samedi 28 mars 2020

இரு சொல் எழிலணி வெண்பா


வெண்பா மேடை - 160
  
இரு சொல் எழிலணி வெண்பா
  
இரண்டு வினாக்களுக்கு ஒரு விடை வரும்படியாகப் பாடுவது இரு சொல் எழிலணி வெண்பாவாகும்.
  
ஓங்கி அளந்ததெது? ஓதுகுறள் பேரழகாய்த்
தாங்கும் அளவெது தங்கமே! - வீங்குபுகழ்ச்
சீரூட்டும்! செம்மைச் செழிப்பூட்டும் ஈரடியே!
பேரூட்டும் போற்றிப் பிடி!
  
கருத்துரை
  
'ஓங்கி உலகலளந்த உத்தமன் பேர்பாடி' எனக் கோதையின் திருப்பாவை உரைக்கும். ஓங்கி உலகத்தை அளந்தது திருமாலின் ஈரடி. குறள்வெண்பா ஈரடி. நெடியவனின் திருவடியையும், திருக்குறளையும் போற்றிக் கைபிடித்தால் சீர் பெருகும், வாழ்வு செழிக்கும். பேர் மேவும்.
  
இரு சொல் எழிலணி வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
28.03.2020


Aucun commentaire:

Enregistrer un commentaire