dimanche 1 janvier 2017

கேட்டலும் கிளத்தலும்

கேட்டலும் கிளத்தலும்
  
உரிச்சொல் முன் வல்லினம் மிகும் என்று படித்துள்ளேன். நனி என்ற உரிச்சொல் முன் மிகாது என்பதை இலக்கியச் சான்றுடன் விளக்கம் தருக.
  
இளமதி, சர்மனி
  
-----------------------------------------------------------------------------------------------------------------------
  
உயிரீற்று உரிச்சொல் முன் வல்லினம் மிகும் என்பது பொதுவிதியாம். அதில் நனி மிகாது என்பது தனி விதியாம்.
  
சால, தட, தவ என்னும் உரிச்சொற்களுக்குப் பின் வல்லினம் மிகும்.

பால்நினைந்து ஊட்டும் தாயினும்
சாலப் பரிந்து [திருவாசகம்]
  
பொருதடக்கை வாளெங்கே? மணிமார் பெங்கே? [கலிங்கத்துப்பரணி]
  
தவச்சிறிது ஆயினும் மிகப்பலர் என்னாள் [ புறநானுாறு]
  
உறு, நனி, கழி, என்னும் உரிச்சொற்களுக்குப்பின் வல்லினம் மிகாது.
  
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் [ புறநானுாறு]
  
நனிபசு பொழியும் பாலும் [பாவேந்தர்]
  
கழிபெருவகை
  
மா என்ற சொல்முன் வல்லினம் மிகுதலும் உண்டு, மிகாமையும் உண்டு.
  
மாபழிக்கு மனநடுக்கம் கொள்ளுகின்றேன் [ பாவேந்தர்]
  
மாகடல் [கம்பன் 1034 ] மாதவம்[ கம்பன் 1343] மா கிழங்கு [கம்பன் 2078] கம்பனில் மா முன் வல்லினம் மிகாமல் வந்துள்ளது.
  
மாத்துயர் [கம்பன் 1418] மாக்கரி [கம்பன் 1359] மாக்கனி [கம்பன் 2078] மாத்தலை [கம்பன் 2956] கம்பனில் மா முன் வல்லினம் மிகுத்து வந்துள்ளது.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
01.01.2017

2 commentaires:

  1. அருமையான விளக்கம்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    RépondreSupprimer