dimanche 27 octobre 2019

ஆறாரச் சக்கரம்


ஆறாரச் சக்கரம்
  
கண்ணா தருவாய் கவி!
[ஆசிரியப்பா]
  
மாதவ மனமே யெழுதகை தா..தா!
மாதாய்! ஏக வான் வாமம்..தா!
அரண்..தா! வாழென அருள்..தா தா!
வருக கண்ணா! மயில மாடு
வண்ண மினிநீக்கா வாழ்வே..தா!
தண்விண் ணா! நுாழை யாரெ ழாலே!
மாண்பே! வளமே! தா..அன்பே!தா!
ஆண்ட வன்மை ஆறே தா..தா!
தாதே! தீதே தீய விடு!பா
வோதிடப் பாலே ஊட்டுக தேவே!
  
இஃது ஆறு ஆராய், குறட்டின் நடுவே 'தா' என்ற எழுத்தும் நின்று, குறட்டைச் சூழ ஆறு எழுத்துக்கள் வந்தன. ஆர்மேல் ஒன்பது எழுத்துக்கள் நின்றன. சூட்டின்மேல் [வட்டம்] நாற்பத்திரண்டு எழுத்துக்கள் அமைந்தன.
  
முதல் இரண்டடிகள் 23 எழுத்துக்களையும், அடுத்த இரண்டடிகள் 23 எழுத்துக்களையும், அடுத்த இரண்டடிகள் 23 எழுத்துக்களையும், பின் இரண்டடிகள் 21 எழுத்துக்களையும், ஈற்றிரண்டடிகள் 21 எழுத்துகளையும் பெற்றன. செய்யுட்கண் 111 எழுத்துக்கள் உள்ளன. சித்திரத்தில் 103 எழுத்துக்கள் வந்தன.
  
இச்செய்யுள், இடப்பக்கத்தின் முனைநின்று தொடங்கி வலப்பக்கத்தாரின் முனையிறுதி மேலேறி முதல் இரண்டடிகள் முற்றி, அடுத்த கீழாரின் முனைநின்று மேலாரின் முனையிறுதி மேலேறி மூன்று நான்காம் அடிகள் முற்றி, அடுத்த வலப்பக்கத்தாரின் முனைநின்று இடப்பக்கத்தாரின் முனையிறுதிமேலேறி ஐந்து ஆறாம் அடிகள் முற்றி, ஈற்று நான்கடிகள் செய்யுள் தொடங்கி இடப்பக்க எழுத்தில் தொடங்கி வட்டைவழி இடஞ்சுற்றிப் பாடல் நிறைவுறும்.
  
இடப்பக்க ஆரில் 1, 2, 3, 4 என்ற எண்களின் முறையே இடஞ்சுற்றிப் படிக்கக் கீழுள்ள குறள் பிறக்கும்.
  
வண்ண மலரென வானின் மழையெனக்
கண்ணா தருவாய் கவி!
  
அருஞ்சொல் விளக்கம்
  
ஏகன் - கடவுள்
வாமம் - அழகு
நுாழையார் - நுண்மையர்
எழால் - யாழிசை
ஆறு - வழி
தாது - பூந்துாது
  
கருத்துரை:
  
கண்ணனிடம் வேண்டிக் கேட்பதாக இப்பாடல் அமைந்துள்ளது. கண்ணா! குளிர்ந்த வைகுந்தத்தில் வாழும் விண்ணா! தேவா! மாதவத்தால் விழிப்புறும் மனத்தழகைத் தருக..தருக..! என் அன்னையே! விண்ணுலகில் வாழும் வாழ்வைத் தருக! காவல் தருக! வாழ்கவென்று அருளைத் தருக..தருக..! தோகை விரித்தாடும் வண்ண வாழ்வை இனி நீக்காமல் தருக! கலைவல்லுநர் இசைக்கும் யாழமுதை, மாண்பை, வளத்தை, உன்னன்பைத் தருக..தருக..! ஆண்ட வன்மையின் வழியைத் தருக..தருக..! மலராக மணப்பவனே! என் தீய வினையை எரித்துவிடு. உன்னைப் போற்றிப் பாடிட ஆழ்வார்களுக்கு அளித்த தமிழ்ப்பாலை எனக்கும் ஊட்டுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
27.10.2019

1 commentaire:

  1. அருமையான பதிவு

    இனிய தீபாவளி வாழ்த்துகள்

    RépondreSupprimer