samedi 18 mars 2023

சந்தக் கலிவிருத்தம் - 4

விருத்த மேடை - 87

 

சந்தக் கலிவிருத்தம் - 4

தந்தாதன + தந்தாதன + தந்தாதன + தனனா

[முதல் மூன்று சீர்கள் 6 சந்த மாத்திரை + இறுதிச்சீர் 4 சந்த மாத்திரை]

 

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்

துாமாமழை துறுகல்மிசை சிறுநுண்துளி சிதற

ஆமாம்பிணை அணையும்பொழி[ல்] அண்ணாமலை அண்ணல்

பூமாங்கழ[ல்] புனைசேவடி நினைவார்வினை இலரே!

 

[சம்பந்தர் தேவாரம், திருவண்ணாமலை]

 

வெய்யோனொளி தன்மேனியி[ன்] விரிசோதியின் மறையப்

பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடு[ம்] போனான்!

மையோ!மர கதமோ!மறி கடலோ!மழை முகிலோ!

ஐயோவிவ[ன்] வடிவென்பதொ ரழியாவழ குடையான்!

 

[கம்பன், அயோத்தியா. கங்கை - 1]

 

குற்றெழுத்தை இறுதியில் கொண்ட மாங்கனிச் சீர்கள் மூன்றும், இறுதியில் மாச்சீர் ஒன்றும் ஓரடியாகும். இதுபோல் நான்கடி ஓரெதுகையில் வரவேண்டும். மோனை 1, 3 ஆம் சீர்களில் அமையும். அடி இறுதியில் தனிக்குறிலும் வரலாம். [அடியிறுதியில் வரும் குறில் 2 மாத்திரை பெறும்]

 

கனிச்சீர் 6 சந்த மாத்திரையும், மாச்சீர் 4 சந்த மாத்திரையும் பெறுதல் வேண்டும்.

[குறில் 1 மாத்திரை, குறிலொற்று, நெடில், நெடிலொற்று 2 மாத்திரை என்ற சந்த மாத்திரைக் கணக்கை நினைவில் கொள்ளவும்]

 

சம்பந்தர் தேவாரம், சுந்தரர் தேவாரம், திருமங்கையாழ்வார் பாடல்கள், திருவாசகம், சூளாமணி, நீலகேசி, பெரியபுராணம், கம்பராமாயணம் ஆகியவற்றில் இந்தக் சந்த விருத்தங்கள் உள்ளன.

 

தொண்டேபுரி தொழுமேபுவி தொடரேபுக ழாகும்!

செண்டேபொழி கவியேகுவி சிவமேதமி ழாகும்!

பண்டேவழி ஒளியேமிகு பணியேயுயி ராகும்!

கண்டேயளி கருவேயிடு கனிவேமிகு தாயே!

 

[பாட்டரசர்]

 

கண்ணேயெனை நெஞ்சோடணை! கவியேபல தருவேன்!

பெண்ணேயுனை யுற்றேநனி பேறேபல பெறுவேன்!

தண்ணேபுனை தவமேபுரி தகையேபல வுறுவேன்!

பண்ணேயுனை மணமேபுரி பசியேமிக வருவேன்!

 

[பாட்டரசர்]

மேற்கண்ட சந்தக் கலிவிருத்தம் ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம், பிரான்சு

06.01.2023

 

 

Aucun commentaire:

Enregistrer un commentaire