dimanche 1 décembre 2019

சித்திரப்பா

சித்திரப்பா - 2
  
நான்கு கூடினவெல்லாம் பத்தாகவும், மூன்று கூடினவெல்லாம் பதினைந்தாகவும், பிறவாற்றானும் எண் வழுவாமல் பாடுவது சித்திரப்பா. யாப்பருங்கலம் இதனைச் சித்திரக்கா என்றே கூறும்.
  

பத்தாகிய சித்திரப்பா
  
முக்கண் முதல்வனை வேண்டு!
[ஆசிரியப்பா]
  
ஓரிறை! முக்கண்! ஈருடல்! நான்மறைச்
சீரிசை யான்!இரு வினைதீர் நாற்பா
வுடையான்! ஒன்றுள் மூன்றுடை மொழியான்!
சுடரான்! முத்தொழில் முதலான்! நாற்பயன்
ஈவான்! இருமை காப்பான்! நற்றேன்
ஆவான்! நால்வர் அருந்தமிழ் உண்டான்!
இருசபை கொண்டான்! ஈசனைக் கூத்தனை
அருளனை வேண்டு! முப்பொறி ஒன்றுமே!
  
இதனைப் பதினாறு அறையாகக் சீறி, வந்த எண்களின் முறைப்படி அறைக்கோர் எண்ணாக முதல் அறையில் தொடங்கி ஈற்றறையுள் நிறைவுறும். இடப்பக்கம், வலப்பக்கம், மேல், கீழ்ப்பக்கங்கள், மூலைப்பக்கங்கள் என எப்பக்கம் கூட்டினாலும் பத்தாக வருகதைக் காண்க.
  
கருத்துரை
  
இறைவன் ஒருவன். முக்கண் உடையவன். மங்கையோர் பாகத்தால் ஈருடல் கொண்டவன். நான்கு மறைகளின் சீரினை உடையவன். நம்முடைய இருவினையைத் தீர்க்கும் நான்குவகைப் பாக்களை யுற்றவன். தமிழென்னும் மொழியுள் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் முத்தமிழ் பெற்றான். காலைக்கதிராய் எழுகின்றவன். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில் முதல்வன். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்பயனையும் தருபவன். இம்மையும் மறுமையும் காப்பவன். தேன்போல் இனிப்பவன். சமய குரவர் நால்வர் அருளிய தமிழை உண்டவன். சிற்சபை, பொற்சபை கொண்டான். ஈசனை, தில்லைக் கூத்தனை, அருளனை வேண்டித் தொழுகவே. அவனருளால் மனம், வாக்கு, காயம் ஒன்றாகுமே.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
01.12.2019

சித்திரப்பா

சித்திர கவி மேடை - 8
  
சித்திரப்பா
  
நான்கு கூடினவெல்லாம் பத்தாகவும், மூன்று கூடினவெல்லாம் பதினைந்தாகவும், பிறவாற்றானும் எண் வழுவாமல் பாடுவது சித்திரப்பா.
  
பதினைந்தாக வரும் சித்திரப்பா
  
ஐங்கரனே அருள்வாய்
[நேரிசை வெண்பா]
  
ஈரடியால் என்றன் எழுகுற்றம் நீக்கிடுக!
சீரடியால் ஆறிடுக! ஓரகத்துள் - பேரார்எண்
நாட்டிடுக! முத்தமிழ் நாற்பா நவமணியாய்க்
கூட்டிடுக ஐங்கரனே கோத்து!
  
ஏழு குற்றங்கள் - அகங்காரம், கருமித்தனம், சிற்றின்ப வேட்கை, பேருணவில் ஆசை, முன்கோபம், பகை, சோம்பல்.
ஆறு - வழி
எண் - அறிவு
நாற்பா - அகவற்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா
  
இதனை ஒன்பது அறையாகக் சீறி, வந்த எண்களின் முறைப்படி அறைக்கோர் எண்ணாக முதல் அறையில் தொடங்கிச் சுற்றிவந்து மையத்தில் நிறைவுறும். இடப்பக்கம், வலப்பக்கம், மேல்,கீழ்ப்பக்கங்கள், மூலைப்பக்கங்கள் என எப்பக்கம் கூட்டினாலும் பதினைந்தாக வருகதைக் காண்க.
  
கருத்துரை
  
ஐந்து கைகளை உடைய ஆனைமுகத்தானே, உன்றன் இரண்டு திருவடிகளால் என்றன் ஏழு குற்றங்களை நீக்கிடுவாய். உன்றள் சீரடியால் வாழும் வழியைக் காட்டிடுவாய். வேறு நினைவின்றி உள்ள என்னுடைய ஒருமையுளத்துள் அறிவை நாட்டிடுவாய். முத்தமிழின் நான்கு பாக்களை நவமணிபோல் ஒளிருகின்ற வண்ணம் கோத்து அளித்திடுவாய்.  

