vendredi 28 août 2020

விருத்த மேடை - 39

விருத்த மேடை - 39
  
எழுசீர் விருத்தம் - 2
  
விளம் + விளம்+ விளம் + மா
விளம் + விளம் + மா
  
சீரணி திகழ்திரு மார்பில்வெண் ணுாலர்
   திரிபுரம் எரிசெய்த செல்வர்!
வாரணி வனமுலை மங்கையோர் பங்கர்!
   மான்மறி ஏந்திய மைந்தர்!
காரணி மணிதிகழ் மிடறுடை அண்ணல்
   கண்ணுதல் விண்ணவர் ஏத்தும்
பாரணி திகழ்தரு நான்மறை யாளர்
   பாம்புர நன்னக ராரே!
  
[திருஞான சம்பந்தர் தேவாரம் - 437]
  
போர்த்தொழில் பழகு! [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
பாரெழில் காத்திடப் படையெழில் போற்று!
   பாரதி பாக்களைச் சாற்று!
பேரெழில் நம்மொழி! பிறப்பெழில் ஓது!
   பெருந்தமிழ் மொழிக்கிணை யேது?
காரெழில் பொழிலெனக் கவியெழில் ஓங்கும்!
   கல்வியே கண்ணெழில் தாங்கும்!
சீரெழில் பூத்திடும் போர்த்தொழில் காப்பு!
   திண்ணுரம் செழித்திடும் தோப்பு!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
மேற்கண்ட பாடலில் ஒவ்வோரடியிலும் ஏழுசீர்கள் உள்ளன. விளம் + விளம் + விளம் + மா + விளம் + விளம் + மா என்ற வாய்பாட்டில் அமைந்துள்ளன. இவ்வாறு நான்கடிகளும் அமைய வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும். விளச்சீர் வருமிடங்களில் அருகி மாங்காய்ச்சீர் வருவதுண்டு. [மேலுள்ள விருத்தத்தில் மார்பில்வெண், எரிசெய்த என மாங்காய்ச்சீர்கள் வந்தன]
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எழுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
          
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
08.08.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire