dimanche 16 juin 2019

கரந்துறை செய்யுள்

கரந்துறை செய்யுள்
  
ஒரு பாட்டைச் செம்மையாக எழுதினால் அதன் ஈற்றுச் சீரில் ஈற்றெழுத்தின் அயல் எழுத்தில் தொடங்கி எதிரேறாக ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் பாடலின் முதற்சீரின் இரண்டாம் எழுத்துவரை படிக்கப் பிறிதொரு செய்யுளாக அதனகத்து மறைந்துறைவது கரந்துறை செய்யுளாம் என்று மாறனலங்காரமும் வீரசோழியமும் கூறுகின்றன்.
  
பாடலின் ஈற்றுச் சொல்லின் அயற்சொல்லின் ஈற்றிலிருந்து ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் பாடலின் முதற்சொல்வரை படிக்கப் பிறிதொரு செய்யுள் தோன்றுவது 'கரந்துறை செய்யுள்' என்று உரையாசிரியர் சிலர் உரைக்கின்றனர்.
  
இவ்வாறு அமையும் பாடலைக் 'காதை கரப்பு' என்று, தண்டியலங்காரமும், முத்துவீரியமும், இலக்கண விளக்கமும் கூறுகின்றன.
  
முதலொரு செய்யுள் முடித்ததன் ஈற்றின்
பதமதன் இறுதியிற் பயிலெழுத் துத்தொடுத்து
இடையிடை யிட்டெதி ரேறாய் முதலயல்
அடைதரப் பிறிதொரு செய்யுள் கரந்தங்
குறைவது கரந்துறைச் செய்யு ளாகும்.
  
[மாறனலங்காரம் 288]
  
சிந்தியல் வெண்பா!
  
வேதா! குழையா! மகிழ்வுமிகு தன்னேமி
தாதாநீ! மாதாநீ! நானலையா மல்லலகு
தேவே! தருந்திறனேன் தேசு!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
கருத்துரை: வேதம் உரைக்கும் பரம்பொருளே! புல்லாங்குழலை உடையவனே! துயரொழித்து இன்பம் தரும் சக்கரத்தைக் கொண்டவனே. நீ எனக்குத் தந்தையாவாய், தாயுமாவாய். நான் அலையாமல் என்னுடைய குற்றத்தை நீக்கும் இறைவனே! தருவாய் திறனுடையோன் பெற்ற ஒளியை.
  
குழை - துளையுடைய கருவி,
நேமி - சக்கரம்,
தாதா - தந்தை
அலகு - குற்றம்,
தேசு - ஒளி.
  
மேலுள்ள சிந்தியல் வெண்பாவில் ஈற்றிலிருந்து ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் படித்தால், கீழுள்ள குறள் வெண்பா தோன்றும்.
  
குறள் வெண்பா
  
தேனே! திருவே! குலமலை நாதா!நீ
தானே தமிழ்மழை தா! [பாட்டரசர்]
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
12.06.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire