பாவலர்மணி வா.
சண்முகம் எழுதிய
வெண்பாத் திரட்டு
நுாலுக்குச்
சாற்றுகவி
வெண்பா
அழகில் விருப்பம் மிகுந்தோங்க
நண்பா
படி..இந்த நன்னுாலைப் - பண்பாடும்
ஆற்றல்
நிறைந்தோங்கும்! அன்புடை..வா. சண்முகனார்
போற்றப்
புனைந்தார் புகழ்!
பாட்டின்
இயலறிந்தும், பாடும் வளமறிந்தும்,
ஏட்டின்
எழிலறிந்தும் தீட்டிய..நுால் - மூட்டுமே
காட்டின்
மலர்வாசம்! கற்றுக் களிக்குமனம்
நாட்டில்
பெறுமே நலம்!
ஊரோங்கப்
பாரின் உறவோங்க நெஞ்சத்துள்
நேரோங்க
நெய்திட்ட இந்நுாலால் - சீரோங்கப்,
பெற்றோர்
பெயரோங்க உற்ற..வா. சண்முகனார்
கற்றோர்க்[கு]
அளித்தார் களிப்பு!
எங்கும்
தமிழ்பரவ என்றும் பணியாற்றிப்
சங்கப்
புலமைத் தகைபோற்றித் - தங்கமென
வெண்பாத்
திரட்டு விளைத்த..வா. சணமுகனார்
பண்பால்
அடைந்தார் பயன்!
தண்ணிலா
முற்றத்தில் தத்தி விளையாடி
எண்ணிலா
ஏற்றம் இசைத்திட்டார்! - கண்ணுலாக்
காட்சியைக்
கட்டிக் கவிதந்தார்! சண்முகனார்
மாட்சியை
வாழ்த்துமே மண்!
பாட்டரசர்
கி. பாரதிதாசன்
07.01.2026
Aucun commentaire:
Enregistrer un commentaire