dimanche 12 octobre 2025

கம்பன் விழா 2025

 

இருபத்து நான்காம் ஆண்டு
பிரான்சு கம்பன் விழாப் பாட்டரங்கம்


தமிழ் வணக்கம்

 

மனமோங்கு தமிழே..உன் இனமோங்கு கவிபாட

          மலர்ஊறும் தேனள்ளி யூட்டு - உன்

          மடியேந்தி மகனைத்தா லாட்டு!

மதியோங்கு தமிழே..உன் நதியோங்கு கவிபாட

          மத்தாப்பு வண்ணங்கள் காட்டு! - பொன்

          மகரத்து யாழ்கொண்டு மீட்டு!

 

தினமோங்கு தமிழே..உன் திணையோங்கு கவிபாடச்

          தித்திக்கும் வித்தள்ளிக் கூட்டு! - மின்னும்

          சிங்கார அணியள்ளிச் சூட்டு!

சீரோங்கு தமிழே..உன் பேரோங்கு கவிபாடச்

          சிந்தைக்குள் சந்தத்தைக் கூட்டு! - தான

          தந்தான தாளங்கள் போட்டு!

 

வனமோங்கு தமிழே..உன் வளமோங்கு கவிபாட

          மானாக மயிலாகத் தீட்டு! - இந்த

          மன்றத்துள் இன்பத்தை மூட்டு!

மகிழ்வோங்கு தமிழே..உன் அகமோங்கு கவிபாட

          வார்த்தைக்குள் இன்பத்தை நீட்டு! - பெரு

          மலையாகப் புகழள்ளி நாட்டு!

 

பனியோங்கு தமிழே..உன் கனியோங்கு கவிபாடப்

          படர்கின்ற வண்ணத்தைத் தீட்டு! - வருக

          பறந்தோடி என்சொல்லைக் கேட்டு!

பாட்டுக்கே அரசாக்கி நாட்டுக்கே உரமாக்கிப்

          பாசத்தால் என்னைச்பா ராட்டு! -  தாயே

          பணிகின்றேன் உன்னைச்..சீ ராட்டு!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

28.10.2025

samedi 13 septembre 2025

கம்பன் விழா

 


கம்பன் கழகம் பிரான்சு

24 ஆம் ஆண்டுத்

தெய்வமாக்கவி 

கம்பன் விழா


இடம்:

Le Gymnase Victor Hugo

rue  Auguste Renoir

95140 Garges les Gonesse

France


நாள்:

28/09/2025
ஞாயிறு 15.00 மணிமுதல் 20.30 மணிவரை

அனைவரும் வருகவே! அருந்தமிழ் பருகவே!

 

jeudi 11 septembre 2025

ஓரொலி வெண்டுறை



ஓரொலி வெண்டுறை
 
அரசியலார்!
 

ஊழல் முதலைகளை உளமாரப் பாடி உவக்கும் புலவர்

சூழல் அனைத்தையும் சுருட்டுகின்ற தலைவ தம்மால்

ஏழை  துயர்நீங்க எள்ளளவும் வழியுண்டோ?

 

பூட்டியுள வீட்டைப் பொறிக்கிகள் தாம்கொண்டு சொந்த மாக்கி

நாட்டியுள சொத்து நாலிரு தலைமுறைக்கு வருமே! இவர்கள்

நாட்டிலுள வஞ்ச நரியெனச் சாற்றுகவே!

 

அடியாள் கொண்டாச்சி நடத்துவதா? அன்பின்றிக் கூர்மைக் கத்தி

தடியால் கொண்டாச்சி தள்ளுவதா? துடிதுடிக்க அழிவே நல்கும்

வெடியால் கொண்டாச்சி  மிரட்டுவதா? என்னாடே!

 

தலைவனின் இருதாள்கள் தழுவி நக்குகின்ற தொண்டன் தானே
கொலையனின் மிகுகொடியன்! கொள்ளை யிடுகின்ற கள்ளன்! பதவி
விலையனின் அடிவேரை வெட்டி வீழ்த்துகவே!


