புதுவைக்
கம்பன் விழாக் கவியரங்கம்
குகன்
படகு பேசுகிறது!
தமிழ்
வணக்கம்
கற்கண்டு
சொல்லேந்திக் கார்வண்ணன் வில்லேந்திக்
கமழ்கின்ற தமிழே..நீ வாராய்!
காலத்தை
வெல்கின்ற கோலத்தை என்பாட்டில்
கணக்கின்றி எந்நாளும் தாராய்!
சொற்கொண்டு
வையத்தை நற்றூய்மை நான்செய்யச்
சுடர்கின்ற தமிழே..நீ வாராய்!
சொக்கட்டான்
கோடாக இக்கட்டே இல்லாமல்
தொடர்கின்ற சீர்வேண்டும் நேராய்!
பொற்புண்டு!
புகழுண்டு! கற்புண்டு! கனிவுண்டு!
பொலிகின்ற தமிழே..நீ வாராய்!
பொன்னான
என்னாவைத் தண்ணீரின் படகாக்கிக்
கண்ணான கவிவேண்டும் சீராய்!
வற்புண்டு!
வடிவண்டு! வெற்புண்டு! வியப்புண்டு!
மணக்கின்ற தமிழே..நீ வாராய்!
சற்றென்று
முன்னாலே பட்டென்று பாத்தீட்டப்
பற்றோடே ஓர்பார்வை பாராய்!
இறை
வணக்கம்!
அரங்கத்து
மாமன்னா! ஆழ்வாரின் மலர்வண்ணா!
அருள்கேட்டு நிற்கின்றேன் காப்பாய்!
சுரங்கத்துப்
வளமாகச் சுவைக்கின்ற நலமாகச்
சுரங்கின்ற பாட்டள்ளிச் சேர்ப்பாய்!
தரங்கத்து
மீதாடும் வரங்கொண்ட படகாகித்
தங்கத்து மொழியேந்திப் பூப்பாய்!
பெருங்கொத்து
மலர்சாற்றி அருஞ்சொத்துத் தமிழ்சாற்றிப்
பிணைகின்ற என்னன்பை ஏற்பாய்!
தலைவர்
வணக்கம்
பிறையென்னும்
பெயரேந்தி நிறையென்னும் மனமேந்திப்
பீடேந்தும் கவிகொண்ட தலைவா!
மிறையென்னும்
ஒருசொல்லைக் கறையென்னும் துயர்ச்சொல்லை
மேவாத தமிழ்கொண்ட மறவா!
இறையென்னும்
உருவத்துள் முறைகொண்ட பெண்ணாக
எழில்கொண்ட தமிழ்வாழும் மார்பா!
துறைகொண்ட
குகனாகப் பறைகொண்டு பகர்கின்றேன்
மரைகொண்டு தொழும்உன்னை என்..பா!
அவை
வணக்கம்!
நாட்டரசு
காண்தேர்தல் நாட்டத்தைக் கொள்ளாமல்
பாட்டரசு கேட்கின்ற அவையே!
கூட்டரசு
வந்தாலும் குறையரசு கண்டாலும்
கொடுக்காது தமிழ்போன்று சுவையே!
காட்டரசு
அரிமாபோல் பாட்டரசு தாசன்..நான்
கைகூப்பிச் சொல்கின்றேன் வணக்கம்!
வேட்டரசு
சந்தங்கள் நீட்டரசு தான்செய்ய
விளைக்கின்ற பாட்டெல்லாம் மணக்கும்!
முன்னிலை:
தமிழ்மாமணி
கோவிந்தசாமி ஐயாவுக்கு வணக்கம்
திருமண்ணும்
இடவில்லை! திருமார்பில் பெண்ணில்லை!
திருநாமம் கோவிந்த சாமி!
அருபென்னும்
அணியில்லை! அழகுக்குக் குறையில்லை!
அசத்தும்..மோ கினிக்கீடாய் மேனி!
அரும்பண்ணும்
திருப்பாட்டும் அரங்கத்தில் தினம்உண்டு!
ஐயாவும் கவியுண்ணும் தேனீ!
அருந்சொத்து
தமிழுண்டு! பெருஞ்சொத்து வாழ்வுண்டு!
அடியேன்..என் வணக்கங்கள் கோடி!
தொடரும்
Aucun commentaire:
Enregistrer un commentaire