vendredi 10 mai 2024

பாவலர் அன்பரசி

 

அமுதச் செல்வி அன்பரசி

பிறந்தநாள் வாழ்த்து

 

அமுதில் பிறந்த செல்வியென

       அகத்தில் சிறந்த அன்பரசி!

குமுதில் அமர்ந்த நங்கையெனக்

       குணத்தில் உயர்ந்த பண்பரசி!

சிமிழின் செம்மைப் பெண்ணரசி!

       சீர்சேர் புலமைப் பண்ணரசி!

தமிழில் சிறந்த பாட்டரசன்

       தந்தேன் கோடிப் பல்லாண்டு!

 

மொழியின் பற்றும், நன்னெறியை

       முழங்கும் பற்றும், நற்றவத்தார்

வழியின் பற்றும், யாப்பருளும்

       மரபின் பற்றும், இயற்கைதரும்

எழிலின் பற்றும், எந்நாளும்

       இறைவன் பற்றும், அன்பென்னும்

பொழிலின் பற்றும் அகமலர்ந்து

       பொலிந்து வாழ்க அன்பரசி!

 

தேடித் தேடி நுால்கற்றும்

       திறனுக் கென்றும் உரமிட்டும்

ஓடி யோடித் தொண்டாற்றி

       ஒளிரும் வண்ணம் உளமுற்றும்

ஆடி யாடிக் களிக்கின்ற

       அழகு குழந்தை பணியுற்றும்

பாடிப் பாடிப் புகழுற்றும்

       பாரில் வாழ்க அன்பரசி!

 

கம்பன் காதல் கமழ்ந்திடுமே!

       கவிதைக் காதல் கனிந்திடுமே!

இம்மண் வாழும் செடிமீதும்

       இனிய காதல் தொடர்ந்திடுமே!

அம்மன் அழகில் மனமுருகி

       அருளாங் காதல் மலர்ந்திடுமே!

செம்பொன் இதய அன்பரசி

       செழித்து வாழ்க பல்லாண்டு!

 

பாட்டின் அரசன் பயிலரங்கிற்

       பாடங் கற்றும் பண்கற்றும்

காட்டின் வளமாய் எழுத்தாக்கங்

       கணித்தே எழுதுங் கலைகற்றும்

வீட்டின் பெருமைச் சீர்கற்றும்

       வெற்றி சூடும் வழிகற்றும்

நாட்டின் மேன்மை நிலைகற்று்

       நன்றே வாழ்க அன்பரசி! [83]

 

23.03.2024

Aucun commentaire:

Enregistrer un commentaire