dimanche 16 avril 2017

சித்திரை [பகுதி - 1]

சித்திரைக் கவியரங்கம்
  
சித்திரைப் பெண்ணே! சித்திரைப் பெண்ணே!
சிந்தை புகுந்தவளே!
முத்திரை யிட்டு முத்தமிழ் ஓங்க
மோகம் புரிந்தவளே!
  
இத்தரை மீதில் என்றமிழ் மக்கள்
என்று இணைவாரோ?
நித்திரை நீங்கி நீள்புகழ் காண
நின்று உழைப்பாரோ?
  
எத்தடை வந்தும் எம்படை வெல்ல
ஏற்றங் கொடுப்பாயே!
அத்திரை கடலாய் அவ்விரி வானாய்
ஆற்றல் அளிப்பாயே!
  
நாட்டைச் சுரண்டும் நரிகளை நாங்கள்
நம்பி இருந்தோமே!
வீட்டை இழந்தும் விதியை நினைந்தும்
வெம்பித் துடித்தோமே!
  
கோட்டை புகுந்தார் கொள்ளை அடித்தார்
கொள்கை துறந்தாரே!
வேட்டை புரிந்த வெறிப்புலி போன்றே
நாட்டை அழித்தாரே!
  
தாய்மொழிப் பற்றைத் தம்மினப் பற்றைத்
தமிழர் இழந்தாரே!
வாய்மொழி யாவும் காய்மொழி யாகி
வரண்டு விழுந்தாரே!
  
உழவரின் வாழ்வு உறுதுயர் நீங்க
உள்ளம் தரித்திடுவாய்!
அழகுடன் காவிரி அணையைத் திறந்து
அல்லல் அகற்றிவாய்!
  
அடிதடிக் குண்டர் ஆட்சியில் ஏறி
ஆடிக் களிக்கின்றார்!
கொடுநரிக் கூட்டர் கொழுப்பிங் கேறிக்
குவிந்து கிடக்கின்றார்!
  
வாக்கிடும் வேலை வந்துறும் காசு
வாழ்வைச் சிதைத்திடுமே!
தாக்கிடும் பகைமுன் தாழ்ந்திடும் நிலையேன்
சால்பைப் புதைத்திடுமே!
  
காலைப் பிடிப்பார்! கயவரைத் தொழுவார்!
காறி உமிழ்ந்திடுவாய்!
மாலைகள் ஏற்க மந்தையாய் நிற்கும்
மடமை எரித்திடுவாய்!
  
காவி அணிந்தே காதல் புரிந்தே
கடவுள் எனச்சொல்வார்!
கூவி அழைத்தே கூடிக் களித்தே
கொலைகள் புரிந்திடுவார்!
  
சாதியின் பிரிவைச் சாத்திரப் பிரிவைத்
தமிழர் தலைக்கொண்டார்!
சோதியின் நெறியைத் துாயவர் வழியைச்
சூடப் பயங்கொண்டார்!
  
மண்ணிதில் மூத்த மாண்புடைத் தமிழர்
மரபை மறப்பதுவோ?
புண்ணதில் புரளும் புழுவெனத் தமிழர்
புழுத்து இழிவதுவோ?
  
செம்மொழித் தாயின் திண்மையைச் செப்பிச்
சீரைப் புகட்டுகவே!
வெம்பழிப் போக்கை வீண்ணுறும் வாழ்வை
வெட்டி விரட்டுகவே!
  
அன்பொளிர் வண்ணம் அறமொளிர் வண்ணம்
அழகை அணிந்திடுவாய்!
இன்பொளிர் வண்ணம்! இசையொளிர் வண்ணம்
ஏற்றம் அளித்திடுவாய்!
  
பண்ணறிவு ஏந்திப் பாடிய பாட்டைப்
பாரில் முழங்கிடுவாய்!
நுண்ணறிவு ஏந்தித் தண்டமிழ் மக்கள்
மின்னப் புகழ்தருவாய்!

இன்னும் வளரும்.....
  
பாட்டின் இலக்கணம்
  
சந்த மாத்திரையில் கணக்கிட்டு எழுதிய இசைப்பாடல்.
  
5+4+5+4+5+7 என்ற சந்த மாத்திரையை ஒவ்வொரு அடியும் பெற்றுள்ளது. ஈரடி ஒரு கண்ணியாகும். ஈரடியும் ஓரெதுகை பெறவேண்டும். ஈரடியும் இயைபு பெறவேண்டும்.
சீரின் ஈற்றில் உள்ள குறில் 2 மாத்திரையைப் பெறுவதும் உண்டு.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
16.04.2017

2 commentaires: