dimanche 24 novembre 2019

மாலை மாற்று சிலுவை ஓவியக்கவிதை


மாலை மாற்று சிலுவை ஓவியக்கவிதை
  
வாழ்கதிர் வேணி யதி!மல்மகா வாகே!நா
வாழ்காழே! யானே தமனேகாண்! கானே
மதனே!யா ழே!காழ்..வா! நாகே..வா! கா..மல்
மதியணி வேர்திகழ் வா!
  
அருஞ்சொற்பொருள்

வேணி - வானம்
அதி - அதிகம்
மல் - வளம்
வாகு - அழகு
நா - பொலிவு
காழ் - ஒளி, முத்து
தமன் - வேலையாள்
கான் - பூ
மதன் - அழகு
நாகு - இளமை
கா - சோலை
  
கருத்துரை
  
இறைவனின் அழகைப் போற்றியும், தன்னை இறைவனின் வேலையாளாகவும், காக்க வரவேண்டுமென்றும் வெண்பா உரைக்கிறது.
  
நிலையாக இருக்கின்ற கதிர் வானே. மிகுவளமான பெருமையுடைய பேரழகே. பொலிவாக ஆழ்கின்ற ஒளியே. யான் உன்னுடைய வேலையாள் காண்க. பூவழகனே, யாழிசைபோல் இனிப்பவனே, முத்தே, வாராய். இளமையாய் ஒளிர்பவனே வாராய். சோலைபோல் வளமுடைய அறிவணிவேர் திகழ வாராய்!
  
இவ்வெண்பா 53 எழுத்துக்களைப் பெற்று மாலை மாற்றாகச் சிலுவையில் வந்துள்ளது. சிலுவையின் அடியில் இடப்பக்கத்தில் தொடங்கி மேலேறிச் சுற்றி வலப்பக்கத்தில் வெண்பா முடிவதுபோல், வலப்பக்கத்தில் தொடங்கி மேலேறிச் சுற்றி இடப்பக்கத்திலும் முடியும். வலப்பக்கத்திலும், இடப்பக்கத்திலும் எழுத்துக்கள் ஒன்றி வருவதே இச்சிலுவைப் பாடலின் அழகாகும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
24.11.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire