mercredi 25 août 2021

பாவலர் சுப. முருகானந்தம் வாழியவே!

 


பாவலர் சுப. முருகானந்தம் வாழியவே!

 

தந்தை மொழியைத் தலையேந்தித்

   தாயின் வழியை உளமேந்திக்

கந்தை யுலகைச் சரிசெய்யும்

   கழகத் தொண்டர்! தமிழ்மறவர்!

சிந்தை குள்ளே செந்தமிழின்

   சீரை யணிந்து வாழ்கின்றார்!

முந்தை மரபைக் காக்கின்ற

   முருகா னந்தர் வாழியவே!

 

கறுப்புச் சட்டை அணிந்தாலும்

   கருணை யுள்ளம் பனிவெண்மை!

நெருப்புப் பார்வை கொண்டாலும்

   நெஞ்சுக் குள்ளே குளிரூற்று!

இரும்புக் கொள்கை உற்றாலும்

   கரும்புக் கவிதை தரும்திருவாய்!

பருந்து போன்றே இலக்கெய்தும்

   முருகா னந்தர் வாழியவே!

 

வேகம் இருக்கும்! போர்க்களத்தில்

   வெற்றி இருக்கும்! கவிபாடும்

தாகம் இருக்கும்! வழிநடத்தும்

   தலைமை இருக்கும்! உண்மையொளிர்
ஆகம் இருக்கும்! அமுதாக

   அன்பு சுரக்கும்! தமிழ்மீது

மோகம் இருக்கும்! பேறுடைய

   முருகா னந்தர் வாழியவே!

 

புதுமை மின்னும் சீருடையார்!

   புரட்சி மின்னும் பேருடையார்!

பொதுமை மின்னும் காப்புடையார்!

   புலமை மின்னும் யாப்புடையார்!

மது..மை மின்னும் அடியுடையார்!

   மாட்சி மின்னும் குடியுடையார்!

முதுமை மின்னும் பெரியாரின்

   முருகா னந்தர் வாழியவே!

 

பயிற்சி யரங்கில் என்மனத்துள்

   படர்ந்து நின்றார்! எந்நொடியும்

அயர்ச்சி யரங்கில் சேராத

   ஆற்றல் கொண்டார்! தாவுகின்ற
பெயர்ச்சி யரங்கில் இணையாமல்

   பெருமை கண்டார்! இனம்வாழ

முயற்சி யரங்கில் முன்னிற்கும்
   முருகா னந்தர் வாழியவே!

 

சொத்தாய்ப் பாக்கள் ஐந்நுாறு

   சூட்டி மகிழ்ந்தார்! பூத்தாடும்

கொத்தாய் மணக்க நன்னெறியைக்

   கூட்டிப் புகழ்ந்தார்! வயல்செழிக்கச்

சத்தாய்க் கிடைத்த உரத்துயர்வைத்

   தாங்கித் திகழ்ந்தார்! எந்நாளும்

முத்தாய்ப் பாடும் பாவலராய்

   முருகா னந்தர் வாழியவே!

 

25.08.2021

Aucun commentaire:

Enregistrer un commentaire