Pages

dimanche 2 juin 2019

படமும் பாட்டும்


படமும் பாட்டும்
  
நெடியவனை நீள்விழியால் அளந்தாள்!
  
வன்னுரலில்
கட்டுண்டான் அன்று!
மென்விரலில்
கட்டுண்டான் இன்று!
  
தலைமை உற்றவன்!
மயக்கும்
தலை.. மை.. உற்றவன்!
  
மாலை மடக்க
மாலை தொடுத்தாள்!
  
கண்ணனின் கைகளைக்
கட்டினாள்!
கண்களை????
  
ஓங்கிய உத்தமனை
ஏங்கிய நேரிழையாள்
வீங்கிய நீள்விழியால்
அளக்கின்றாள்!
  
விழிகள் முட்டின!
நன்றே ஒட்டின!
கவிகள் கட்டின!
  
சீதையின் பார்வை
போதையை ஊட்டும்!
இராமனின் பார்வை
இளமையை வாட்டும்!
  
கண்கள் புரிந்தன
கமழ்..வாய் வினையை!
வாய்கள் புரிந்தன
கருங்கண் வினையை!
  
வில்லேந்தும் வீரன்
விழியேந்தி நிற்கின்றான்!
சொல்லேந்தும் கோதையிடம்
கொக்குமொழி கற்கின்றான்!
  
மலையழகு தோளழகு!
மலையழகு மார்பழகு!
வென்றது எதுவோ?
  
சிலையழகுச் செல்வன்
சிலையழகுச் செல்வி
கலையழகு கொண்டார்!
கவியழகு கண்டார்!
  
நடையழகை, கொடையழகை
வென்றன
இடையழகும்! தொடையழகும்!
  
யுத்தப் படையழகை
வென்றது
முத்தக் கொடையழகு!
  
காலழகு - ஆம்..ஆம்
உலகம் - இந்தக்
கன்னியின் முன்னே
கால் அழகு!
  
தாளழகு - ஆம்..ஆம்
உலகம் - இந்தக்
கண்ணனின் முன்னே
தாள் அழகு!
  
வில்லை வளைப்பான்
என்றோ - அழகாய்
விரைந்து வளைந்தாள்!
எல்லை கடப்பான்
என்றோ - சரத்தால்
இறுகப் பிணைந்தாள்!
  
அடி முடி அறியா
அண்ணல்! - பூங்
கொடியின் - கைப்
பிடிகள் அறிந்தனவே!
  
கொஞ்சும் தமிழால்
குழைத்த கவிதை!
விஞ்சும் காதலை
விளைக்கும்!
கற்போர் மனத்தை
வளைக்கும்!
  
பாட்டழசர் கி. பாரதிதாசன்
02.06.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire