vendredi 28 août 2020

வெண்பா மேடை - 185



  
எங்கள் கதியே! இராமா னுசமுனியே!
சங்கைகெடுத் தாண்ட தவராசா! - பொங்குபுகழ்
மங்கையர்கோன் ஈந்த மறையா யிரமனைத்தும்
தங்குமனம் நீயெனக்குத் தா!
  
[எம்பார் அருளிச்செய்த திருவாய்மொழி தனியன்]
  
அருட்சுடரே! எங்கள் அருளமுதே! பாடும்
பொருட்சுடரே ஓங்கப் புனைவாய்! - பெருஞ்சுடரே
பொங்குமனம் பூக்கப் புகழ்தருவாய்! சன்மார்க்கம்
தங்குமனம் நீயெனக்குத் தா!
    
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
"தங்குமனம் நீயெனக்குத் தா " ஈற்றடி அமையும் வண்ணம் நேரிசை வெண்பா ஒன்று பாடுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
20.08.2020

வெண்பா மேடை - 184




வெண்பா மேடை - 184
  
பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்[று]
ஈண்டிய சங்கம் எடுத்துாத - வேண்டிய
வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று!
  
[பெரியாழ்வார் திருமொழி தனியன்]
  
பாழ்பட்டுப் போகாமல் பண்பட்டு வாழ்ந்திடவும்,
ஆழ்பட்டுச் செந்தமிழை ஆண்டிடவும், - ஊழ்பட்டுப்
பேதங்கள் நீங்கிடவும், பேறளித்த பேராளன்
பாதங்கள் யாமுடைய பற்று!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
"பாதங்கள் யாமுடைய பற்று" ஈற்றடி அமையும் வண்ணம் நேரிசை வெண்பா ஒன்று பாடுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
14.08.2020

வெண்பா மேடை - 183

வெண்பா மேடை - 183

படிக நிறமும் பவளச்செவ் வாயும்
கடிகமழ்பூந் தாமரைபோல் கையும் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத மும்துதித்தால்
கல்லும்சொல் லாதோ கவி! 
  
[சரசுவதி அந்தாதி]
  
வெல்லும் விழியுடையாள்! வெள்ளை யுளமுடையாள்!
சொல்லும் சுவையுடையாள்! தொன்மொழியாள்! - மல்லிகையாள்!
செல்லுமிடம் சீருடையாள்! செந்தமிழாள்! என்..மனக்
கல்லும்சொல் லாதோ கவி!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
"கல்லும்சொல் லாதோ கவி" என ஈற்றடி அமையும் வண்ணம் நேரிசை வெண்பா ஒன்று பாடுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
07.08.2020

வெண்பா மேடை - 182

வெண்பா மேடை - 182
  
ஓங்க லிடைவந்[து] உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்[து] இருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னோ் தனியாழி வெங்கதிரொன்[று] ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!
  
[தண்டியலங்கார வுரைமேற்கோள்]
  
எங்கும் பரவி எழில்மணக்கும்! எந்நாளும்
பொங்கும் புகழ்மணக்கும்! பூமணக்கும்! - சங்கமருள்
பொன்னேர் சுவடிகள் போற்றும் நெறிமணக்கும்!
தன்னேர் இலாத தமிழ்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
"தன்னேர் இலாத தமிழ்" என ஈற்றடி அமையும் வண்ணம் நேரிசை வெண்பா ஒன்று பாடுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
01.08.2020

வெண்பா மேடை - 181

வெண்பா மேடை - 181
  
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமவை
நாலுங் கந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்து துாமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா!
  
[ஓளவையார், நல்வழி]
  
தோப்பழகும், துாய சுனையழகும், மாமலைபோல்
காப்பழகும், காலைக் கதிரழகும், - பூப்பழகும்,
தங்கப் பொலிவழகும் சார்ந்தெழுத என்..குருவே!
சங்கத் தமிழ்மூன்றுந் தா!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
"சங்கத் தமிழ்மூன்றுந் தா" என ஈற்றடி அமையும் வண்ணம் நேரிசை வெண்பா ஒன்று பாடுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
24.07.2020