lundi 9 mars 2020

ஆனந்தக் களிப்பு

பண்ணிசைப் பைந்தமிழே!
  
நற்குறள் பாதையை நாடு - தம்பி
   நாற்றிசை போற்றிட நன்னடை போடு!
பொற்புடைச் சீரினைப் பாடு - பொல்லாப்
   பொய்மையைப் போக்கிடப் போரிடக் கூடு!
சொற்றிறம் பூத்துளம் ஆடு - மேடை
   சொக்கிடக் சொக்கிடத் தேன்கவி சூடு!
பற்பல பூக்களின் காடு - தமிழ்
   பண்மது வூறிடும் பார்இலை ஈடு!
  
நம்மொழி செம்மொழி யாகும் - தம்பி
   நாடிநாம் கற்றிட நல்லறம் மேவும்!
இம்மெனும் முன்கவி தோன்றும் - மனம்
   ஏந்திநாம் ஏத்திடப் பன்னலம் ஊன்றும்!
அம்மனின் பேரருள் பூக்கும் - என்றும்
   ஆயிரம் ஆயிரம் தொன்மையைக் காக்கும்!
அம்மணி சூடியே மின்னும் - தமிழ்
   ஆடெழில் நாட்டியம் பீடெலாம் பின்னும்!
  
முன்மொழி நம்மொழி சாற்று - தம்பி
   முத்தொளிர் முத்தமிழ் மூச்சுறும் காற்று!
பொன்மொழி நம்மொழி ஓது - இந்தப்
   பூமியில் எங்கினும் ஈடிணை யேது?
வன்மொழி மார்புற ஓங்கும்! - மலர்
   மென்மொழிச் சீருற மேதினி ஏங்கும்!
நன்னெறி பூத்திடும் காடு - தமிழ்
   நல்வழி காத்திடும் நற்றவ வீடு!
  

பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
09.03.2020.

Aucun commentaire:

Enregistrer un commentaire