Pages

vendredi 31 mars 2017

வஞ்சித் துறை - 1



கண்ணன் காதல் [தேமா + தேமா]
  
கண்ணா! என்னை
நண்ணா[து] ஏனோ?
பெண்..நாச் சொல்லை
உண்ணா[து] ஏனோ?
  
கண்ணா! உன்னைக்
கண்..நா.. தேடும்!
பண்..நா இன்று
புண்ணாய் வாடும்!
  
மண்ணைக் கொண்டாய்!
விண்ணைக் கொண்டாய்!
கண்ணைக் காட்டிப்
பெண்ணை வென்றாய்!
  
விண்டல் ஓசை
கொண்டல் கோலம்
வெண்ணெய்த் தாழி
கொண்டேன் காதல்!
  
எண்ணம் உன்மேல்
திண்ணம் ஆகும்!
வண்ணம் ஓங்கி
அண்ணம் ஏங்கும்!
  
கண்..மை மீதும்
ஒண்மை கொண்டேன்!
வெண்மை மீதும்
வண்மை கண்டேன்!
  
எண்மை என்னுள்
உண்மைக் காதல்!
பெண்மை என்னுள்
நுண்மை மோதல்!
  
மண்டைக் குள்ளே
செண்டை யிட்டாய்!
தொண்டைக் குள்ளே
சண்டை யிட்டாய்!
  
மண்டும் ஏக்கம்
கிண்டும் நெஞ்சை!
அண்டும் ஆசை
அண்டம் கொள்ளா!
  
பண்டும் இன்றும்
தொண்டு செய்தேன்!
கண்டும் ஏனோ
விண்டே சென்றாய்?
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

Aucun commentaire:

Enregistrer un commentaire