samedi 26 juillet 2025

புகழ்பாடும் நுழைவாயில்

 

புகழ்பாடும் நுழைவாயில்

 

மொழியோங்கத் தொண்டாற்றும், உயர்வை நல்கும்,

        மொய்த்தபுகழ்த் தமிழ்ச்சிறகம் தமிழர் தம்மின்

வழியோங்க வளமோங்கத் திட்டம் தீட்டி

        வரலாற்றைத் தானெழுதும்! மூன்றாம் ஆண்டில்

விழியோங்கச் சிலையமைக்கும்! அந்த மானில்

        விழாநடத்திச் சீர்படைக்கும்! உலக மெங்கும்

பொழிலோங்கச் செயலாற்றும்! எம்மோ டிங்கே

        புறப்படுவீர்! பொற்காலம் காண்போம் நன்றே!

 

தெருவெங்கும் தமிழ்முழக்கம் கேட்கச் செய்யும்

        தென்மறவர் தமிழ்ச்சிறகம் குறள்நுால் சொல்லும்

கருவெங்கும் விளைந்திடவும், காலம் போற்றும்

        கவியெங்கும் பரவிடவும், தமிழின் வீர

உருவெங்கும் நிலைபெறவும், உலகோர் ஒன்றி

        உறவாக வாழ்ந்திடவும் பணிகள் ஏற்கும்!

திருவென்றும் திறமென்றும் எம்மோ டிங்கே

        திரண்டிடுவீர்! தீந்தமிழைக் காப்போம் நன்றே!

 

ஒன்றிணைந்து வாழ்ந்திடவே உள்ளங் கொண்டே

        உழைக்கின்ற தமிழ்ச்சிறகம் அந்த மானில்

நன்கிணைந்து சமைக்கின்ற கடாரம் கொண்டான்

        நன்வளைவு தமிழ்மறத்தை உலகுக் கோதும்!

குன்றிணைந்து தொடர்கின்ற அரணைப் போன்று

        குவலயத்தோர் திகழ்ந்திடுக! இன்பம் சேரும்!

இன்றுணர்ந்து பெயர்பதிக்க எம்மோ டிங்கே

        இணைந்திடுவீா்! எத்திசையும் போற்றும் நன்றே!

 

கடற்படையால் கடாரத்தை வென்ற காலம்

        கணக்கிட்டுத் தமிழ்ச்சிறகம் வாழ்த்திப் பாடும்!

உடற்கொடையால் உயிர்க்கொடையால் மாட்சி பெற்ற

        உயர்தமிழர் வரலாற்றைப் பதிவு செய்யும்!

இடங்கொடையால் மடங்கொடையால் மேன்மை யுற்ற

        ஈடில்லா மாந்தர்களை ஏத்திச் சாற்றும்!

தொடர்கொடையால் பெருமைபெற எம்மோ டிங்கே

        துணையாவீர்! தொன்மொழியை வளர்ப்போம் நாமே!

 

அந்தமானில் வாழ்கின்ற மக்கள் வாழ்க!

        ஆற்றலுடைத் தமிழ்ச்சிறகத் தொண்டர் வாழ்க!

அந்தமானின் விழியழகை முகத்தில் காட்டும்

        அந்தமிழின் பெண்மணிகள் வாழ்க! வாழ்க!!

வந்தமானின் எழிற்கண்டு நெஞ்சஞ் சொக்கும்

        வளர்கலைஞர் வன்கவிஞர் அன்பர் வாழ்க!

சந்தமானின் பாட்டழகாய் ஆக்கம் தந்த

        சான்றோர்கள் ஆன்றோர்கள் வாழ்க! வாழ்க!!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

26.07.2025

samedi 19 juillet 2025

குறள் வெண்செந்துறை

 


கழுத்துார் முத்துமாரியம்மன்

குறள் வெண்செந்துறை

 

முத்தமிழ் வேண்டி முத்து மாரியைச்

சித்தம் பதிக்கச் சீர்கள் சிறக்குமே!

 

கழுத்துார் மாரியின் கண்கள் கண்டிட

அழுத்துந் துயர்கள் அனைத்தும் அகலுமே!

 

அன்னை மாரியின் அணிமலர் அடிகள்

முன்னை வினைகளை முற்றும் முடிக்குமே!