பாட்டரசர் கி. பாரதிதாசன்
30.11.2019

lundi 25 novembre 2019

மாலைச் சித்திர கவிதை

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
மாலை ஓவியக்கவிதை
  
உயிரின் வலிமை
[நேரிசைச் சிந்தியல் வெண்பா]
  
குலமே கனிய நலமே தருக!
நிலமே கனிய நிறைக - புலனே!
பணிமுறை தானே பலம்!
  
குலம் - இனம்
புலன் - அறிவு
பணிமுறை - செயலொழுக்கம்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
25.11.2019

dimanche 24 novembre 2019

மாலை மாற்று சிலுவை ஓவியக்கவிதை


மாலை மாற்று சிலுவை ஓவியக்கவிதை
  
வாழ்கதிர் வேணி யதி!மல்மகா வாகே!நா
வாழ்காழே! யானே தமனேகாண்! கானே
மதனே!யா ழே!காழ்..வா! நாகே..வா! கா..மல்
மதியணி வேர்திகழ் வா!
  
அருஞ்சொற்பொருள்

வேணி - வானம்
அதி - அதிகம்
மல் - வளம்
வாகு - அழகு
நா - பொலிவு
காழ் - ஒளி, முத்து
தமன் - வேலையாள்
கான் - பூ
மதன் - அழகு
நாகு - இளமை
கா - சோலை
  
கருத்துரை
  
இறைவனின் அழகைப் போற்றியும், தன்னை இறைவனின் வேலையாளாகவும், காக்க வரவேண்டுமென்றும் வெண்பா உரைக்கிறது.
  
நிலையாக இருக்கின்ற கதிர் வானே. மிகுவளமான பெருமையுடைய பேரழகே. பொலிவாக ஆழ்கின்ற ஒளியே. யான் உன்னுடைய வேலையாள் காண்க. பூவழகனே, யாழிசைபோல் இனிப்பவனே, முத்தே, வாராய். இளமையாய் ஒளிர்பவனே வாராய். சோலைபோல் வளமுடைய அறிவணிவேர் திகழ வாராய்!
  
இவ்வெண்பா 53 எழுத்துக்களைப் பெற்று மாலை மாற்றாகச் சிலுவையில் வந்துள்ளது. சிலுவையின் அடியில் இடப்பக்கத்தில் தொடங்கி மேலேறிச் சுற்றி வலப்பக்கத்தில் வெண்பா முடிவதுபோல், வலப்பக்கத்தில் தொடங்கி மேலேறிச் சுற்றி இடப்பக்கத்திலும் முடியும். வலப்பக்கத்திலும், இடப்பக்கத்திலும் எழுத்துக்கள் ஒன்றி வருவதே இச்சிலுவைப் பாடலின் அழகாகும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
24.11.2019

jeudi 21 novembre 2019

சிலுவைச் சித்திர கவிதை


சிலுவை ஓவியக் கவிதை
  
வானரசே வாராய்!
வஞ்சி விருத்தம் [மா+மா+காய்]
  
வானே! கோனே.. வா!பாரே!
தேனே! தேரே! பாவா..வா!
கானே! கா!வா வாகே..நீ
தானே சீரே தருவாயே!
  
அருஞ்சொற்பொருள்
  
கோன் - அரசன்
பார் - உலகம்
பாவன் - கவிஞன்
கான் - மணம்
வாகு - ஒளி
  
கருத்துரை
  
வானாகத் திகழ்கின்ற இறைவனே, எங்கள் அரசனே, வாராய்! புவியாய்ச் சுழல்பவனே, தேனாய் இனிப்பவனே, தேரழகு கொண்டவனே, உயிர்களின் வாழ்வைத் தீட்டும் பாவலனே, வாராய்! பூஞ்சோலையாய் மணப்பவனே, என்னைக் காப்பாய்! இருளீக்கும் பேரோளியே, வாராய்! நான் கேட்கும் முன்னே என் மனமறிந்து வாழ்வோங்கும் சீரைத் தருவாய்!
  
இவ்வஞ்சி விருத்தம் 29 எழுத்துகளைப் பெறும். சிலுவை ஓவியம் 20 எழுத்துக்களைப் பெறும். இஃது, இடப்பக்க முனையில் தொடங்கி, வடப்பக்க முனையை அடைந்து, சென்ற வழியே திரும்பி, மையம் அடைந்து மேலேறி முனையடைந்து, அங்கிருந்து சிலுவையின் அடியடைந்து பாடல் நிறைவுறும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
20.11.2019