mercredi 7 janvier 2026

சாற்றுகவி

 

பாவலர்மணி வா. சண்முகம் எழுதிய

வெண்பாத் திரட்டு நுாலுக்குச்

சாற்றுகவி

 

வெண்பா அழகில் விருப்பம் மிகுந்தோங்க

நண்பா படி..இந்த நன்னுாலைப் - பண்பாடும்

ஆற்றல் நிறைந்தோங்கும்! அன்புடை..வா. சண்முகனார்

போற்றப் புனைந்தார் புகழ்!

 

பாட்டின் இயலறிந்தும், பாடும் வளமறிந்தும்,

ஏட்டின் எழிலறிந்தும் தீட்டிய..நுால் - மூட்டுமே

காட்டின் மலர்வாசம்! கற்றுக் களிக்குமனம்

நாட்டில் பெறுமே நலம்!

 

ஊரோங்கப் பாரின் உறவோங்க நெஞ்சத்துள்

நேரோங்க நெய்திட்ட இந்நுாலால் - சீரோங்கப்,

பெற்றோர் பெயரோங்க உற்ற..வா. சண்முகனார்

கற்றோர்க்[கு] அளித்தார் களிப்பு!

 

எங்கும் தமிழ்பரவ என்றும் பணியாற்றிப்

சங்கப் புலமைத் தகைபோற்றித் - தங்கமென

வெண்பாத் திரட்டு விளைத்த..வா. சணமுகனார்

பண்பால் அடைந்தார் பயன்!

 

தண்ணிலா முற்றத்தில் தத்தி விளையாடி

எண்ணிலா ஏற்றம் இசைத்திட்டார்! - கண்ணுலாக்

காட்சியைக் கட்டிக் கவிதந்தார்! சண்முகனார்

மாட்சியை வாழ்த்துமே மண்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

07.01.2026

jeudi 1 janvier 2026

புத்தாண்டு வாழ்த்து 2025

 


உலக உயிர்கள் உவப்புற

ஆங்கிலப் புத்தண்டு வாழ்த்து

 

அன்பு நிறைந்தோங்கப் பண்பு படர்ந்தோங்க

இன்பக் கலைக்கல்வி நன்றோங்க – மன்பதை

தாங்கிய தண்மைத் தமிழோங்க நல்வாழ்வை

ஆங்கில ஆண்டே அருள்!

 

ஒற்றுமை யோங்க உலக உறவோங்க

நற்றுணை நட்பு நனியோங்கப் – பொற்பெலாம்

தந்துள மோங்கத் தமிழோங்க நல்வாழ்வை

வந்துள ஆண்டே வழங்கு!

 

விண்ணக ஞானம் விளைந்தோங்க, வள்ளலென

வண்ணக மோங்க, வளமோங்கப், – பெண்ணோங்கப்

பண்ணகப் பைந்தமிழால் பாரோங்க வந்திடுவாய்

மண்ணக ஆண்டே மகிழ்ந்து!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

01.01.2026

vendredi 21 novembre 2025

ஓம் ஓம் ஓம்

 


ஓம்.. ஓம்.. ஓம்

 

கலமுடைந்[து] ஆழ்கடலில் கத்துகிறேன்! என்மெய்

பலமுடைந்து சோர்ந்தேன்! பரமன் - அலையுடைந்து

சென்றதுபோல் பாதை தெரிந்திடுமே! ஓம்..ஓம்..ஓம்..

என்றதுமே நீங்கும் இடர்!

 

காக்கும் வழியின்றிக் கத்துகிறேன்! முன்வினைகள்

தாக்கும்! துணையின்றித் தத்துகிறேன்! - வாக்கற்ற

கோது..மன நீங்கிக் குளிர்ந்திடுமே! ஓம்..ஓம்..ஓம்..

ஓதுமனம் காணும் ஒளி! 

 

பொய்யர் உறவால் புழுங்கி மனநொந்தேன்!

மெய்யர் எதிர்ப்பால் மெலிவுற்றேன்! - உய்வின்றி

வாழ்ந்த நிலைமாறும்! வாய்..மனம் ஓம்..ஓம்..ஓம்..

ஆழ்ந்த ஒளியால் அறி!

 

திருடும் தொழிலுற்றுச் சேர்த்த வளங்கள்

உருளும்! உனையுருட்டும்! உள்ளம் - கருகுதுயர்

முற்றும் ஒழிய மொழிந்திடுவாய் ஓம்..ஓம்..ஓம்..

பற்றும் பரம பதம்!

 

அடியாள் பலர்கொண்டே ஆடிய ஆட்டம்

இடியாய் விழும்நம் மிடமே! - படிபடியாய்

வந்த வினைநீங்கும்! வாய்திறந்[து] ஓம்..ஓம்..ஓம்..

தந்த ஒலியே தவம்!

 

பட்ட அடியென்ன? நட்ட வினையென்ன?

சுட்ட நெருப்பென்ன? துன்பென்ன? - இட்டவென்

ஆணைத் திமிரென்ன? அத்தனையும் ஓம்..ஓம்..ஓம்..

ஆனை முகனே அகற்று!

 

வறுமை வதைப்பட்டு வாழ்வுநிலை கெட்டுக்

கருமை மனமுற்றுக் காய்ந்தேன்! - ஒருமை

உளங்கொண்டு பாடுகிறேன் உன்னை!ஓம்.. ஓம்..ஓம்..

வளங்கொண்டு ஞானம் வழங்கு!

 

பாட்டரசா வென்று பழித்திடுவார்! வீண்வெற்று

வேட்டரசா வென்று வெறுத்திடுவார்! - நாட்டரசா!

ஏட்டரசா! உன்முன் இரங்குகிறேன்! ஓம்..ஓம்..ஓம்..

வீட்டரசா தீராய் வினை!

 

நாடி நலிவுற்றேன்! நம்பிப் பறிபோனேன்!

கூடிக் குணங்கெட்டேன்! குன்றினேன்! - வாடியே

நிற்கின்றேன்! அத்தனையும்  நீக்கிடுவாய்! ஓம்..ஓம்..ஓம்..

கற்கின்றேன் உள்ளம் கனிந்து!

 

ஆசையலை சிக்கி அழிவுற்றேன்! நெஞ்சத்துள்

வேசையலை சிக்கி வினையுற்றேன்!- மாசெல்லாம்

தங்கும் அகமுற்றேன்! தாழ்வுற்றேன்! ஓம்..ஓம்..ஓம்..

தொங்குங் கரங்கொண்டு துாக்கு!

 

எங்குக் குறைவிட்டேன்? என்ன பிழைவிட்டேன்?

இங்குச் சுழலும் எதிர்ப்பலைகள்! - தங்கு

தடையின்றித் தண்டமிழைத் தாராய்!ஓம்.. ஓம்..ஓம்..

இடையின்றி வேண்டும் எழுத்து!

 

அம்மைத் தமிழ்கொண்டு தும்பை மலரிட்டேன்!

வெம்மை வினைகளை வேரறுப்பாய்! - மும்மை

மலம்போக்கிக் காத்திடுவாய்! வாழ்வில்..ஓம் ஓம்..ஓம்..

நலந்தேக்கி ஞானம் நவில்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

27.08.2025