 

எங்கள் மாரியின் இணையடி தொழுதிட

அங்கப் பிணியின் அடிவேர் அறுமே!

 

காக்கும் மாரியின் கால்கள் பற்றிட

வாக்குச் சிறந்து வளர்புகழ் தொடருமே!

 

சத்தி மாரியின் தண்மலர்த் தாள்கள்

பத்துப் பிறப்பின் பாவம் நீக்குமே!

 

கன்னல் மாரியின்  கமழ்மலர்ப் பாதம்

இன்னல் அகற்றி இன்பம் அளிக்குமே!

 

எங்குல மாரியை ஏத்திப் பாடிட

அங்குல அளவும் அல்லல் இல்லையே!

 

வயல்சூழ் மாரியின் மலரடி போற்றிட

உயிர்சூழ் வினைகள் ஓடி மறையுமே!

 

முத்தா லம்மன் முன்னே இருந்தால்

சித்தாழ் ஞானஞ் செழித்துப் பூக்குமே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

17.05.2025

jeudi 1 mai 2025

தொழிலாளர் திருநாள்

 


தொழிலாளர் திருநாள்

[குறள் வெண்செந்துறை]

 

ஏரோட்டி எருவூட்டி இளைத்தோர்கள் இசைக்கும் திருநாள்!

சீரூட்டிச் செழிப்பூட்டித் திகைப்பூட்டிச் சிறக்கும் பெருநாள்!

 

உழைப்பாளி குறன்முழக்கம் உலகமெலாம் ஒலித்த திருநாள்!

கழைக்கூலி யாளர்களின் கண்ணீர்நீர் இனித்த பெருநாள்!

 

நெசவாளி நெஞ்சத்துள் நேசமலர் பூத்த திருநாள்!

வசைபாடி வதைத்தவரை வாயடக்கி வைத்த பெருநாள்!

 

பாட்டாளி யனைவரையும் கூட்டாளி யாக்கும் திருநாள்!

காட்டேறி யாட்டத்தைக் காலெடித்துப் போக்கும் பெருநாள்!

 

தொழிலாளர் ஒற்றுமையின் தோளோங்கி வென்ற திருநாள்!

பொழிலாக இவ்வுலகைப் புனைந்தோரின் இன்பப் பெருநாள்!

 

தொழிலுற்றும் துன்புற்றும் துடித்தவரின் எழுச்சித் திருநாள்!

இழிவுற்றும் இருளுற்றும் இருந்தவரின் வெற்றிப் பெருநாள்!

 

உழைக்கின்ற மக்கள்தம் உரிமையினை மீட்ட திருநாள்!

அழைக்கின்ற விருந்தாக அருஞ்சுவையை யிட்ட பெருநாள்!

 

ஆலைகளின் அதிகாரம் அடங்கிடவே செய்த திருநாள்!

சோலைகளின் வண்டாகச் சுழன்றாட வைத்த பெருநாள்!

 

இரும்புருக்கும் பட்டறையுள் கரும்பினிப்புத்  தந்த திருநாள்!

எலும்புருக்கும் கொடியவர்க்கு மருந்தளிப்புக் கண்ட பெருநாள்!

 

தொழுகின்ற திருக்கோயில் தொழிற்கூடம் என்றே போற்று!

பொழிகின்ற மழையின்பம் பொதுவுடைமை என்றே சாற்று!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

01.05.2025

samedi 12 avril 2025

 

பாவலர் வில்லூர்ப் பாரதி

 

     ஆசான் மீதும் தமிழ்மீதும்

ஆழி யளவுப் பற்றுடையார்

பேசா துள்ள கருவாய்ந்து

பேணி யெழுதுந் திறனுடையார்!

வாசா.. பாசா.. பெயர்சூடி

வாழும் வில்லூர்ப் பாரதியார்!

ஈசா வுன்னை வேண்டுகிறேன்

இவர்க்கே யாவும் நல்குகவே!

 

அஞ்சா நெஞ்சும் அகத்தெளிவும்

அமைந்த கவிஞர்! வரும்பகையைப்

பஞ்சா பறக்க விடுகின்ற

பாட்டுக் கணையைச் செய்மறவர்!

மஞ்சா போட்ட வன்மையென

வாழும் வில்லூர்ப் பாரதியார்!

துஞ்சா துலகுக்[கு] உணர்வூட்டித்

தொடர்ந்து பாடி வெல்லுகவே!

 

வீட்டில் உள்ள அனைவர்க்கும்

வெற்றி வழியைக் காட்டிடுவார்!

நாட்டில் உள்ள அனைவர்க்கும்

நல்ல தமிழை யூட்டிடுவார்!

ஏட்டில் உள்ள அனைவர்க்கும்

இனியர் வில்லூர்ப் பாரதியார்!

காட்டில் உள்ள தேனடையாய்க்

கவிதை பாடி ஓங்குகவே!

 

 
அன்பும் பண்பும் நிறைந்தவராம்!

அருளும் அறனும் உடையவராம்!

இன்பும் துன்பும் ஒன்றென்ற

ஈடில் குறளை உரைப்பவராம்!

அன்றும் இன்றும் நன்னெறியை

ஆளும் வில்லூர்ப் பாரதியார்!

என்றும் வாழ்க புகழுடனே!

இளமைத் தமிழின் அழகுடனே!

 

அகநூல் புறநூல் கற்றவராம்!

அருணூல் பொருணூல் பெற்றவராம்!

புகழ்நூல் குறளின் வழியேற்றுப்

புதுநூல் புனைந்து களித்தவராம்!

முகநூல் வழியே முத்தமிழை

முழங்கும் வில்லூர்ப் பாரதியார்!

தொகைநூல் புலவர் திருமரபில்

தொடர்ந்து பாடி  வாழியவே!      

அன்புடன்

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

12.04.2025

dimanche 15 décembre 2024

கலித்தாழிசை - 8


 

கலிப்மேடை – 64

 

கலித்தாழிசை – 8

[இயற்சீர் வெண்டளையால் வந்த கலித்தாழிசை]

 

கலித்தாழிசை இரண்டு அடிகளிலும் வரும். பல அடிகளிலும் வரும். ஈற்றடியில் மற்ற அடிகளை விடச் சீர்கள் மிகுந்து வரும். மற்ற அடிகளின் சீர்கள் அளவொத்தும் வரும். அளவொவ்வாமலும் வரும். மடக்குப் பெற்றும் வரும்

 

இறைவா!  

 

கோடித் துயரெனைக் கொட்டி வதைப்பதோ?

தேடி வினையெனைத் தீண்டிச் சிதைப்பதோ?

கூடி உறவெனைக் குற்றிக் கிழிப்பதோ?

நாடிப் பழியெனை மூடி மறைப்பதோ?

……நலிவுறச் செய்தெனை மூடி மறைப்பதோ?

 

[பாட்டரசர்]

 

ஈற்றடி நீண்டு வருவது கலித்தாழிசையின் பொதுவிலக்கணமாகும். மேலுள்ள பாடல் இயற்சீர் வெண்டளையால் அமைந்தது.  [மா முன் நிரையும், விளம் முன் நேரும் வருதல் இயற்சீர் வெண்டளை] அடியின் ஈற்றிலிருந்து அடுத்த அடியின் தொடக்கத்திற்குத் தளை கோடல் இல்லை. நான்காமடி மற்ற அடிகளைவிட நீண்டிருப்பதால் நடுவில் துணித்து ஐந்தாம் அடிபோல் அமைக்கப்பட்டுள்ளது.  

 

முதல் மூன்றடிகளும் நான்கு சீர்களைப் பெற்றன. நான்காம் அடி எட்டுச் சீர்களைக் கொண்டது. நான்கடியும் ஓரெதுகை பெற்றுவரும். நாலாமடியின் முதற்சீருக்கு ஏற்ற மோனை அதன் செம்பாதியில் அமையும். முன்னுள்ள மூன்றடிகளில் ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

 

இறுதியடியின் முற்பாதியின் இறுதிச்சீர்க்கும் பிற்பாதியின் முதற்சீர்க்கும் இயற்சீர் வெண்டளை கட்டாயமில்லை. இறுதியடியின் முற்பாதியும் பிற்பாதியும் இறுதிப் பகுதியில் மடக்குப் பெறும். இப்பாடலில் “மூடி மறைப்பதோ“ என்ற சொற்கள் மடக்காய் வந்தன.

 

விரும்பிய பொருளில் இவ்வகைக் கலித்தாழிசை ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலங்கம்

15.12.2024