கால்நக்கிப் பதவி பெறுகின்ற கட்சித் தலைவன்! பத்தி

வேல்நக்கிப் பதவி பெறுகின்ற வெற்றுத் தொண்டன்! பணத்தில்

மேல்நக்கிப் பதவி விளைகின்ற என்னாடே!

 

மாடேயிலா நிலைமைக்கும்,  மனையேயிலா வீட்டுக்கும்

கடன்தருவார்! விளையும்

காடேயிலா உழவுக்கும், கடையேயிலாத் தொழிலிக்கும் 

கடன்தருவார்! சின்ன

ஏடேயிலாக் கணக்கெழுதி ஏப்பமிடும் என்னாடே!

 

நாட்டுப்பணம் என்ன? நல்லோர் பணமென்ன? நம்பித் தந்த  

காட்டுப்பணம் என்ன? கண்ணீர்ப் பணமென்ன? ஆட்டை போட்டு

வீட்டுப்பணம் ஆக்கும் விந்தை நாடிதுவே! 

 
முன்னே ஈரடிகள் ஆறு சீர்களையும் பின்னோர் அடி நான்கு சீர்களையும் பெற்றுச் சிறப்பில்லா  ஏழு தளையாலும் வந்த ஓரொலி வெண்டுறை.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
பாவலர் பயிலரங்கம், பிரான்சு.
11.09.2025

mercredi 10 septembre 2025

ஓரொலி வெண்டுறை

 


ஓரொலி வெண்டுறை

 

அடிமை மனிதன்!

 

அயலார் மொழியைப் போற்றிடுவான்!

……….அல்லும் பகலும் கற்றிடுவான்!

உயிராம் தமிழை மறந்திடுவான்!

……….உலகில் தன்னைப் புகழ்ந்திடுவான்!

புயலார் கடலே பொங்கு!

 

மையூட்டு மங்கையரின்

……….மார்பூட்டு மின்பத்தில் மயங்குந் தலைவன்!

கையூட்டுஞ் செல்வத்துள்

……….கலையூட்டும் பெருமனையிற் களிக்குந் தலைவன்!

பையூட்டும் வாக்குகளைப் பார்!

 

வெள்ளை யாடை கொள்ளைக் கூட்டம் வேண்டித் தொழுது

பல்லைக் காட்டும்! பாடிப் போற்றும்! பாதப் பற்றுக்[கு]

எல்லை இல்லை இவர்க்கு!

 

மதவெறி நிறவெறி மண்ணை மாய்க்கும்! மனிதா உன்றன்

மதிவெறி மனவெறி வாழ்வை மாய்க்கும்! மனிதங் குன்ற

விதிவெறி பிடித்தெழும் மிரண்டு!

 

திரைத்துறையில் இருப்பவரை

……….மனத்திரையில் பதிக்கின்ற அடிமைப் போக்கும்

இறைத்துறையில் இருப்பவரை

……….இறைவனெத் துதிக்கின்ற  மடமைப் போக்கும்

நிறைதுறையில் ஒளிர்ந்திடுமா நிலம்?

 

வாக்கேயிடப் பணமேபெறும்

……….மதியில்லா மனிதர்காள்! வாதும் துாதும்

நாக்கேயிடத் தொழுதேயெழும்

……….நரம்பில்லா மனிதர்காள்! நாட்டில் உம்மைத்

துாக்கேயிட நினைத்தேன்தினம் தொடர்ந்து!

 

சாதியைத்தலை மேல்சுமந்திடும்

……….தந்நலத்து வாதிகளே! ஒன்று சொல்வேன்

நீதியைத்தலை மேல்சுமந்திடும்

……….நிலையுற்றால் வாழ்வோங்கும்! இல்லை சங்கம்

ஊதியேத்தலை மேல்நெருப்பிடும் உணர்!

 

முன்னே ஈரடிகள் ஆறு சீர்களையும் பின்னோர் அடி மூன்று சீர்களையும் பெற்றுச்  சிறப்புடைய ஏழு தளையாலும் வந்த ஓரொலி வெண்டுறை.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

10.09.2025