Pages

lundi 7 janvier 2019

சிலேடை வெண்பா


சிலேடை வெண்பா
  
கவிவாணரும் குரங்காட்டியும்
  
நுாலேந்திப் பாக்காப்பார்! நோக்கம் உரைத்திடுவார்!
கோலேந்தி வித்தை குவித்திடுவார்! - தோலேந்திச்
செல்வார்! நிலம்சுற்றிச் சீர்சேர்ப்பார்! பாவாணர்
கொள்வார் குரங்காட்டி கூத்து!
  
நுால் - படிக்கும் நுால், கயிறு.
பா - பாடல், கவி.
கவி - குரங்கு.
தோல் - உடம்பு, புகழ்.
  
கவிவாணர்
    
நுால்கள் படைத்துப் பாட்டுக்கலையைக் காத்திடுவார். மேடையில் நற்கருத்தை உரைத்திடுவார். எழுதுகோல் ஏந்திக் கவிதையில் வித்தை காட்டிடுவார். புகழேந்திச் செல்வார். பல இடங்களுக்குச் சென்று கவிபாடிப் பொருள் சேர்ப்பார்.
  
குரங்காட்டி
  
கயிறால் கட்டிக் குரங்கைக் காத்திடுவார். அது என்ன செய்ய வேண்டும் என்பதை நோக்கி உரைத்திடுவார். கோல் தட்டி வித்தைகளைக் காட்டிடுவார். குரங்கைத் துாக்கிச் செல்வார். ஊரைச் சுற்றிவந்து பொருள் சேர்ப்பார்.
  
எனவே, பாவாணரும் குரங்காட்டிபோல் செயல்களைக் கொண்டுள்ளார்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
06.01.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire