Pages

samedi 1 avril 2017

வஞ்சித்துறை - 3


கலைமகள்
வஞ்சித்துறை [தேமா + புளிமா]
  
1.
பூவில் இருந்தென்
பாவில் அமர்ந்தாய்!
கோவில் எனவென்
நாவில் அமர்ந்தாய்!
  
2.
வெள்ளை மலர்சேர்
கொள்ளை அழகே!
பிள்ளை மனஞ்சேர்
வள்ளை வளமே!
  
3.
தேடும் பொருளை
நாடும் உளத்துள்
பாடும் பொருளைச்
சூடும் அருளே!
  
4.
மீட்டும் இசையை
ஊட்டும் வடிவே!
பாட்டும் நடமும்
கூட்டும் ஒளியே!
  
5.
ஞானம் அளிக்கும்
மோனத் திருவே!
கானம் அளிக்கும்
வானத் தமுதே!
  
6.
ஓங்கும் தவத்துள்
தேங்கும் சுவையே!
ஏங்கும் எனையும்
தாங்கும் அறிவே!
  
7.
புற்கள் படரும்
கற்கள் சுடரும்
சொற்கள் பிறந்து
நற்கள் பொழியும்!
  
8.
எண்மை அளிப்பாய்!
ஒண்மை அளிப்பாய்!
தண்மை அளிப்பாய்!
வண்மை அளிப்பாய்!
  
9.
அண்மை இருந்து
நுண்மை கொடுப்பாய்!
உண்மை சிறக்கும்
திண்மை கொடுப்பாய்!
  
10.
நன்மை வடிக்கும்
தன்மை அளிப்பாய்!
தொன்மைத் தமிழால்
வன்மை அளிப்பாய்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

1 commentaire: