போர்கொண்டு வென்றிடுவோம்!

 

தொன்மை மிக்குடைய துாயதமிழ் மாண்பொளிரும் கீழடி!

வன்மைத் தமிழுடைய வரலாற்றை மறைத்திடுவார்!

நன்மை மனத்தவளே! நம்மொழியைக் காத்திடுவோம்!

 

அலைகடல் அழித்தென்ன? அருந்தமிழின் ஆண்டுரைக்கும் கீழடி!

கொலைவெறி கொண்டுள்ள கொடுங்கொடியர் மறைத்திடுவார்!

கலைவிழிக்  காரிகையே! காத்திடவே முன்னிற்போம்!

 

பண்டைமிகு  தமிழினமே மண்ணில் முதலென்னும் கீழடி!

மண்டைக் கொழுப்புடையோர் வரலாற்றை மறைத்திடுவார்!

கெண்டை விழியழகே! நம்அண்டைப் பகையொழிப்போம்!

 

அன்னைத்தமிழ் மொழியின் முன்னைப் புகழ்சாற்றும் கீழடி!

தன்னைப் பெரிதென்னும் தருக்கர் மறைத்திடுவார்!

பொன்னை நிகர்த்தவளே! இன்றே புறப்படுவோம்!


ஓங்குந்தமிழ் காத்த ஒப்பிற்றமிழ் பூத்த கீழடி!

வீங்கு வெறியுடைய வீணர் மறைத்திடுவார்!

தாங்கு புலிக்கொடியைத் தீமை அகன்றிடுமே!

 

முன்னோர் அடி ஐந்து சீர்களையும் பின்னிரண்டு அடிகள் நான்கு சீர்களையும் பெற்றுச் சிறப்பில்லா ஏழு தளையாலும் வந்த  மூன்றடி வேற்றொலி வெண்டுறை.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

10.09.2025

samedi 6 septembre 2025

முனைவர் கி. சிவகுமார் வாழியவே!

 

திருவாவடுதுறை ஆதீனப் புலவர்

முனைவர் கி. சிவகுமார் வாழியவே!

 

செஞ்சொல் வேண்டும் பாட்டுக்குச்

சீர்ச்சொல் தந்த நம்முனைவர்

வெஞ்சொல் வேண்டாம் பாட்டுக்கு

வேர்ச்சொல் கண்டு பாடுகவே!

தஞ்சொல் யாவும் அமுதுாறிச்

சாற்றும் ஆற்றல் வாழியவே!

அஞ்சொல் தாசன் வியக்கின்றேன்

ஆகா வென்று புகழ்கின்றேன்!

 

முல்லை எங்கள் ஊரில்லை!

முத்தாய் மின்னும் அருஞ்சொல்லை

எல்லை யில்லா வண்ணத்தில்

எடுத்தே உரைத்த நம்முனைவர்!

கொல்லைப் புறத்துக் கிளிக்கூட்டம்

கொறித்தே உண்ணுஞ் சுவையாக

நெல்லை யப்பன் திருவருளால்

நேயத் தமிழை யாமுண்டோம்!

 

சேல்கொள் வாணன் நற்சீரைச்

சீர்கொள் வண்ணம் நம்முனைவர்

பால்கொள் சுவையாய்ப் படைத்திட்டார்!

பண்கொள் இனிமை யாமுற்றோம்!

வேல்கொள் வேந்தன் அருளென்பேன்!

வேர்கொள் தமிழின் புகழென்பேன்!

மால்கொள் மங்கை யழகாக

மனங்கொள் தமிழைக் கற்றோமே!

 

நம்பி தந்த அகப்பொருளை

நம்பி நமக்குக் கொடுத்திட்டார்!

தும்பி போன்று பன்மலரில்

துய்த்துத் தேனை அளித்திட்டார்!

தம்பி தங்கை அனைவருமே

தண்மைத் தமிழைச் சுவைத்திட்டோம்!

எம்பி நின்று கவிகேட்டேன்!

ஏற்றங் கண்டு புகழ்ந்திட்டேன்!

 

தஞ்சை வாணன் கோவையினை

நெஞ்சம் மகிழ உரைத்திட்டார்!

நஞ்சை வயலின் விளைவாக

நல்ல தமிழைப் படைத்திட்டார்!

பஞ்சை ஊதிப் விடுவதுபோல்

பாட்டின் அரசன் பறக்கின்றேன்!

மஞ்சை உலவும் வானளவு

வாழ்த்தை வழங்கி வணங்குகிறேன்!

 

சொல்லின் சந்தம் விளையாடத்

துாய புலமை விளையாட

இல்லின் இன்பம் விளையாட

இதயக் காதல் விளையாடக்

கல்லின் உடலில் நற்சிற்பி

கலையைத் தந்து விளையாட

வில்லின் கூர்மைப் பாட்டரசன்

வெற்றி பாடி வாழ்த்துகிறேன்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

06.09.2025

dimanche 31 août 2025

வேற்றொலி வெண்டுறை

 

வேற்றொலி வெண்டுறை

 

        வேற்றொலி வெண்டுறை முன் சில அடிகள் ஓரொசையாகவும், ஏனைய அடிகள் வேறோர் ஓசையாகவும் வரும். [முன்னடிகள் பல ஓசையிலும் பின்னடிகள் பல ஓசையிலும் வருதலும் வேற்றொலி வெண்டுறையாம்]

 

மூன்றடி வேற்றொலி வெண்டுறை

 

கண்ணன் திருவடியைக் கண்டு களித்திடவே நாளும்

எண்ணம் ஒன்றி இதயம் மலர்ந்திடவே

தண்ணம் பாக்கள் தழைத்துச் செழித்திடுமே!

                         [பாட்டரசர் கி. பாரதிதாசன்] 31.08.2025

 

        இது மூன்றடியாய், முன்னடி ஐஞ்சீரும் பின் இரண்டடிகள் நாற்சீரும் முதலடி சிறப்பில் இயற்சீர் வெண்டளையும் பின் இரண்டடிகள் சிறப்புடைய நேரொன்றாசிரியத் தளையும் வந்த வேற்றொலி வெண்டுறை.

 

நான்கடி வேற்றொலி வெண்டுறை

 

சற்குருவாம் அவர்பலரில் தலைமைபெறு பழனிமலை

        தண்ட பாணி

நிற்குநிலை யுணர்ந்தவன்றன் எழுத்தாறுஞ் சந்ததமும்

        நிகழ்த்த வல்லார்

கற்கு..நா வலர்பெருங் கருணை மாதவர்

விற்குனித் தமர்செயும் விறற்கை வீரரே

                         [அறுவகை இலககணம் மேற்கோள் பாடல்]

 

இது நான்கடியாய், முன்னுள்ள இரண்டடிகள் அறுசீராய்ப் பின்னுள்ள இரண்டடிகள் நாற்சீராய் முன்னடிகள் சிறப்புடைய கலித்தளையும் பின்னடிகளில் சிறப்புடைய நிரையொன்றாசிரியத் தளையும் வந்த வேற்றொலி வெண்டுறை.

 

ஐந்தடி வேற்றொலி வெண்டுறை

 

மாலாயுதம் அருள்கொடுக்கும்! முருகன் கொண்ட

வேலாயுதம் பகையுடைக்கும்! வேந்தன் இராமன்

நீலாயுதம் குறியெரிக்கும்! நேயப் புலவர்

கோலாயுதம் புவிபுரட்டும்! கொஞ்சும் பெண்ணுன்

சேலாயுதம் பேசும் சிரித்து!

                         [பாட்டரசர் கி. பாரதிதாசன்] 31.08.2025

 

இது ஐந்தடியாய், முன்னுள்ள நான்கடிகள் நாற்சீராய், ஈற்றடி முச்சீராய், நான்கடிகள் சிறப்பில் ஒன்றிய வஞ்சித்தளையும் ஈற்றடி சிறப்பில் ஒன்றாத வஞ்சித்தளையும் வந்த வேற்றொலி வெண்டுறை.

ஆறடி வேற்றொலி வெண்டுறை

 

மூவேந்தர் முன்வாழ்ந்த முத்தமிழே! மூத்தவளே!

        மூவா தென்றும்

நாவேந்தர் நாவினிலே நடம்புரிந்த நற்றமிழே!

        நாளும் வல்ல

பாவேந்தர் பாடிநின்ற பசுங்குயிலே! பைந்தமிழே!

        பரிவோ டுன்னைப்

பூவேந்திப் புனைகின்றேன்! புகழேந்தி வந்திடுவாய்!

மாவேந்தி மணந்திடுவாய்! மதுவேந்திச் சுரந்திடுவாய்!

காவேந்திக் கமழ்ந்திடுவாய்! கால்தொட்டுத் தொழுகின்றேன்!

                         [பாட்டரசர் கி. பாரதிதாசன்] 31.08.2025

 

இது ஆறடியாய், முன்னுள்ள மூன்றடிகள் அறுசீராய்ப், பின்னுள்ள மூன்றடிகள் நாற்சீராய்  முதலில் சிறப்புடைய வெண்டளையும் ஈற்றில் சிறப்புடைய கலித்தளையும் வந்த வேற்றொலி வெண்டுறை.

ஏழடி வேற்றொலி வெண்டுறை

 

வளர்ந்தோங்கும் தென்னைகளும் வாழைகளும் நிறைந்திருக்கும்!

      வாய்க்கால் பாய்ந்தே

உளந்தேங்கும் இன்பத்தை ஊரார்க்குத் தான்வழங்கும்!

        உண்மை ஒளிரும்!

கழுத்துாரை யாளும் கருணைமிகு தாயால்

எழுத்துாரை யாளும் எழிற்புலமை மேவும்!

இழுத்துாரை யாளும் இவளடிகள் போற்றக்

கொழுத்துரை யாளும் கோலமிகு காட்சி!

பழுத்துாரை யாளும் பைந்தமிழின் மாட்சி!

                         [பாட்டரசர் கி. பாரதிதாசன்] 31.08.2025

 

        இது ஏழடியாய், முன்னுள்ள ஈரடிகள் அறுசீராய்ப், பின்னுள்ள நான்கடிகள் நாற்சீராய், இரண்டடிகள் சிறப்புடைய வெண்டளையும் நான்கடிகள் சிறப்பில் வெண்டளையும் வந்த வேற்றொலி வெண்டுறை. விதிவிளக்காய் இரண்டு விகற்பத்தாலும் இப்பாடல் அமைதலும் உண்டு. [பல விகற்பமும் இரண்டுக்கு மேற்பட்ட ஓசையும் வந்துள்ள வெண்டுறைகள் நுால்களில் காண்கிறோம். அவை சிறப்பில்லை என்றுணர்வோம்]

 

ஒத்த நுாற்பாக்கள்

 

ஐந்தாறு அடியின் நடந்தவும் அந்தடி

ஒன்றும் இரண்டும் ஒழிசீர்ப் படுநவும்

வெண்டுறை நாமம் விதிக்கப் படுமே 

                              [அவிநயனார்]

 

பெற்றவடி ஐந்தினும் பிறவினும் பாட்டாய்

இற்ற அடியும் ஈற்றயல் அடியும்

ஒன்றும் இரண்டும் நின்ற வதன்சீர்

கண்டன குறையின் வெண்டுறை யாகும்

                              [மயேச்சுரர்]

 

அடிஐந் தாகியும் மிக்கும் ஈற்றடி

ஒன்றும் இரண்டும் சீர்தப வரினும்

வெண்டுறை என்னும் விதியின வாகும்

                              [காக்கை பாடினியம்]

 

மூன்றிழிபு இழிபு ஏழுயர்வாய்

ஆன்றடி தாம்சில அந்தம் குறைந்திறும் வெண்டுறையே

                              [யாப்பருங்கல் காரிகை - 28]

 

மூன்றடி முதலா ஏழடி காறும்வந்து

ஈற்றடி சிலசில சீர்குன் றினும்அவை

வேற்றொலி விரவினும் வெண்டுறை ஆதலும்

                              [இலக்கண விளக்கம் - 731]

 

மூன்றிழிவு ஏழடிபொருந்தி

ஆன்றவந் தங்குறையின் வெண்டுறை யென்பர்

                              [வீரசோழியம் - 121]

 

வெண்டுறை யன்னவை விரவினும் மூன்றடி

ஆதி ஏழடி அந்தமாய் ஈற்றிற

சிலவடி தஞ்சீர் சிலகுறைந் திறுமே

                              [தொன்னுால் விளக்கம் - 239]

 

மூன்றடி முதலாய் ஏழடி காறும்வந்து

ஈற்றடி சிற்சில சீர்தப நிற்பினும்

வேற்றொலி விரவினும் வெண்டுறை யாகும்

                      [முத்து வீரியம்  21]

ஈரடி பேதித்து இசையும்நா லடிப்பா

வேற்றொலி யாமென விளம்பினர் சிலரே

                      [அறுவகையிலக்கணம் - 44]

மூன்றடி முதலாய் ஏழடி வரையில்

ஈற்றடி அயலடி சீர்பல குறைந்து

நாற்சீர் அடிமுதல் எல்வகை அடியினும்

வேற்றொலி ஓரொலி வருவன வெண்டுறை

                         [யாப்பு விளக்கம், புலவர் ப. எழில்வாணன்]

 

பெருமை ஏழடி சிறுமை மூவடி

அருமை யாக அளவும் நெடிலும்

மிக்கும் சீர்பெறும் மேலா மடிகள்! 

தொக்கும் ஈற்றடி முச்சீர் குன்றா!

முன்னைத் தம்மில் பின்னைத் தாமே

ஒன்றும் பலவும் குன்றும் சீர்வரும்!

இன்னரும் ஓரொலி எல்லா அடிக்கும்

முன்னிரு சீர்கள் ஒன்றித் தளையுறும்!

மேலே ஓரொலி கீழே ஓரொலி

ஏல வருதல் கோல வேற்றொலி!

எல்லாச் சீரும் ஈரேழ் தளையும்

வல்லமை யேற்று வாழும் வெண்டுறை! 

                              [பாட்டரசர் கி. பாரதிதாசன்] 31.08.2025

பாட்டரசர் கி. பாரதிதாசன்

31.08.2025

ஓரொலி வெண்டுறை

 

மூன்றடி ஓரொலி வெண்டுறை

 

பரசிருக்கும் தமிழ்மூவர் பாட்டிருக்கும் திருமன்றில்

        பரசொன் றேந்தி

அரசிருக்கும் பெருமானார்க்[கு] ஆட்செய்யர் என்செய்வார்

முரசிருக்கும் படைநமனார் முன்னாகும் அந்நாளே

                                                  [சிதம்பரச் செய்யுட்கோவை மேற்கோள்]

 

பொன்னேந்திப் பொருளேந்திப் புவிபோற்றும்

புகழேந்திப் பூத்த வாழ்வு

துன்பேந்திக் கிடக்கிறது! துணையின்றித் தவிக்கிறது!

அன்பேந்தி அணைத்தவளே! அழவைத்துப் போனதுமேன்?

                         [பாட்டரசர் கி. பாரதிதாசன்] 31.08.2025

     
           இவை முதலடி அறுசீராய் ஏனையடி நாற்சீராய் அடிதோறும் முதல் இருசீர்கள் சிறப்புடைய கலித்தளையை வந்த ஓரொலி வெண்டுறை.

நான்கடி  ஓரொலி வெண்டுறை

 

படர்தரும்வெவ் வினைத்தொடர்பால் பவத்தொடப்பப்

        பவத்தொடர்பால் படரா நிற்கும்

விடலரும்வெவ் வினைத்தொடர்பவ் வினைத்தொடர்புக்கு

        ஒழிப்புண்டே வினையேல் கம்மா

விடர்பெரிது முடையேன்மற் றென்செய்கேன் என்செய்கேன்

அடலரவ மரைக்கசைத்த அடிகேளோ அடிகேளோ

                         [சிதம்பரச் செய்யுட்கோவை மேற்கோள்]

        இது நான்கடியாய், முதலடியிரண்டும் அறுசீராய் ஏனையடி நாற்சீராய் அடிதோறும் முதல் இருசீர்கள் சிறப்புடைய கலித்தளையால் வந்த ஓரொலி வெண்டுறை.

 

ஐந்தடி ஓரொலி வெண்டுறை

 

வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும்

உறவுற வருவழி உரைப்பன உரைப்பன்மன்

செறிவுறும் எழிலினர் சிறந்தவர் இவர்நமக்கு

அறிவுறு தொழிலரென் றல்லவை சொல்லன்மின்

பிறபிற நிகழ்வன பின்

                         [யாப்பருங்கல விருத்தி மேற்கோள் பாடல்]

 

திருமுகம் எனதுயிர் ஏட்டினில் மின்னும் மின்னும்

அருமகம் நினைவினை அழகுடன் பின்னும் பின்னும்

பெருமகம் உடையவள் பிரிந்தெனைச் சென்றாள்!

கருமகம் நிலையென இருமகம் இருளும்!

செருவகம் புரிந்திடச் செல்லகம் பூக்கும்!

                         [பாட்டரசர் கி. பாரதிதாசன்] 31.08.2025

 

        முதல் பாடல் ஐந்தடியாய் ஈற்றடி ஒன்று ஒரு சீர் குறைந்து அடிதோறும் முதல் இருசீர்கள் சிறப்புடைய நிரையொன்றாசிரியத் தளையால் வந்த ஓரொலி வெண்டுறை. இதில் கமழ்கண்ணி என்ற  காய்ச்சீரை விளச்சீர் ஓசையாகக் கொள்ளுதல் முன்னோர் மரபு. அஃதாவது கருவிளம் வர வேண்டுமிடத்தில் புளிமாங்காய் வரும். கூவிளம் வரவேண்டுமிடத்தில் தேமாங்காய் வரும். இவை ஒற்று நீ்ங்க எண்ணப்படும் எழுத்தெண்ணிக்கையில் ஒத்த சீர்களாதலின் இவ்வமைதியைச் சான்றோர் ஏற்றனர். இதனைத் [தொல்காப்பியரும் வெண்சீர் ஈற்றசை நிரையசை இயற்றே - தொல். செய் 29]  என்ற நுாற்பாவால் விளக்கியுள்ளார்.

 

        இரண்டாம் பாடல் ஐந்தடியாய், முன்னிரண்டு அடிகள் ஐஞ்சீர் பெற்று, ஈற்று மூவடிகள் நான்கு சீர் பெற்று அடிதோறும் முதல் இருசீர்கள் சிறப்புடைய நிரையொன்றாசிரியத் தளையால் வந்த ஓரொலி வெண்டுறை.

 

ஆறடி  ஓரொலி வெண்டுறை

 

ஓரொலி வெண்டுறை ஓதி உணர்த்திடவே 

        வேல்கொண்டு வாராய்!

தாரொளி வெண்டுறைத் தாளம் தவழ்ந்திடவே

        தமிழ்கொண்டு வாராய்!

சீரொலி வெண்டுறை செப்பிக் களித்திடவே

        தேர்கொண்டு வாராய்!

பேரொளி வெண்டுறை பேணிப் புனைந்திடவே

        நார்கொண்டு வாராய்!

ஏரொளி வெண்டுறை என்றன் முருகா..வுன்

பாரொளிப் பாரதி தாசன் படைத்தனனே!

                         [பாட்டரசர் கி. பாரதிதாசன்] 31.08.2025

 

இது ஆறடியாய், முன் நான்கு அடிகள் அறுசீராய்ப் பின் இரண்டடிகள் நாற்சீராய் அடிதோறும் முதல் இருசீர்கள் சிறப்புடைய இயற்சீர் வெண்டளையைப் பெற்று வந்த ஓரொலி வெண்டுறை.

 

ஏழடி ஓரொலி வெண்டுறை

 

கன்னல் தமிழே! கம்பன் அமுதே!

        கருணை பொழிந்திடுவாய்!

மின்னல் தமிழே! மீட்டும் இசையே!

        மேன்மை விளைத்திடுவாய்!

இன்னல் துடைத்தே இன்பம் கொடுத்தே

        என்றும் காத்திடுவாய்!

பின்னல் கலையாய்ப் பினையும் கவியைப்

        பேணிக் கூத்திடுவாய்!

நன்னல் மனத்தால் நலியும் என்னை

        நாளும் அணைத்திடுவாய்!

மன்னல் புகழை மன்றில் வாரி அளித்திடுவாய்!

மன்னர் கவியாம் மண்ணை யாள வரந்தருவாய்!

                         [பாட்டரசர் கி. பாரதிதாசன்] 31.08.2025

 

        இது ஏழடியாய், முன் ஐந்தடிகள் அறுசீராய்ப் பின் இரண்டடிகள் ஐந்து சீராய் அடிதோறும் முதல் இருசீர்கள் சிறப்புடைய இயற்சீர் வெண்டளையைப் பெற்று வந்த ஓரொலி வெண்டுறை.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

31.08.2025