lundi 6 avril 2026

விருத்த மேடை - 104

 

விருத்த மேடை  - 104

 

அறுசீர் விருத்தம்

[குறிலீற்றுமா+கூவிளம்+மா+விளம்+விளம்+மா]

 
பொருவ னார்புரி நுாலர்

…… புணர்முலை உமையவ ளோடு

மருவ னார்மரு வார்பால்

…… வருவது மில்லைநம் மடிகள்

திருவ னார்பணிந் தேத்தும்

…… திகழ்திரு வாஞ்சியத் துறையும்

ஒருவ னார்அடி யாரை

…… ஊழ்வினை நலியவொட் டாரே!

 

[சுந்தரர் தேவாரம் - 7995]

 

வாக்கை விற்றிடும் மக்கள்!

…… வந்திடும் நடிகர்பின் கூட்டம்!

நாக்கை நன்முதல் ஆக்கி

…… நரியெனச் சுற்றிடும் தலைவர்!

காக்கைக் கூட்டினில் குயில்போல்

…… கட்சியில் கூட்டுறும் சூதர்!

போக்கை யெண்ணியே வாடிப்

…… புனைந்துள பாப்பயன் தருமோ?

 

[பாட்டரசர்] 10.04.2026

 

முதல் சீர் குறிலீற்றுமா, இரண்டாம் சீர் கூவிளம், மூன்றாம் சீரும் ஆறாம் சீரும் மா, நான்காம் சீரும் ஐந்தாம் சீரும் விளம் என ஓரடி அமையும். இவ்வமைப்பிலேயே நான்கடிகள் வரும். நான்கடிகள் ஓரெதுகை பெறும். ஒன்று நான்காம் சீர்கள் மோனையுறும். விளம் வரும் இடங்களில் மாங்காய் அருகி வருதலும் உண்டு.

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

dimanche 5 avril 2026

விருத்த மேடை - 103

 

விருத்த மேடை  - 103

 

அறுசீர் விருத்தம்

[முதல் நான்கு சீர்கள் வெண்டளை+மா+தேமா]

 
மறையின் மணந்தாரை வன்பரதர்

……… பாக்கத்து மடவார் செங்கை

இறைவளைகள் துாற்றுவதை ஏழையம்

……… எங்ஙனம்யாங்[கு] அறிகோம்? ஐய!

நிறைமதியும் மீனும் எனஅன்னம்

……… நீள்புன்னை அரும்பிப் பூத்த

பொறைமலிபூங் கொம்பேற வண்டாம்பல்

……… ஊதும் புகாரே எம்மூர்!

 

[சிலப்பதிகாரம், கானல் வரி - 29]

 

கல்வித் தகத்தால் திரைசூழ்

……… கடற்காழிக் கவுணி சீரார்

நல்வித் தகத்தால் இனிதுணரும்

……… ஞானசம் பந்தன் எண்ணும்

சொல்வித் தகத்தால் இறைவன்

……… திருநா ஏத்து பாடல்

வல்வித் தகத்தான் மொழிவார்

……… பழியில்இம் மண்ணின் மேலே!

 

[திருஞானசம்பந்தர் தேவாரம் - 2255]

 

பெருமை

 

பெண்ணின் பெருமையைப் பேணிப் புகழ்ந்திடப்

……… பெருகும் சீரே!

மண்ணின் பெருமையை வாழ்த்தி மகிழ்ந்திட

……… மணக்கும் தாரே!

எண்ணின் பெருமையை ஏத்தித் தெளிந்திட

……… ஏந்தும் ஊரே!

பண்ணின் பெருமையைப் பாடிக் களித்திடப்

……… படரும் பேரே!

 

[பாட்டரசர்] 10.04.2026

 

முதல் நான்கு சீர்கள் வெண்டளையில் அமையும். ஐந்தாம் சீர் மாச்சீர் ஆகும். ஆறாம் சீர் தேமாவாகும். இவ்வமைப்பிலேயே நான்கடிகள் வரும். நான்கடிகள் ஓரெதுகை பெறும். ஒன்று ஐந்தாம் சீர்கள் மோனையுறும்.  

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

10.04.2026

samedi 4 avril 2026

விருத்த மேடை - 102

 

விருத்த மேடை  - 102

 

அறுசீர் விருத்தம்

[மா+மா+மா+மா+விளம்+கூவிளங்காய்]

 
பேரார் மதமா உரிவை போர்த்துப்

…… பொடியணி மேனியனாய்க்

காரார் கடலின் நஞ்சம் உண்ட

…… கண்ணுதல் விண்ணவனுார்

பாரார் வைகைப் புனல்வாய்ப் பரப்பிப்

…… பண்மணி பொன்கொழித்துச்

சீரார் வாரி சேர நின்ற

…… தென்திருப் பூவணமே

 

[திருஞானசம்பந்தர் தேவாரம் - 690]

 

நான் பிறந்த நகர்

 

நேராம் பாதை நெஞ்சைக் கவரும்

…… நிறையெழில் பூத்தொளிரும்!

சீராம் தமிழைச் சிந்தைக் கூட்டில்

…… சிறப்புறக் காத்தொளிரும்!

கூராம் அறிவால் கொள்ளை தீட்டிக்

…… குணநலங் கோத்தொளிரும்!

காராம் மழைபோல் கவிதை பொழியும்

…… கனித்தமிழ் நற்புதுவை!

 

[பாட்டரசர்] 04.04.2026

 

இந்த அறுசீர் விருத்தம் மா+மா+மா+மா+விளம்+கூவிளங்காய் என்ற சீரமைப்பை ஓரடியாகக் கொண்டது. இவ்வமைப்பிலேயே நான்கடிகள் அமைந்திருக்க வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.

 

ஆறாம் சீர் கூவிளங்காய் வரும் இடத்தில் புளிமாங்காய்ச் சீரும், தேமாந்தண்பூச் சீரும் எங்கோ ஓரிடம் வருதலும் உண்டு. [எழுத்து எண்ணிக்கையில் கூவிளங்காய்போன்று ஒற்று நீக்கி நான்கு எழுத்துக்களைப் புளிமாங்காயும் தேமாந்தண்பூவும் பெற்றுள்ளன]

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

04.04.2026