jeudi 3 avril 2014

கனிவிருத்தம் - பகுதி 4




கலிவிருத்தம் () கனிவிருத்தம்

16.
உப்புகின்ற மார்பழகும் உள்ளிருக்கும் வயிறழகும்
தப்புகின்ற வழியின்றித் தாக்குகின்ற விழியழகும்
சப்புகின்ற தேன்சுரக்கும் தாரகையின் உதட்டழகும்
அப்புகின்ற ஆசைகளால் அலையுதடி கவிநெஞ்சம்!

17.
மூக்கென்ன? முழியென்ன? முத்தாடும் காதென்ன?
நாக்கென்ன? நகமென்ன? நடமாடும் நடையென்ன?
வாக்கென்ன? வளமென்ன? வந்தாடும் தமிழென்ன?
போக்கென்ன அறியாமல் பொங்குதடி கவிநெஞ்சம்!

18.
குற்றாலம் குன்றிடலாம்! கொட்டுமழை தவறிடலாம்!
முற்றாமல் செடிகொடிகள் மூப்பெய்திப் போயிடலாம்!
வற்றாமல் எனக்குள்ளே வளங்கொடுக்கும் தேவியுனைப்
பாற்றாமல் என்வாழ்வு பாழ்பட்டுப் போவதுவோ?

19.
பூப்பூவாய்ப் பூத்திருக்கும்! பொன்பொன்னாய் மழைபொழியும்!
நாப்பூவாய்ப் பூத்திருக்கும்! நறுந்தேனும் தான்சுரக்கும்!
பாப்பூவாய்ப் பூத்திருக்கும் பாவலனின் பண்புள்ளம்!
மாப்பூவாய்ப் பூத்திருக்கும் மாமதியே வந்தாடு!

20.
ஏமாற்றும் வித்தைகளை எங்கே..நீ கற்றாயோ?
பூ..மாற்றம் இல்லாமல் பூத்தாடும் தோட்டத்தில்!
பா..மாற்றம் இல்லாமல் பாடுகின்ற பாவலன்நான்!
வா..மாற்றம் இல்லாமல் மாவாழைத் தோப்புக்கே!

தொடரும்

7 commentaires:

  1. பா.... மாற்றம் இல்லாமல் பாடுகின்ற பாவலரே வாழி

    RépondreSupprimer
  2. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் ரசித்தேன் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  3. வற்றாமல் என்றென்றும் மனதில் நிரம்பிவழியட்டும் கவியதுவும்.

    RépondreSupprimer

  4. வணக்கம்!

    எல்லாக் கவிதைகளும் இன்பம் இசைத்தனவே!
    சொல்லா? சுரக்கின்ற தேனுாற்றா? - மல்லாக்காய்
    என்னை மயக்கினவே! ஈடில்லா உன்னுாற்றல்
    அன்னைத் தமிழின் அருள்!

    RépondreSupprimer