Pages

lundi 1 novembre 2021

வெண்பா மேடை - 214

 


வெண்பா மேடை - 214

 

சிவசிவ வெண்பா

 

விற்பிரம்பான் மன்னர்செயன் மேவவுல கெங்குநிறை

சிற்பரனே தெய்வஞ் சிவசிவா - பொற்பின்

அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

 

[சென்னமல்லையர் இயற்றிய சிவசிவ வெண்பா - 1]

 

அகரவுயிர்போல் அதிபகவனாகிய பரமசிவன்  உலகத்தில் பரந்தெங்கும் உள்ளன். வில்லாலும், பிரம்பாலும் அருச்சுனனும், பாண்டியனும் அடித்த அடி எங்கும் உற்றமையால்  விளங்கும்.

 

திருக்குறளைப் பின்னிரண்டடிகளில் வைத்து, முன்னிரண்டடிகளில்  அக்குறளுக்கு ஏற்ற விளக்கத்தை, வரலாற்றை, புராண இதிகாசக் கதையை வைத்த வெண்பா நுால்கள் தமிழில் தோன்றின. அவ்வகையில் அமைந்த நுால்கள் பதினான்கு என உ.வே.ச  அவர்கள் கணித்து எழுதியுள்ளார்.

1. சினேந்திர வெண்பா, 2. இரங்கேச வெண்பா, 3. தினகர வெண்பா, 4. வடமலை வெண்பா, 5. திருமலை வெண்பா, 6. முதுமொழிமேல் வைப்பு, 7. திருப்புல்லாணி மாலை, [கட்டளைக் கலித்துறை] 8. சோமேசர் முதுமொழி வெண்பா, 9. திருத்தொண்டர் மாலை, 10. வள்ளுவர் நேரிசை, 11. முருகேசர் முதுநெறி வெண்பா, 12. திருக்குறள் குமரேச வெண்பா, 13. சிவசிவ வெண்பா, 14. ஒவ்வொரு திருக்குறளை ஒவ்வொரு விருத்தத்தில் அமைத்து 1330 செய்யுட்களால் இயற்றப்பட்ட நுால் ஒன்று உள்ளது.

வென்று பகுத்தறிவால் வெண்தாடி வேந்தன்பின்
சென்று சிறந்தேன் சிவசிவா! - என்றும்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்[கு] அல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது

 

வண்ணாவில் கொண்டான்! வளருருவில் நீ..கொண்டாய்!

தெண்மார்பில் கொண்டான் சிவசிவா! - மண்ணுலகில்

பெண்ணின் பெருந்தக்க யாவுள? கற்பென்னும்

திண்மையுண் டாகப் பெறின்

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

 

பின்னிரண்டு அடிகளில் திருக்குறள்  நுாலிருந்து ஒரு குறள் அமையவேண்டும். முன்னிரண்டடிகளில்  அக்குறளுக்கு ஏற்ற விளக்கத்தையோ, வரலாற்றையோ, காப்பிய கதைகளையே கருவாக அமைய வேண்டும். இரண்டாம் அடியில் மூன்றாம் சீர் சிவசிவா என  அமைய வேண்டும்.

 

இவ்வகையில் அமைந்த 'சிவசிவ வெண்பா' ஒன்று எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம்  பிரான்சு

10.10.2021

Aucun commentaire:

Enregistrer un commentaire