samedi 2 décembre 2017

சிவன் சிலேடை வெண்பா!


சிவன் சிலேடை வெண்பா!
  
1.
சிவனும் தேங்காயும்

நீரேந்தும்! வெண்மை நிறமேந்தும்! கண்மூன்றின்
சீரேந்தும்! செம்மைச் சடையேந்தும்! - பாரேந்தும்!
போற்றும் புகழேந்தும்! ஓடேந்தும்! தேங்காயும்
ஆற்றல் சிவனும் அறி!
  
2.
சிவனும் தமிழும்

தென்னெனும் பேரேந்தும்! மின்னெனும் சீரேந்தும்!
பொன்னெனும் வண்ணம் புகழேந்தும்! - இன்பெனும்
சங்கத் தமிழாண்டும் தண்ணேந்தும் ஈசனையும்
தங்கத் தமிழையும் சாற்று!
  
3.
சிவனும் திருமாலும்

நீருடையான்! நெற்றியில்வெண் கோடுடையான்! நன்மணத்
தாருடையான்! கன்னல் தமிழுடையான்! - சீருடையான்!
தேருடையான்! பாம்புடையான்! தேவிவாழ் மெய்யுடையான்!
காருடைய மால்,சிவன் காண்!
  
4.
சிவனும் வானும்

நீரூற்றும்! வெண்பிறை நீந்தும்! திருஞானச்
சீரூட்டும்! செந்தமிழைச் சேர்த்துாட்டும்! - பாரோங்க
மின்னொளி ஏந்தும்! விரிவானை நற்சிவனைப்
பொன்னொளி ஏந்தும் பொலிந்து!
  
5.
சிவனும் பாம்பும்

நீல விடமுண்டாம்! நீண்ட உருவுண்டாம்!
ஞாலப் புகழ்ச்சீர் நனியுண்டாம்! - கோல
நடமுண்டாம்! கூறிரு நாக்குண்டாம்! காணும்
படமுண்டாம்! பாம்பீசன் பார்!
  
6.
சிவனும் திருக்குறளும்

அறம்நல்கும்! ஆண்மை மறம்நல்கும்! இன்பத்
திறம்நல்கும்! செம்பொருள் நல்கும்! - பிறப்பின்
பயன்சேர் அடியிரண்டைப் பற்றியுயிர் ஓங்கும்!
நயன்சேர் குறளீசன் நாடு!
  
7.
சிவனும் சிங்கமும்

அரசப் பெயருண்டாம்! ஆண்மைநடை யுண்டாம்!
சிரசில் சடையுண்டாம்! சேர்ந்த - இருளடர்
காடுண்டாம்! வன்னரிக்கும் காக்கும் சிவனுக்கும்
பீடுண்டாம் என்றும் பிணைந்து!
  
8.
சிவனும் காற்றும்

உலகாளும்! நம்மின் உயிராளும்! நாளும்
நிலமுணர ஆட்டுவிக்கும்! நெஞ்சுள் - குலவுநலம்
கூட்டும்! குளிரூட்டும்! கோலமிகு நன்மணத்தைச்
சூட்டும் சிவன்,காற்றுச் செப்பு!
  
9.
சிவனும் ஆசிரியரும்

இருளகற்றி நெஞ்சுள் இருந்திடுவார்! உண்மைப்
பொருள்திரட்டி மேன்மை பொழிவார்! - குருவெனும்
பேருறுவார்! ஞானக்கண் தான்திறப்பார்! பேறுறும்
சீர்ச்சிவன் ஆசிரியர் செப்பு!
  
10.
சிவனும் காதலியும்

பொட்டுண்டு! பூவுண்டு! பொன்னொளித் தோடுண்டு!
கட்டுண்டு! பட்டுண்டு! காண்பிறைச் - சொத்துண்டு!
தாண்டவம் பித்தமுண்டு! தாய்தரும் அன்புண்டு!
வேண்டுசிவன், காதலியா மே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்.
01.12.2017

Aucun commentaire:

Enregistrer un commentaire