Pages

lundi 20 avril 2020

கேட்டலும் கிளத்தலும்


கேட்டலும் கிளத்தலும்
  
பெரும்பான்மையாகச் சிந்தடிகளைப் பெற்றுவருவதால் சிந்துப்பா என்று பெயர்வந்ததா?
  
பாவலர் தென்றல், சென்னை
  
-----------------------------------------------------------------------------------------------------------------------
  
சிந்துப்பாவின் ஓரடி இரட்டை எண்ணிக்கைச் சீர்களைப் பெற்றுவரும். 8, 12, 16, 20, 24.... என ஓரடியில் சீர்கள் அமையும். 8 சீர்களுக்குக் குறைவாகச் சிந்தடி அமையாது.
  
இரண்டடி அளவொத்து வருவது சிந்து என வீரசோழியம் உரைக்கிறது.
  
மேவும் குறள், சிந்தொடு, திரிபாதி, வெண்பாத், திலதம்,
மேவும் விருத்தம், சவலை, என்றேழும் இனிஅவற்றுள்
தாவும் இலக்கணம் தப்பிடில் ஆங்கவை தம்பெயரால்
பாவும் நிலையுடைப் போலியும் என்றறி பத்தியமே.
[வீரசோழியம் யாப்பு 20]
  
எழுசீர் அடி இரண்டால் குறள்ஆகும், இரண்டு அடிஒத்து
அழிசீர் இலாதது சிந்தாம், அடிமூன்று தம்மில் ஒக்கில்
விழுசீர் இலாத திரிபாதி, நான்குஅடி மேவிவெண்பாத்
தொழுசீர் பதினைந்ததாய் நடுவே தனிச்சொல் வருமே.
[வீரசோழியம் யாப்பு 21]
  
2 அடி 7 சீராய் வருவது குறள்,
2 அடி அளவொத்து வருவது சிந்து,
3 அடி அளவொத்து வருவது திரிபாதி,
4 அடி 15 சீராய் நடுவே தனிச்சொல் பெற்று வருவது வெண்பா.
  
நெஞ்சு பெறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்!
அஞ்சியஞ்சிச் சாவார் - இவ[ர்]
அஞ்சாத பொருளில்லை அவனியி லே!
[மகாகவி பாரதியார்]
  
நொண்டிச் சிந்து என்னும் நாட்டுப்புறப் பாடல்வகையில் இது ஒரு கண்ணி. ஓரடியில் எட்டுச் சீர்கள் இருக்கும். 'நெஞ்சு' என்பது முதல் 'விட்டால்' என்பது வரையில் ஓரடி. 'அஞ்சி' என்பது முதல் 'அவனியிலே' என்பது வரை இரண்டாம் அடி. [ஒவ்வோர் அடியிலும் நான்கு உயிர்ச்சீர்கள் எட்டு வரும்] அளபெடுத்து 8 சீர்கள் ஓரடியில் உள்ளதைக் கீ்ழ் காண்க.
  
நெஞ்ஞ்சுபெ றுக்குதில்லை யேஎஎஎ எஎ-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட் டால்ல்ல்ல்!
அஞ்ஞ்சியஞ் சிஇச்சாஅ வாஅஅஅ அஅர் - இவ[ர்]
அஞ்ஞசாத பொருளில்லை அவனியி லேஎஎஎ!
  
நீட்டங்களை அளபெடைகளாக எழுதினால் எல்லா இடங்களிலும் எழுத்துக்கள் காணப்பட்டுப் பார்த்துப் பாடுவதற்குக் குழப்பமாக இருப்பதால், நீட்டங்களைப் புள்ளியாக எழுதும் முறையுண்டு.
  
நெஞ்.சுபெ றுக்குதில்லை யே... ..-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட் டால்...
அஞ்.சியஞ் சி.ச்சா. வா... ..ர்-இவ[ர்]
அஞ்.சாத பொருளில்லை அவனியி லே...
  
எனவே, சிந்து என்பது இரண்டு சமமான அடிகள் ஓர் எதுகை பெற்று வரும் பாடலாகும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் - பிரான்சு
தொல்காப்பியர் கழகம் - பிரான்சு
20.02.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire