vendredi 23 décembre 2016

மயக்குவதேன்?


இயற்பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
  
மயக்குவதேன்?
  
தரவு
வண்ணமலர்ப் பொழிலுக்குள் வளைந்தாடும் வரிவண்டே!
உண்ணுமது பலகுடித்தும் உளறாத உயர்வண்டே!
எண்ணமதில் இருக்கின்ற இளையவளை அணைத்தவுடன்
மண்ணுலகம் சுழல்வதுபோல் மனம்மெல்லச் சுழல்வதுமேன்?
  
தாழிசை
1.
கன்னங்கள் தருகின்ற கனிச்சாற்றைப் பருகியதும்
தென்னங்கள் தரும்போதை திரண்டென்னை மயக்குவதேன்?
  
2.
இதழோடும் இதழ்சேர்த்தே இடும்முத்தம் தரும்போதை
எதனோடும் இணைசொல்ல இயலாமல் மயக்குவதேன்?
  
3.
பார்வைதரும் சுவையமுதைப் படர்நெஞ்சம் அருந்தியதும்
போர்வையுறும் குளிரூட்டிப் புலவனெனை மயக்குவதேன்?
  
4.
வரங்கூட்டும் இறையரசன் மகிழ்வூட்டி வழங்கியதாம்
குரல்கூட்டும் குளிரமுதைக் குடித்துள்ளம் மயக்குவதேன்?
  
5.
தொட்டவுடன் எனக்குள்ளே சுரக்கின்ற உணர்வலைகள்
கட்டுடைத்துப் பெருகுவதேன்? கருத்திழுத்து மயக்குவதேன்?
  
6.
செவியாடும் மணியழகும்! சிரிப்பாடும் உதட்டழகும்!
கவியாடும் மதுவாகக் களித்தென்னை மயக்குவதேன்?
  
இங்கே [தனிச்சொல்]
  
சுரிதகம்
போதை தெளிந்து புலவன் வாழப்
பாதை உரைப்பாய்! பணிந்தேன் உன்னை!
மலர்சேர் வண்ண வண்டே!
நலஞ்சேர் வழியை நவில்வாய் நன்றே!
  
இலக்கணக் குறிப்பு
[தரவு + தாழிசைகளுக்கு இடையே தனிச்சொல் பெற்றோ + தாழிசைகளுக்கு இடையே தனிச்சொல் பெறாமாலோ + மூன்றுக்கு அதிகமான தாழிசைகள் + தனிச்சொல் + சுரிதகம்]

18.12.2016

Aucun commentaire:

Enregistrer un commentaire