samedi 21 avril 2018

ஆசிரியப்பா மேடை - 2



ஆசிரியப்பா மேடை - 2

நிலைமண்டில ஆசிரியப்பா

ஈற்றயலடி முச்சீராலும், ஏனைய அடிகள் நாற்சீராலும் நேரிசை ஆசிரியப்பா அமையும். அனைத்தடிகளும் நாற்சீரால் நிலைமண்டில ஆசிரியப்பா அமையும். நேரிசை ஆசிரியப்பா ஏகாரத்தால் மட்டுமே முடியும். நிலைமண்டில ஆசிரியப்பா ஏகாரத்துடன் ஓ, ஈ, ஆய், என், ஐ எனவும் முடிவதுண்டு. இற்றைப் பாவலர்கள் நிலைமண்டில ஆசிரியப்பாவை இன்னிசை ஆசிரியப்பா என்றும் வழங்குவர்.

நிலைமண்டில ஆசிரியப்பா!

கண்ணே! மணியே! கன்னல் கனியே!
மண்ணே மயங்கும் மாசறு பொன்னே!
என்னே உன்றன் எழில்மிகு தோற்றம்!
முன்னே கண்டு மூளை இழந்தேன்!
பித்தம் ஏறிப் பிதட்டு கின்றேன்!
முத்தம் ஒன்றே முழுநோய் தீர்க்கும்!
மெல்லிடை தன்னில் மின்னல் தோன்றும்!
சொல்லடை போன்று சுவையை ஊட்டும்!
உயிர்கள் ஒன்றி உவக்கும் நாளில்
பயிர்போல் வாழ்வு பசுமை காணுமே!

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

இலக்கண விளக்கம்

இப்பா, அனைத்து அடிகளிலும் நான்கு சீர்களைப் பெற்றிருக்கும்.

ஈசைச்சீர்கள் நான்கும் பயின்று வரும். [தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்]

இரண்டடி ஓரெதுகைப் பெற்று வரும்.

ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை பெற்று வரும். [மூன்றில் அமையவில்லை யெனில் இரண்டாம் சீரில் அல்லது நான்காம் சீரில் மோனை அமையவேண்டும்] 

மூன்றடிக்குக் குறையாமல் எத்தனை அடிகளிலும் வரலாம். [சிற்றெல்லை 3 அடி, பேரெல்லை அளவில்லை]

ஈற்றடியின் கடைசிச் சீர் ஏ, ஓ, ஈ, ஆய், என், ஐ என்று முடிதல் வேண்டும். ஏகாரத்தில் முடிதலே சிறப்பாகும்.

நேரொன்றிய ஆசிரியத் தளையும், நிரையொன்றிய ஆசிரியத்தளையும், இயற்சீர் வெண்டளையும் கலந்து நடக்கும்.

நிலைமண்டில ஆசிரியப்பாவின் நுாற்பாக்கள்

எல்லா அடியும் ஒத்து நடைபெறுமாயின்
நிலைமண்டிலம்,
[யா. கா - 28]

ஒத்த அடியின தாகியும் ஒற்றிற
நிற்பவும் என்னும் நிலைமண் டிலமே.
[யா.வி - 74]

ஒத்த அடித்தாய் உலையா மண்டிலம்
என்என் கிளவியை ஈறாகப் பெறும்
அன்ன பிறவும்அந் நிலைமண் டிலமே.
[அவிநயனார்]

ஒத்த அடித்தாய்  உலையா மரபொடு
நிற்பன தானே நிலைமண்டிலமே.

என்னென் கிளவியை ஈறாப் பெறுதலும்
அன்னவை பிறவும் அந்தம் நிலைபெற
நிற்கவும் பெறுாஉம் நிலைமண் டிலமே.
[சிறுகாக்கை பாடினியார்]

ஒத்த அடியின நிலைமண் டிலமே
என்னெனும் அசைச் சொலும் பிறவும் ஒன்றித்
துன்னவும் பெறுாஉம் நிலைமண் டிலமே.
[மயேச்சுரம்]

நிலைமண் டிலத்தெங்கும் நீங்கா அளவடி.
[மு.வீ .செ. 23]

எல்லா அடியும்ஒத் திறின்நிலை மண்டில
அகவல் என்மனார் அறிந்திசினோரே

'வடலுார் வள்ளல் வழியில் வாழ்கவே' என்ற அடியை ஈற்றடியாக வரும் வண்ணம் நிலைமண்டில ஆசிரியப்பா  ஒன்றை 12 அடிக்கு மிகாமல்  பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
13.03.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire