lundi 13 janvier 2014

மாதவ மங்கையர் - பகுதி 2


கவியரங்கம் 
மாதவ மங்கையர்

கண்ணகி, மாதவி, மணிமேகலை, கோப்பெரும்தேவி
[தலைமைக் கவிதை]

மாதவமே புரிந்தவர்கள் மாண்பு மிக்க
     மங்கையராய் மண்ணுலகில் பிறப்பார் என்பேன்!
பாதவமே புரிந்திட்ட ஞானச் செல்வன்
     பாரதியும் பாவையரின் உயர்வைச் சொன்னான்!
நாதவமே புரிந்திட்ட புதுவை வேந்தன்
     நங்கையரின் உரிமைகளை முழங்கி நின்றான்!
வா..தவமே என்றழைத்துப் பெண்ணை வாழ்த்தி
     வாழ்வதுவே தமிழர்களின் தொன்மை மாட்சி!

ஈசனவன் தன்னுடலில் பாதி ஈந்தே
     இவ்வுலகில் பெண்ணுரிமை காத்தான்! சீனி
வாசனவன் வஞ்சியினை மார்பில் சூடி
     வளங்கொழிக்கும் செல்வத்தைப் பெற்றான்! கண்ண
தாசனவன் கன்னியரைப் பாடிப் பாடித்
     தண்டமிழை மணந்திடவே வைத்தான்! காதல்
நேசனவன் என்றென்னை உலகம் போற்ற
     நினைந்துருகிப் பெண்மணக்கும் நூல்கள் செய்தேன்!

பேசுகின்ற மொழிதன்னை, வாழும் மண்ணைப்
     பெற்றெடுத்த தாயாகத் தமிழன் கண்டான்!
வீசுகின்ற தென்றலினைச், விரிநீர் ஆற்றை
     விண்ணிலவைப் பெண்ணாக உவமை செய்தான்!
பூசுகின்ற புனைகின்ற கலைகள் யாவும்
     பொலிகின்ற கலைமகளின் அருளே என்றான்!
தேசுகின்ற நல்லகத்தைப் பெற்ற பெண்ணை
     தெய்வத்தின் உருவாக வணங்க வேண்டும்!

பெண்ணைப்போல் பெருந்தக்க எதுவும் இல்லை
     பேராசான் வள்ளுவனார் புனைந்த வாக்கு!
மண்ணைப்போல் தாங்குகின்ற மாண்பைப் பெற்ற
     மங்கையினால் இல்வாழ்வு மணக்கும் நன்றே!
விண்ணைப்போல் விரிசெல்வம் பெற்ற போதும்
     வியனரசி இல்லையெனில் பயனும் உண்டோ?
கண்ணைப்போல் மனைமாட்சி காக்க மாதைக்
     கருணையொளிர் கடவுளென வணங்கு கின்றேன்!

பெண்கொண்ட பெருமையினை எண்ணிப் பார்க்கப்
     பேருலகின் எல்லையினைத் தாண்டிச் செல்லும்!
கண்கொண்ட இமையாக வாழ்வைக் காத்துக்
     கமழ்கின்ற பெண்மையினைப் போற்ற வேண்டும்!
பண்கொண்ட இனிமையினை வாழ்வில் சூடும்
     பாவையினைப் பெற்றவர்கள் புகழே காண்பார்!
மண்கொண்ட வாசத்தை உயிராய்க் காக்கும்
     மாதவத்து மங்கையரை வணங்கு கின்றேன்!

தொடரும்


9 commentaires:

  1. வணக்கம் !
    பெண்மையைப் போற்றும் சிறந்த வரிகளைக் கண்டு உள்ளம்
    பூரித்து நின்றேன் ! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்
    அனைவருக்கும் என் இனிய தைப் பொங்கல் +புத்தாண்டு
    வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer
  2. பெண் பெருமை பேசுகின்ற பெருந்தகையே
    பொன் பொருளை பேசவில்லை அருந்தவமே.
    மிக்க மகிழ்ச்சி....!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய
    பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.....!

    RépondreSupprimer
  3. வணக்கம் ஐயா
    சிறப்பான வரிகள். பெண்மையைப் போற்றும் நல்ல உள்ளத்திலிருந்து பிறந்து வந்துள்ள கவிதை ரசிக்கும்படியும் சிந்திக்கும்படியும் இருப்பது சிறப்பு.
    --------
    தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    RépondreSupprimer
  4. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  5. எப்போதும் பெண்களைத் தப்பாது வாழ்த்துரைக்கும் தாங்கள் இப்போதும் சிறப்பாக இனிய நாளில் சொல்வது பொங்கல் நாளில் சிறப்பானதாய் இருக்கிறது.வாழ்த்துக்கள்.
    தங்களுக்கும் தங்களின் குடும்பத்திற்கும் ,கம்பன் கழகத்திற்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  6. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer

  7. பண்கொண்ட இனிமையினை வாழ்வில் சூடும்
    பாவையினைப் பெற்றவர்கள் புகழே காண்பார்!
    மண்கொண்ட வாசத்தை உயிராய்க் காக்கும்
    மாதவத்து மங்கையரை வணங்கு கின்றேன்!
    பெருமை பொங்கும் வரிகள்..
    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  8. பொங்கலின் இனிப்பை மிஞ்சினும் திகட்டாத
    அருமையான கவிதை
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer