Pages

mercredi 15 mai 2019

விருத்த மேடை - 37


விருத்த மேடை - 37
  
அறுசீர் விருத்தம் - 37
[விளம் + விளம் + விளம் + விளம் + மா + தேமா]
  
தந்தைதாய் மக்களே சுற்றமென்[று] உற்றவர்
      பற்றி நின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ பழியெனக்
      கருதி னாயேல்
அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய்
      ஆயன் ஆய
மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய்
      மருவு நெஞ்சே!
  
[பெரிய திருமொழி 9-7-1. திருமங்கையாழ்வார்]
  
பூமி இழந்திடேல் [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
நாட்டினைத் தாயினை நற்றமிழ் மொழியினை
      நன்றே காப்போம்!
ஏட்டினை எழுத்தினை எழில்தரும் எண்ணினை
      ஏற்றே ஆய்வோம்!
பாட்டினைப் பண்ணினைப் பாங்குறும் பண்பினைப்
      படைத்தே ஆள்வோம்!
வீட்டினை வெளியினை வியப்புறும் அழகினை
      விளைத்தே வாழ்வோம்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஓரடியில் முதல் நான்கு சீர்கள் விளச்சீர்களாகவும், ஐந்தாம் சீர் மாச்சீராகவும், ஆறாம் சீர் தேமாச்சீராகவும் வரவேண்டும். இவ்வாறு நான்கடிகளும் அமைய வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
       
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
15.05.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire