samedi 9 novembre 2019

குதிரைச் சித்திர கவிதை


குதிரை ஓவியக்கவிதை
  
தலைக்கனம் ஏனோ?
[வஞ்சித்துறை] [காய் +
விளம்]
  
ஆடுவதோ? அழிவதோ?
ஓடுவதோ? வதைவதோ?
கேடுந்தே டுமுளமே!
சூடுஞ்சே டறிகவே!
  
சேடு - அழகு
  
கருத்துரை
  
தலைக்கனம் கொண்டு ஆடுகின்ற போக்கை எடுத்துரைத்துத் திருந்தி நல்வழி செல்லும் அழகைக் இவ்வஞ்சித்துறை வேண்டுகிறது.
  
செருக்குற்று ஆடுவதோ? தீயதை நாடி அழிவதோ? ஓடுவதோ? துயரடைவதோ? அழிவைத் தேடிச் செல்லும் மனமே, வாழ்வின் அழகை அறிகவே.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
07.11.2019

யானை ஓவியக்கவிதை



யானை ஓவியக்கவிதை
  
யானை முகத்தானை நாடு!
வஞ்சி விருத்தம்
[தேமாங்காய்+தேமா+கூவிளம்]
  
கோ..மேவு கோ..நா மேவுமே!
நே..மேவு தீவு மேவுமே!
பா..மேவு மே!கா மேவுமே!
நீ..மேவு யானை நாதனை!
  
அருங்சொற்பொருள்
  
கோ - பூமி, தலைமை, மேன்மை
மேவுதல் - அடைதல், விரும்புதல், ஓதுதல், அமர்தல், பொருந்துதல்,
நா - நாக்கு, சொல்
நே - அன்பு
தீவு - சுவை
பா - பாட்டு
கா - சோலை
யானைநாதன் - பிள்ளையார்
  
கருத்துரை
  
யானை முகத்தலைவனை அடைந்து போற்றித் தொழுதால், பூமியில் வாழும் மக்களை வாழ்விக்கும் நல்லுரை வழங்கும் தலைவனின் நாவைப் பெறலாம், அன்பை அடையலாம். சுவையை அடையலாம். பாடுகின்ற புலமையைப் அடையலாம். பாக்களில் சோலை பொருந்துமே.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
07.11.2019

சேவல் சித்திர கவிதை


சேவல் ஓவியக்கவிதை
  
நேரிசை வெண்பா
  
கோலமிகு சேவலே! கூவியே பாடுவாய்!
காலமுணர் மாமணி யாவாய்..நீ! - காலையின்
தண்சூடு வாய்!உணர்ந்தென் னெஞ்சேவாழ்ந் திங்கெழுவாய்
கண்வாடு பாயே கழித்து!
  
அருங்சொற்பொருள்
  
தண் - குளிர்ச்சி
பாய் - படுத்திறங்கும் பாய்
  
இவ்வொண்பா சேவலின் தலையில் தொடங்கி உடல் வழியாகச் சென்று இறகு தொடங்கு இடத்தில் 'வா' என்ற எழுத்தில் நின்று அங்கிருந்து கீழிறகில் சென்று அதன் மேலிறகின் வழியாக 'வா' எழுத்தை அடைந்து, இவ்வாறே மேலுள்ள இறகுகளில் சென்று இறுதியாக வா எழுத்தை அடைந்து உடல் வழியாகக் காலடைந்து பாடல் நிறைவுறும். செய்யுள் 64 எழுத்துக்களைப் பெறும். ஓவியம் 57 எழுத்துக்களைப் பெறும்.
  
கருத்துரை
  
விடியலைக் கூவி வரவேற்கும் சேவலின் செயலைத் தன் நெஞ்சிக்கு எடுத்தோதுகிறது இவ்வெண்பா.
  
அழகிய சேவலே, மக்கள் விழிப்புறக் காலை விடியலைக் கூவிப் பாடுவாய். நீ காலத்தை உணர்ந்த மாமணியாவாய். காலை தருகின்ற குளிர்ச்சியைச் சூடுவாய்!
  
என் நெஞ்சமே! சேவலின் செயலை உணர்ந்து வாழ்வாய். காலைப்பொழுதின் கடமை மறந்து கண்சோர்ந்து பாயில் உறங்குகின்ற வினை நீக்கி இங்கெழுவாய்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
09.11.2019

dimanche 3 novembre 2019

எட்டாரச் சக்கரம்


எட்டாரச் சக்கரம்
[ஆசிரியப்பாவில் அமைந்த எட்டாரச் சக்கரத்துள் ஒளிரும் குறட்பா]
  
தேவநாதா போற்றி!
[ஆசிரியப்பா]
  
தேனே! பேணிப் பேயாரி[ன்] அகமே
தானே செம்பே ரோதின் முதல்வா
வானா ராகு பேரேவு மளித்த
தாதா..தா செய்தி யுற..வண் மாரே!
பாமொழி பேசு! செம்மாக் காவே!
தா..மொழிப் பாத்து! நுானா ணயமே!
வேதத் தாகிய சீரே! குருவே!
தாதன் புனைதேரில் கானை யேகு!
தேவநா தா..வல்ல வாசுதே வா!போற்றி!
பாவ மகற்றும் வேங்கடா! பரமா!
வாகொளிர் வாழ்வோ ரேகுமூர்க் கோவே!
மேக மெய்யனே! மிகுமடி தருகவே!
  
அருஞ்சொல் விளக்கம்
  
பேயார் - பேயாழ்வார் [ஆழ்வார் பன்னிருவரில் ஒருவர்]
பேர் - பெயர், பெருமை
செய்தி - ஒழுக்கம்
ஆறு - வழி
பாத்து - ஐம்புலவின்பம்
நுானாணயம் - நுால் நாணயம்
நாணயம் - நேர்மை, கட்டுப்பாடு
தாதன் - அடியவன்
கான் - பூங்காட்டு மணம்
வாகு - அழகு
மிகுமடி - நீண்ட திருவடி
  
கருத்துரை
  
உலகைப் படைத்துக் காத்தருளும் வைகுந்தவாசனின் பொன்னுலகைப் போற்றி, அவ்வுலக வாழ்வினை வேண்டி இப்பாடல் அமைந்துள்ளது.
  
தேன்போல் இனிப்பவனே, உன்னைப் போற்றிப் பாடிய பேயாழ்வாருக்கு அகமாக நீயே இருந்தாய். செம்மைதரும் உன்பெயைரைத் தானே ஓதச் செய்தாய் முதல்வனே! அவருக்கு விண்ணுலக வாழ்வளித்தாய் தந்தையே! நான் ஒழுக்கமுற வண்மார்பை எனக்கும் தருவாய்! ஆழ்வார்கள் பாடிய பாமொழியை என்னோடு பேசுவாய்! அகமலர்ச்சியை அளிக்கின்ற பூஞ்சோலையைப் போன்றவனே! நான் பாடும் கவிதையுள் ஐம்புலவின்பத்தைத் தருவாய்! மரபு மணக்கும் நுால்களைத் தருவாய்! வேதம் உரைக்கின்ற சீரே! குருவே! அடியேன் புனைகின்ற சித்திரத்தேரில் மலர்மணத்தை ஏகுவாய்! தேவநாதா, வல்ல வாசுதேவா போற்றி! என் பாவமகற்றும் திருவேங்கடவா, பரமா, அழகொளிர வாழ்வோர் ஏகும் விண்ணுாரின் மன்னனே! கார்நிற மேனியனே! விண்ணளந்த திருவடியைக் காணும் அருளைத் தருவாய்!
  
இஃது எட்டாராய், குறட்டின் நடுவே 'தா' நின்று, எட்டெழுத்துக் குறட்டைச் சூழ் நின்று, ஆர்மேல் ஒன்பதெழுத்துப் பெற்று, சூட்டின்மேல்[வட்டம்] ஐம்பத்தாறு எழுத்துப்பெற்று வந்த ஆசிரியப்பா.
  
இச்செய்யுளில்,முதலிரண்டடிகள் சேர்ந்து 23 எழுத்துக்களைப் பெற்றன. இவ்வாறே [3 - 4] [5 - 6] [7 - 8] ஆகிய அடிகளும் 23 எழுத்துக்களைப் பெற்றன. ஈற்றில் நின்ற நான்கடிகள் ஒவ்வொன்றும் 14 எழுத்துக்களைப் பெறும். செய்யுளில் 148 எழுத்துக்கள் வந்தன. சித்திரத்தில் 137 எழுத்துக்கள் வந்தன.
  
இது, மேலாரின்முனை தொடங்கிக் கீழாரின் முனையிறுதி சென்று முதலிரண்டடி முற்றி. அதனையடுத்த இடப்பக்கத்து ஆரின்முனை தொடங்கி யதனெதிர் கீழாரின்முனை இறுதி சென்று மூன்று நான்காமடி முற்றி, அதனையடுத்த இடப்பக்கத்துக் கீழாரின்முனை தொடங்கி யதனெதிர் ஆரின் இறுதிமுனை சென்று ஐந்து ஆறாமடி முற்றி, அதனையடுத்த இடப்பக்கத்து ஆரின்முனை தொடங்கி யெதிர்நின்ற மேலாரின் முனையிறுதி சென்று ஏழு எட்டாமடி முற்றி, முதலடி தொடங்கிய 'தே' எழுத்திலிருந்து வட்டைவழியே யிடஞ்சுற்றி ஈற்று நான்கடிகள் முற்றியவாறு காண்க.
  
செய்யுள் தொடங்கி ஆரில் குறித்துள்ள 1, 2, 3, 4 என்ற எண்களின் முறையே இடஞ்சுற்றிப் படிக்கக் கீழுள்ள குறட்பா பிறக்கும்.
  
பேராழிக் தண்ணனைப் பேசுகின்ற நுால்யாவும்
சீரோதித் தேனளிக்கும் செப்பு!
  
தண்ணன் - குளிர்ந்தவன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
03.11.2019

samedi 2 novembre 2019

எட்டாரச் சக்கரம்


சித்திர கவிதை
எட்டாரச் சக்கரம்
  
திருமலை வேந்தன் மலரடி மேவுகவே!
[ஆசிரியப்பா]
  
மலர்திகழ் மாமனமே உயர்வே காண்க!
சிலையுரு வன்!கோல னவுசன்! சந்தனன்!
புகழ்மலைப் பரனகம் பூத்த மாமலை!
மிகுமலைபோல் கூடினவே வேந்தன் பெருமை!
மன்னன் சிறப்பே புவியுறு மிடமது!
கண்ணனின் சீர்மலை கண்டிமை மூடுமோ?
  
அருஞ்சொல் விளக்கம்
  
சிலை - வில்
கோலன் - அழகன்
அவுசன் - ஒழுங்கன்
பரனகம் - திருமால் வாழும் இடம்
  
கருத்துரை
  
நெடியவன் குடிகொண்ட வடவேங்கடமலையின் சீரினைப் போற்றியும், அவனழகைச் சாற்றியும் இப்பாடல் அமைந்துள்ளது.
  
வில்லுடைய, பேரழகுடைய, உலகின் ஒழுங்கைக் காக்கும் ஒளியுடைய, சந்தனக் காப்புடைய, புகழை மலையாக உடைய திருமாலின் வீடு பூத்தொளிரும் உயா்மலை. உலகை ஆளும் வேந்தனவன் பெருமை தொடர்ந்துவரும் கடலலையெனப் பெருகினவே. நமையாளும் மன்னனின் சிறப்பைப் புவியோர் கண்டுவக்கும் மலையது. கண்ணனின் சீர்மலையைக் கண்ட என் கண்ணிமை மூடுமோ? [திருமாலின் வடிவழகு நிலையாகக் கண்புகுந்து வாழ்கின்றது.] திருமாலின் மலரடியைக் கண்டு மணக்கின்ற என்றன் பெரிய மனமே, உயர்வைக் காண்பாய்!
  
இஃது எட்டாராய், குறட்டின் நடுவே 'ன' நின்று, எட்டெழுத்துக் குறட்டைச் சூழ் நின்று, ஆர்மேல் ஆறெழுத்துப் பெற்று, சூட்டின்மேல்[வட்டம்] முப்பத்திரண்டு எழுத்துப்பெற்று வந்த ஆசிரியப்பா.
  
முதலடி தொடங்கிக் குறட்டில்விடும் எழுத்துக்களை இடஞ்சுற்றிப் படிக்கத் 'மலரடி மேவுகவே' என்னும் பெயரும், குறட்டினின்றும் ஐந்தாம் அறைகளில் இடஞ்சுற்றிப் படிக்கப் 'திருமலை வேந்தன்' என்னும் பெயரும் வந்தன.
  
முதற்கண் நின்ற நான்கடிகள் ஒவ்வொன்றும் 17 எழுத்துக்களைப் பெற்றன. ஈற்றில் நின்ற இரண்டடிகள் ஒவ்வொன்றும் 16 எழுத்துக்களைப் பெற்றன. செய்யுளில் அமையும் எழுத்துக்கள் 100. சித்திரத்தில் அமையும் எழுத்துக்கள் 89.
  
இது, மேலாரின்முனை தொடங்கிக் கீழாரின் முனையிறுதி சென்று முதலடி முற்றி, அதனையடுத்த இடப்பக்கத்து ஆரின்முனை தொடங்கி யதனெதிர் கீழாரின்முனை இறுதி சென்று இரண்டாமடி முற்றி, அதனையடுத்த இடப்பக்கத்துக் கீழாரின்முனை தொடங்கி யதனெதிர் ஆரின் இறுதிமுனை சென்று மூன்றாமடி முற்றி, அதனையடுத்த இடப்பக்கத்து ஆரின்முனை தொடங்கி யெதிர்நின்ற மேலாரின் முனையிறுதி சென்று நான்காமடி முற்றி, முதலடி தொடங்கிய மகரத்தினின்று வட்டைவழியே யிடஞ்சுற்றி ஐந்தாமடி ஆறாமடிகள் முற்றியவாறு காண்க.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
01.11.2019