dimanche 16 juin 2019

காதைகரப்பு

காதைகரப்பு
  
வேறொரு செய்யுளுக்குரிய எழுத்துக்கள் யாவும் தன்னிடைத்தேயே இருக்குமாறு பாடப்படும் பாடல் காதைகரப்பாகும். ஒரு செய்யுட்குரிய எழுத்துக்கள் தன்னிடத்தே இடம்மாறி மறைந்திருத்தல் என மாறனலங்காரமும் வீரசோழியமும் இதன் இலக்கணத்தைக் கூறுகின்றன. மிறைக்கவிகளுள் இச்செய்யுளும் ஒன்று. [மிறைக்கவி என்றால் சித்திர கவி என்று பொருள்]
  
காதை கரப்பது காதை கரப்பே
[மாறனலங்காரம் 289]
  
இவ்வாறு அமையும் பாடலைக் 'கரந்துறை செய்யுள்' என்று, தண்டியலங்காரமும், முத்துவீரியமும், இலக்கண விளக்கமும் கூறுகின்றன.
    
கரந்துறை செய்யுளுக்கும் காதை கரப்பிற்கும் உள்ள வேறுபாடு:
    
இவ்விரண்டின்கண்ணும் பிறிதொரு செய்யுட்கேற்ற எழுத்துக்கள் மறைந்து கிடக்கும் வகையில் ஒப்புமை யிருப்பினும், முன்னையது இறுதி எழுத்தின் அயலெழுத்திலிருந்து ஒவ்வோரெழுத்தினை இடையிட்டு எடுத்துக்கொள்ளப் பிறிதொரு செய்யுளாய்த் தோன்றுவதாகும். காதைகரப்பாவது பாட்டின் முதற்கண் இருந்தே எவ்வித வரையறையுமின்றி எழுத்துக்களைப் பொறுக்கிக் கோக்கப் பிறிதொரு செய்யுளாய்த் தோன்றுவதாகும். [காதை - கவி] [கரப்பு - மறைத்தல்]
  
கண்டுகண் சொக்குதடி! காதல்மொழி கேட்டுமது
உண்டு கிடக்குதடி! பண்ணறியும் - ஒண்தொடியே!
இன்பம் உளமுயிர்த்து ஏங்குதடி ஐம்புலனும்!
அன்புற்றுப் பெண்ணே அணை!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள!
[திருக்குறள் - 1101]
  
என்ற குறளிலுள்ள எழுத்துக்கள் எல்லாம் ஆங்காங்கு வருமாறு அமைந்து குறள் மறைந்து கிடப்பதைக் காண்க
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
09.04.2017

1 commentaire:

  1. தமிழ் சேவை தொடர வாழ்த்துகள்

    RépondreSupprimer